ஞாயிறு, 29 நவம்பர், 2009

வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்!


இலங்கை நிகழ்வுகள் குறித்து தான் எழுதாத கருத்துகளுக்கு வைகோ பதில் அளித்திருப்பதை முதல்வர் கருணாநிதி கண்டித்துள்ளார்.
விவேகம் இல்லாவிட்டால் வீரத்தால் பலன் ஏற்படாது என்ற கருத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு நாடகத்தில் தான் எழுதியிருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை வருமாறு:

வார இதழ் ஒன்றில் வந்துள்ள பேட்டியில், ‘இத்தனை ஆயிரம் பேர் ஈழத்தில் இறந்தது பிரபாகரனால் ஏற்பட்டது. நான் மௌனமாக அழுவது யாருக்கு தெரியும்?’ என்கிறாரே கருணாநிதி? என்ற கேள்வி கேட்கப்பட்டு பதில் சொல்லப்பட்டிருக்கிறதே? ‘இத்தனை ஆயிரம் பேர் இறந்தது பிரபாகரனால்’ என்று நான் எழுதவே இல்லை. நான் எழுதாததை எழுதியதாக ஒரு கேள்வியை கேட்க செய்து, அதற்கு என்னை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளது. நான் எழுதியதை மறைத்துவிட்டு கற்பனையாக அந்த இதழின் சிறப்பு செய்தியாளர் கேள்வி கேட்டு, அப்படி நான் எழுதினேனா என்பதை தெரிந்து கொள்ளாமல் ஒருவர் என்னை தாக்கி பதில் சொல்லியிருப்பது என் மீது வசை பாடுவதற்காக இருவரும் சேர்ந்து ஜோடித்த நாடகம்.

‘சகோதர யுத்தம் நடத்தியதால்தான் பிரபாகரன் தோல்வி அடைந்ததாக கருணாநிதி சொல்கிறாரே?’ என்றும் ஒரு கேள்வி கேட்கப்பட்டு அதற்கும் உங்களை தாக்கி பதில் கூறப்பட்டுள்ளதே? பிரபாகரன் தோல்வி அடைந்ததாக நான் சொல்லவில்லை. சகோதர யுத்தம் காரணமாக நாம் பாதிக்கப்பட்டோம் என்று சொல்லியிருக்கிறேன். அதில் என்ன தவறு என்று தெரியவில்லை. ‘மாவீரன் மாத்தையா’ என்று ஒரு துரோகியை நீங்கள் அழைத்து விட்டதாக அந்த இதழுக்கு பேட்டி அளித்தவர் சொல்கிறாரே? மாத்தையாவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே அவர்தான். ‘மாவீரன் மாத்தையா’ என்றுதான் அறிமுகம் செய்துவைத்தார்.

‘வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு விவேகத்தை பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொன்னதெல்லாம் அலட்சியப் படுத்தப்பட்டது என்று வேதனைப் படுகிறாரே கருணாநிதி?’ என்ற கேள்விக்கும் பதில் அளித்தவர் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு உங்களை தாக்கி இருக்கிறாரே? அது நான் எழுதிய கருத்துதான். அதில் என்ன தவறு? வீரத்தை பயன்படுத்திய அளவுக்கு என்று நான் கூறியிருப்பதில் இருந்தே, அவர்களின் வீரத்தைப் பாராட்டியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், கண்ணை மூடிக்கொண்டு நம்மை தாக்க வேண்டும் என்ற வெறி கொண்டவர்களுக்கு அப்படித்தான் பதிலளிக்க தோன்றும். வீரம் விவேகம் பற்றி நான் இப்போது கூறவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ‘சாக்ரடீஸ்’ ஓரங்க நாடகத்திலேயே ‘வீரம் விலை போகாது, விவேகம் துணைக்கு வராவிட்டால்! தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே! இதோ நான் தரும் ஆயுதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்! அறிவாயுதம்! அறிவாயுதம்!’ என எழுதியிருக்கிறேன்.

அந்த வசனத்தை பல மேடைகளில் பேசிக் காட்டியவர் இப்போது இழித்துரைக்கிறார். எனக்கு இன்னும் அந்த பேச்சுதான் நினைவில் நிற்கிறது.
ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக இரண்டு பேரை கைது செய்து, ஒருவரை விடுதலை செய்து விட்டு, தன் மீது மட்டும் வழக்கு போட்டிருப்பதாக உங்கள் மீது குற்றம் சொல்கிறாரே? ஒரே நிகழ்ச்சியில் பேசியதற்காக கைது செய்யப்பட்டாலும், இருவரும் என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை அறிந்து, தவறாக பேசாதவரை வழக்கிலிருந்து விடுவித்து விட்டு, தவறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுப்பது முறைதானே? இதில் சட்டத்தை வளைப்பதற்கு என்ன இருக்கிறது? சண்டித்தனமாக பேசி விட்டு, பிறகு எதற்காக புலம்ப வேண்டும்? ‘பிரபாகரனால்தான் இவ்வளவு கஷ்டங்கள் வந்தது என்று கருணாநிதி சொல்கிறார் என்றால், அவர் சிங்கள அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிவிட்டதையே காட்டுகிறது’ என்று பேட்டியாளர் சாடியிருக்கிறாரே? அப்படி நான் கூறவில்லை.

