புதன், 25 நவம்பர், 2009

கல்வியின் வெற்றியை தாய்மொழியே சாதிக்கும்!

ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் பிராந்திய மொழிகள் அதாவது அவரவர் தாய்மொழிகளையே பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் திறக்கப் பெற்றன. ஆங்கிலம், மொழிப் பாடமாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. ஆங்காங்கே ஆங்கிலேய குழந்தைகளுக்காக ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளும் இயங்கி வந்தன. தமிழகத்தில் வழக்கமான ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள் மட்டுமன்றி மாநிலம் முழுவதும், மாநிலப் பாடத்திட்டப்படியே, தனியார் ஆங்கில நர்சரிகளில் 5-ம் வகுப்பை நிறைவு செய்தவர்கள் படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆங்கில போதனாமுறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னாளில் மாநிலம் முழுவதும் 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒரு வகுப்புக்கு ஒரு பிரிவு மட்டும் ஆங்கில வழி போதனை என்று மாநிலக் கல்வித்துறையால் தொடங்கப்பட்டது. 1980-ல் 72 பள்ளிகளும், 1987-ல் 200 பள்ளிகளும், 1992-ல் 1000 பள்ளிகளும், இன்றோ 4000 பள்ளிகளுக்கு மேலாக அவை எண்ணிக்கையில் பெருகிவிட்டன. தமிழகத்தில் மலையாளம், உருது, தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களும், அவரவர் தாய்மொழியில் கல்வி கற்க ஏதுவாகக் கல்விக்கூடங்கள் தனித்தனியே முறைப்படுத்தப்பட்டன. ஆனால் அவர்கள் பெரிதும் அந்தப் பகுதி வட்டார மொழியும் பேச்சு மொழியுமான தமிழ் மொழியிலேயே கல்வி பயில விரும்பி, தமிழ் வழி பள்ளிகளிலேயே படிப்பைத் தொடர்ந்தனர். ஒருமுறை ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பில் (ஆங்கில வழி போதனை) காலாண்டுத்தேர்வில் மதிப்பெண் அட்டைகளை ஆசிரியர் வழங்கினார். வகுப்பில் மதிப்பெண்கள் 65-க்கு மேல் வாங்கிய 15 மாணவர்கள் முதல் தரத்திலும், 40 - 65-ல் சரிபாதிப்பேர் 25 மாணவர்கள் இரண்டாம் தரத்திலும், 40-க்குள் எஞ்சிய 8 அல்லது 10 பேர் மூன்றாம் தரத்திலும் இருந்தனர். மிகவும் குறைவாக மார்க் எடுத்தது பற்றி மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டபோது ""நல்லாதான் மனப்பாடம் செய்திருந்தேன் சார் தேர்வு எழுதும்போது மறந்துபோச்சு''. ""நல்லாதான் படிச்சேன் சார். பரீட்சையில் எழுத வர மாட்டேங்குது'' என்று ஒரே மாதிரி பதில்கள் தான் வந்தன. மார்க்குகள் மிகவும் குறைவாக எடுத்த ஒரு மாணவன் ஆங்கில வழியில் தொடர்ந்தால் 9-ம் வகுப்பில் தேறுவது கடினம் என்று எண்ணிய ஆசிரியர் அவனை தமிழ் வழி போதனை வகுப்புக்கு மாற்றம் செய்ய விரும்பினார். மாணவனின் தகப்பனார் இதற்கு மறுப்புச் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் தலைமை ஆசிரியரின் அனுமதியை நாடினார் ஆசிரியர். தலைமை ஆசிரியரும் இந்த மாற்றத்துக்கு அனுமதித்தார். ஒன்றாம் வகுப்பு முதலே ஆங்கில போதனா மொழியில் படித்து வந்த அம் மாணவன் இடையில் 9-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வுக்கு முன்னதாக தமிழ்வழி வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டான். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்து பிளஸ் டூவிலும் கணிதப் பிரிவில் அதே பள்ளியில் தமிழ் மீடியத்தில் சேர்ந்து படித்தான். பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்றுத் தகுதி அடிப்படையில் பி.இ. படிக்க இடம் கிடைத்து சென்னையில் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அம் மாணவனை முன்மாதிரியாகக் கொண்டு குறைவாக மார்க் பெற்றுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஒருசிலரிடம் தமிழ் வழிப் பிரிவுக்கு மாற்றிக் கொள்வது பையனின் படிப்பை எளிதாக்கும் என்ற யோசனையை ஆசிரியர் தெரிவித்து வந்தார். அவர்கள் ""தம் பிள்ளையும் மற்றவர்களின் பிள்ளைகளைப்போல உய்ஞ்ப்ண்ள்ட் ஙங்க்ண்ன்ம்-த்தில் படிக்கிறான்'' என்று சொல்வதையே கௌரவமாக நினைத்தார்கள். ஆசிரியரின் யோசனையை ஏற்கவில்லை. ஆங்கிலக் கல்வியாளர் ஏ.எஸ். நீல்ஸ் என்பவர் ""பிரச்னைக்குரிய நடத்தையுடைய குழந்தைகள் எவரும் இலர், இருப்பவர்கள் முரண்பாடுடைய பெற்றோர்கள் தாம்'' என்று கூறிய கூற்று மெய்யானதாக ஆசிரியருக்குத் தோன்றியது. இந்நிலையில் 35-க்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் பட்டியலில் ஒரு மாணவனின் தகப்பனார், முன்னேற்ற அட்டையில் கையொப்பமிட வந்தார். அவர் ஆசிரியரிடம் ""தான் ஒரு ஒப்பந்தக்காரரிடம் கூலி வேலை பார்த்து வருவதாகவும், ஆரம்பத்திலிருந்தே இவன் படிப்புச் செலவுக்கு என் சம்பளம் முழுவதையும் செலவழித்தேன் சார்'' என்றும் கூறினார். ""இப்ப பையனுக்கு நீண்ட நாள் வயிற்றுக் கோளாறு, சாப்பிட்ட உடன் மோஷன் போகிறான். மருத்துவம் பார்க்க வசதியில்லை. அதனால்தான் மார்க் குறைந்துவிட்டான்'' என்று தன் கவலையை ஆசிரியரிடம் வெளிப்படுத்தினார். பள்ளிக்கு எதிரில் ங.ஈ. படித்த டாக்டர் மருத்துவமனை நடத்தி வருகிறார். அந்த டாக்டர் இந்த ஆசிரியரின் முன்னாள் மாணவர். இந்நாள் மாணவருக்கு முன்னாள் மாணவர் செலவில்லாமல் சிறந்த மருத்துவ உதவி செய்தார். சிறுவன் நலம் பெற்றான். சிறுவனின் தகப்பனாரின் கவலை தீர்ந்தது. தாம்பெற்ற பிள்ளைகள் மறந்தாலும் தம்மிடம் படித்த பிள்ளைகள் மறவார் என்ற ஆசிரியரின் கருத்து சரியே. சிறுவனின் தந்தையிடம் ஆசிரியர், ""பையனை தமிழ் மீடியத்தில் படிக்கச் செய்தால் நன்கு படிப்பான்'' என்று ஆலோசனை கூறினார். ""இடையில் 9-ம் வகுப்பில் தமிழ் மீடியத்திற்கு மாற்றம் செய்தால் பிக்கப் பண்ண முடியுமா?' என்று தந்தை கேட்டார். ""நன்கு சுலபமாகப் படிக்க முடியும்'' என்று ஆசிரியர் உறுதியளிக்கவே தந்தையும் சம்மதம் தெரிவித்தார். அந்த மாணவனின் தமிழ் வழி வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டான். படிப்படியாக அவனும் நல்ல மார்க்குகள் பெற்று பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்விலும் நல்ல மார்க்குகளைப் பெற்றுவிட்டான். அதே பள்ளியில் பிளஸ் டூவில் தமிழ் மீடியத்திலேயே நல்ல மதிப்பெண்களைப் பெற்றான். கற்றலுக்கு வேண்டிய அடிப்படைச் சிந்தனைத் திறனில் தாய்மொழியில் படிப்போர் பின்தங்கியவர்கள் அல்ல. அதனால்தான் பொருள் புரிந்து தமிழ் மீடியத்தில் படிக்கும்போது மதிப்பெண்களை அவர்களால் அள்ள முடிந்தது. இதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனத்தில் கொள்வது அவசியம். ""தம் பிள்ளைகள் சாதாரண பள்ளியில் அல்ல, மெட்ரிகுலேஷன் பள்ளியில் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறார்கள்'' என்று சொல்வதை கௌரவம் தரும் சொல்லாக எண்ணிச் செலவழிக்கிறார்கள். பிள்ளைகளின் இயற்கை சுபாவங்களைக் கவனியாது, அவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்களே தடைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள். கல்வி என்பது ஓர் அனுபவமே. இந்த அனுபவம் சிந்தனையின் அடிப்படையில் எழுவதே ஆகும். குழந்தை சிந்திப்பதில் உள்ள வலு, ஆழம், உண்மை, தீவிரம் இவற்றைப் பொருத்து அமைவதே கற்றல் எனப்படும். குழந்தை சுயமாகச் சிந்தித்தல் தாய்மொழியில்தான் சாத்தியப்படும். அது அல்லாமல் ஆங்கில வழியில் மேற்கொள்ளப்படும் மனப்பாட முறையின் வழியாகப் பெறப்படும் மதிப்பெண்கள் முறைதான் உயர்வழிக் கல்வி, அதுவே கல்வி கற்றல் அல்லது கல்வி அடைவின் அளவுகோல் என்பது ஏற்புடையதாகாது. எனவே கற்பனைத்திறன், படைப்பாற்றல், புதியவை