24ம் தேதி எழுதிய ஒரு பதிலில்கூட ‘விடுதலைப் போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரை பொழிகின்றன. அதே நேரம் இளந்தலைவர் ராஜீவ் காந்தியும், அமிர்தலிங்கமும், யோகேஸ்வரனும், முகுந்தனும், சிறீ சபாரத்னமும், பத்மநாபாவும் கொல்லப்பட்டபோது அவர்களை இழந்த மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் கண்ணீர் பெருக்கியபோது அவர்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா?’ என்று எழுதினேன். இலங்கைத் தமிழர்களுக்காகத்தான் நான் கண்ணீர் வடிக்கிறேன். அதில் புலிகளும் இருக்கிறார்கள், அவர்களின் ஆதரவாளர்களும் இருக்கிறார்கள், எந்த போராளிக் குழுவிலும் சேராத அப்பாவிகளும் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை.
புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை நினைத்து மௌனமாக குதூகலித்தவர் நீங்கள் என்று சொல்லியிருக்கிறாரே?

மனசாட்சியை விற்று விட்டவர்கள் அப்படித்தான் கூறுவார்கள். ஈழ தமிழருக்காக 1956 முதல் குரல் கொடுத்தவன் நான். அவர்களுக்காக சிறை சென்றவன். நான் சிறைபட்டதற்காக பல இளைஞர்கள் தீ வைத்துக் கொண்டு தங்கள் இன்னுயிரை போக்கிக் கொண்டார்கள். சட்டமன்ற உறுப்பினர் பதவியை நானும் பேராசிரியரும் இலங்கை தமிழருக்காக ராஜினாமா செய்தோம். புலிகளுக்கு உதவியதாக காரணம் கூறப்பட்டு எனது ஆட்சியே கலைக்கப்பட்டது & ஒருமுறை அல்ல, இரண்டு முறை. விடுதலை புலிகளுக்கும் நிதி வசூலித்து கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர்கள் வாங்கிக் கொள்ளவில்லை. இன்னும் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். ஆனால் புலிகளின் தலைவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இவர் நேற்றுகூட சந்தித் திருக்கிறார். புலிகளை பற்றி ஜெயலலிதா பேசாத பேச்சா? அவரின் இனிய சகோதரர் இவர். இவர் கூறுகிறார், புலிகளுக்கு தோல்வி ஏற்பட்டதை கண்டு நான் குதூகலித்ததாக!

தமிழ்ச் செல்வன் மறைந்தபோது நான் கண்ணீர் கவிதை எழுதினேன். அதனை கண்டித்து அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. சந்திரஹாசனையும், பாலசிங்கத்தையும், சத்யேந்திராவையும் தமிழக காவல்துறை கைது செய்து நாடு கடத்தியபோது, அதை நிறுத்தாவிட்டால் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்று தி.மு.க. அறிவித்து போராட்டம் நடத்தியது. அதன் காரணமாக நாடு கடத்தும் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அப்படிப்பட்ட என்னைப் பார்த்து நான் புலிகள் படுகின்ற துன்பத்தை கண்டு மகிழ்ச்சி அடைவதாக பேட்டி கொடுக்கிறார்.

அந்த வார இதழும் அதை வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறது. ஒரு வகையில் எனக்கோர் மகிழ்ச்சி. நாம் பிரிவினை கேட்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே & திராவிட நாடு திராவிடருக்கே!’ என முழங்கியபோது, ‘எலி வளை எலிகளுக்கே’ என்று கேலிச் சித்திரம் வரைந்து நம்மை கேலி செய்த ஏடு அது. அந்த காலம் மாறி, இன்று எலிகள் அல்ல புலிகள் என்று ஏற்றுக்கொண்டிருப்பது & அதுவும் தமிழ் ஈழம் கேட்கிற அளவுக்கு மாறியிருப்பது மகத்தான மாறுதல். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

1 கருத்து:

அஹோரி சொன்னது…

அவுருக்கு எவனாவது சுருக்கெழுத்து கத்து குடுத்தால் தேவலாம் , இம்சை தாங்க முடியல ... எதுக்கெடுத்தாலும் அம்பது பக்கத்துல ஒரு அறிக்கை.