காணும் ஆற்றல், ஊக்கமுடைமை இவையாவும் தாய்மொழிக் கற்றல் மூலமே சாத்தியமும், வலிமையும் பெறும். ஆங்கில வழிக்கற்றலில் மதிப்பெண் குறைவாகப் பெறும் மாணவர்கள் படிக்கத் தகுதியற்றவர்கள், மந்த புத்தியுடையவர்கள், கல்வியில் பின்தங்கியவர்கள் என்று ஆசிரியர்கள் தவறான முத்திரையிட்டு அவர்களுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து விடுகின்றனர். பெற்றோர்களும் அன்றாடம் மனப்பாட சக்தி வழியே அதிக மதிப்பெண் வாங்கியவர்களோடு ஒப்பிட்டுப் பிள்ளைகளை வசைபாடுகின்றனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பின்பற்றும் இவை இரண்டும் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். ஏனெனில் மனப்பாடத்திறனே படிப்பு அல்லது அறிவு வளர்ச்சி என்பது தவறான அளவுகோலாகும். நம் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏபி.ஜெ. அப்துல் கலாம், ""தாம் 8-ம் வகுப்புவரை ராமேசுவரம் மீனவப் பள்ளியில் தமிழ்வழியிலேயே பாடங்களைப் பயின்றதால்தான் சுயமாகச் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானி ஆவதும் சாத்தியப்பட்டது'' என்கிறார். கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி ""அறிவியலும் தொழில்நுட்பமும் மற்ற துறை அறிவும் தாய்மொழி மூலம் கற்றால்தான் அதன் பயனைப் பெற முடியும். 50 ஆண்டுகளுக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியில் நம்மை ஒத்த நிலையிலிருந்த அண்டைய நாடுகள் இன்று நம்மைவிட சற்று மேலாக வளர்ந்திருப்பதற்கு அவர்கள் தாய்மொழி வழியே கல்வி பயின்ற வலிமை ஒன்றுதான் அடிப்படைக் காரணம் '' என்று குறிப்பிடுகிறார். உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மட்டுமன்றி உலகின் எல்லா நாடுகளிலுமே பள்ளிகள் அளவில் அவரவர் தாய்மொழிகள் தான் பயிற்றுமொழியாக உள்ளன. ஆங்கிலம் அல்ல. எங்கும் ஆங்கிலம் நூலக மொழியாகவே உள்ளது. ஆங்கிலம் ஆங்கிலேயர் நாட்டில் மட்டுமே பள்ளிகளில் பயிற்றுமொழியாக உள்ளது. நம் இந்திய நாட்டிலும் தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் அவரவர் தாய்மொழிகள்தாம் பள்ளியில் பயிற்றுமொழியாக உள்ளன. இவ்வாறு நம் நாட்டில் பள்ளிக்கல்வியில் 67 பயிற்றுமொழிகள் (அவரவரது தாய்மொழிகள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நம் தமிழகத்தில் மட்டுமே தாய்மொழியாகிய தமிழை பள்ளிகளிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஆங்கில மொழிவழியே பாடங்களைக் கற்பிக்கிற அவலநிலை உருவாகியுள்ளது. இது எந்த ஒரு மனிதகுலமும் எங்குமே கண்டிராத விநோதம் ஆகும். இந்த உலகமகா விநோதம் சிறார்களுக்கு ஆங்கில வழியே கற்பித்தல் என்ற பெயரில் சிறார் கல்வியை வணிகமாக்கிப் பணம் சேர்க்கும் நோக்குடைய ஒருசிலரால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்தப் பயிற்றுமொழி சிக்கலால் பாதிக்கப்படுவது குழந்தைகளும், மாணவர்களுமே. மேற்படி வணிகமயமாக்கலுக்கு எதிராக சமச்சீர் கல்வியின் ஓர் அம்சமான அண்மைபள்ளி (அ) அருகாமைப்பள்ளி முறை, முறையாகச் செயல்படுத்தப்பட்டால் அன்றாடம் படும் அவஸ்தையிலிருந்து சிறார்களும், வேன், ஆட்டோ, பேருந்துக் கட்டணம் மற்றும் தனியார் பள்ளிகளில் விதிக்கப்படும் ரசீது இல்லாத கட்டணங்களிலிருந்து பெற்றோர்களும் விடுவிக்கப்படுகின்றனர். எனவே இந்த அண்மைப்பள்ளி முறை பெற்றோர்களால் பெரிதும் விரும்பி ஏற்கப்படும். இந்த சமச்சீர் கல்வி நடைமுறைக்கு சகல வல்லமையும் சாதுர்யமும் மிக்க மெட்ரிக் பள்ளியினுடைய தாளாளர்களும், முதல்வர்களும் இளைய தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு நல்கி அவர்களுடைய கல்விப் பணியைத் தொடர வேண்டுமென்று தமிழகம் எதிர்பார்க்கிறது.

கருத்துகள் இல்லை: