கண்ணதாசன்: மலரும் நினைவுகள்  

Posted by அபுல் பசர் in ,

 
காட்டுக்கு ராஜா சிங்கம்,கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. " நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்.
     
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல," அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்,வர்ணிக்கப்பட்டதைப் படிபதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்" என்பது அவரே அளித்த விளக்கம்.பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
    
சிறுவயதில் இன்னொரு குடும்பத்துக்கு  7,000 ரூபாயிக்கு  தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன்.அந்த வீட்டில் அவர் பெயர்:நாராயணன் 
  
"கலங்காதிரு மனமே,உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " 
என்று "கன்னியின் காதலியில்"எழுதியது கண்ணதாசனின் முதல் பாட்டு.
மூன்றாம் பிறையில் வந்த " கண்ணே கலைமானே " கவிஞரின் கடைசிப் பாட்டு.
     
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார்.திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள் மின்னும்.திடீரென்று காணாமல் போய்விடும்.
காரணம் கேட்டால் " பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கிறது " என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை சொல்வார்.
    
மைலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல்,அபிராமபுரம் கவிதா ஹோட்டல்,இரண்டும் கவிஞருக்குப் பிடித்தஇடங்கள.பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான்.வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
    
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு  அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும்.கவிதை வரிகள் சொல்லுபோது செருப்பு அணிய மாட்டார்.
    
கொஞ்சம் மது அருந்திவிட்டால்,என் சிந்தனைகள் சுருசுருப்படைவது வழக்கம்.அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
   
"முத்தான முத்தல்லவோ " பாட்டைத்தான் மிக குறைவான நேரத்தில் 
(10 நிமிடத்தில் ) எழுதி முடித்தார்.அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது " நெஞ்சம் மறப்பதில்லை ... அது நினைவை இழப்பதில்லை "  என்ற பாடல்தான்.
    
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல் " திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே  ஸ்ரீமன் நாராயணா". தனக்குப் பிடித்த பாடல்களாக " என்னடா பொல்லாத வாழ்க்கை", " சம்சாரம் என்பது வீணை " ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
    
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்ப ராமாயணம்.நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான் என்பார்.
    
காமராஜர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார்.
சில காட்சிகளையும் எடுத்தார்.ஆனால் முற்றுப்பெறவில்லை.
      
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால்,சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்றிருக்கிறார்.
பிற்காலத்தில் " பராசக்தி, ரத்தத்திலகம்,கறுப்புப் பணம்,சூரியகாந்தி " உள்ளிட்ட படங்களில் நடித்துக் இருக்கிறார்.
      
முதல் மனைவி பெயர் பொன்னம்மா.அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள். 50-வது  வயதில் வள்ளியம்மையை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர்தான் " விசாலி ".மொத்தம்  15 பிள்ளைகள்.
      
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர்.வெளி நாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய்,அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கி விட்டுத்தான் செல்வார்.
      
கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி,வீடு தேடித் பலரும் அழுது கூடிவிட,பிறகு இவரே முன்னாள் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
       
உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: புத்தகங்களைப் பின்பற்றுங்கள்,அதன் ஆசிரியரை பின்ப்பற்றாதீர்கள்.
      
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுய வரலாறு எழுதியவர். " வனவாசம்,மனவாசம், இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் என்றார்.
      
காமராஜர்,அண்ணா,எம்.ஜி.ஆர்,கருணாநிதி, ஆகிய நான்குப் பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும்,திட்டியவரும் இவரே. ஈ.வெ.கி.சம்பத்,ஜெயகாந்தன், சோ,பழ.நெடுமாறன்,ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள்.கவிஞரின் தோரனையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும் எனப்பார் ஜெயகாந்தன்.
      
திருமகள்,திரையொலி,மேதாவி, சண்டமாருதம்,ஆகியவை இவர் வேலைப் பார்த்த பத்திரிகைகள்."தென்றல்,தென்றல் திரை,முல்லை,கடிதம் 
கண்ணதாசன்",ஆகியவை இவரே நடத்தியவை.
      
திருக்கொச்றியூர் (Thirukostiyur) தொகுதியில் முதல் தடவை தேர்தலில் நின்றார்.தோற்றார்.அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.இது எனக்கு சரிவராது என்றார்.
     
"குடிப்பதும்,தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும்,ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர,அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை" என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
    
" பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைபோலச் செலவழித்து,பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைத்தான் என்னுடையது"என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
     
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்.
     
அச்சம் என்பது மடமையடா,சரவணப் பொய்கையில் நீராடி, மலர்ந்தும் 
மலராத,....போனால் போகட்டும் போடா,கொடிஅசைந்ததும் காற்று வந்ததா, உன்னை சொல்லிக்  குற்றமில்லை, கடவுள் மனிதனாக பிறக்க  வேண்டும், எங்கிருந்தாலும் வாழ்க,அதோ அந்தப்  பறவைப்போல வாழ வேண்டும்,சட்டி சுட்டதடா,கை விட்டதடா, ஆகிய  10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியப் பாடல்கள்.
     
        இறப்புக்கு 11  ஆண்டுகள் முன்பே தனக்குத்தானே இரங்கற்பா                             எழுதிவைத்துக்கொண்டார்.அதன் கடைசி வரி இப்படி முடியும் 
    " ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் 
      அவன் பாட்டை எழுந்து பாடு "!
     

நன்றி:
விகடன்


வரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 6)  

Posted by அபுல் பசர் in ,

  
6 பேர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீது சைதாப்பேட்டை 2,வது ஜூடிசியல்  மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் 26.1.1988 அன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த குற்றப்பத்திரிகை 1,100 பக்கம் கொண்டதாக இருந்தது. ஆட்டோ சங்கர் உள்பட 10 பேர் மீதும் இ.பி.கோ.  320 பி (சதி செய்தல்), 147 (கூட்டமாக சேர்ந்து கல வரம் செய்தல்), 148 (பயங்கர ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்), 364 (கொலை செய்வதற்கு ஆட்களை கடத்துதல்), 302 (கொலை), 201 (கொலைகளுக்கான சாட்சியங்களை மறைத்தல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
 
28.10.1987 அன்று சுடலைவும், 8.1.1988 அன்று லலிதாவையும், 15.3.1988 அன்று ரவியும், 29.5.1988 அன்று சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரும் கொலை செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
பின்னர் இந்த வழக்கு செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி மோகன்தாஸ் வழக்கை விசாரித்தார். முதலாவதாக அப்ரூவர் பாபு சாட்சியம் அளித்தார். அதைத்தொடர்ந்து 9 மாஜிஸ்திரேட்டுகள், 5 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் உள்பட மொத்தம் 134 பேர் சாட்சியம் அளித்தனர்.
 
சினிமா நடிகை புவனி மற்றும் விபசார அழகிகள் அனிதா, கவிதா ஆகியோரும் இந்த வழக்கில் சாட்சியம் அளித்தனர். அரசு தரப்பில் வக்கீல்கள் கம்பம் சுப்பிரமணியம், எஸ். கோபாலகிருஷ்ணன், பால்ராஜ் ஆகியோர் வாதாடினார்கள். ஆட்டோ சங்கர் தரப்பில் வக்கீல் நடராஜன், அவருக்கு உதவியாக கணேஷ், மனோகர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இந்த வழக்கில் 31.5.1991 அன்று தீர்ப்பு கூறப்பட்டது.
 
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், செல்வராஜ் ஆகியோர் தலைமறைவாக இருந்ததால் அவர்கள் மீதான வழக்கு விசாரணை தனியாகப் பிரித்து நடைபெற்றது. எனவே, ஆட்டோ சங்கர் உள் பட 8 பேரும் கை விலங்கு மாட்டி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
தீர்ப்பு கூறும் முன் அவர்களிடம் நீதிபதி, "உங்கள் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன. நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அதற்கு ஆட்டோ சங்கர், "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று பதில் அளித்தான். மற்றவர்களும் அதையே கூறினார்கள்.
 
அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரிடமும் "நாங்கள் குற்றவாளிகள் அல்ல" என்று எழுதப்பட்டிருந்த ஒரு வெள்ளை காகிதத்தில் கையெழுத்து வாங்கப்பட்டது. 10:49 மணிக்கு நீதிபதி எழுந்து அவரது அறைக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் குற்றவாளிகளின் அங்க அடையாளங்களை கோர்ட்டு ஊழியர்கள் சரிபார்த்து குறித்துக்கொண்டனர்.
 
பகல் 11:45 மணிக்கு நீதிபதி மீண்டும் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தார். ஒரே நிமிடத்தில் அதாவது 11:46 மணிக்கு தனது தீர்ப்பை கூறிவிட்டு உடனடியாக அவரது அறைக்கு சென்றுவிட்டார். "ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன். சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு தூக்கு தண்டனை அளிக்கிறேன். இவர்களை அழைத்துக்கொண்டு போகலாம்" என்று மட்டுமே நீதிபதி கூறினார்.
 
அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் மீண்டும் கைகளில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆட்டோ சங்கர் கோர்ட்டுக்கு வரும்போது சிரித்தபடியே வந்தான். பத்திரிகை நிருபர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் தெரிவித்துக்கொண்டான். போட்டோ கிராபர்களுக்கு சிரித்தபடியே போஸ் கொடுத்தான்.
 
கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டபின் ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளை பார்த்து சிரித்துக்கொண்டான். அவனது முகத்தில் எந்தவித கவலையும் தெரியவில்லை. ஆட்டோ சங்கரின் தாய் ஜெயலட்சுமி கோர்ட்டுக்கு வந்திருந்தார். நீலநிற தோல் பையை தோளில் தொங்க விட்டிருந்த அவர்  ஆட்டோ சங்கரைப் பார்த்து கண்ணீர் விட்டார். வேனில் ஏறி ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்ட போது, ஆட்டோ சங்கர் தனது தாயைப் பார்த்து கை அசைத்தபடியே சென்றான். நீதிபதி தமது தீர்ப்பை 238 பக்கங்களில் எழுதியிருந்தார்.  தீர்ப்பின் முக்கிய பகுதிகள் வருமாறு:-
 
"எதிரிகள் 8 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருக்கின்றன.
 
இம்மாதிரி கொலைகளை செய்தவர்களுக்கு தக்கபடி தண்டனை அளித்தால்தான் நீதியின் நலன் விளங்கும். இல்லையேல் அக்கிரமங்கள் ஆனந்த கூத்தாடும். அநியாயங்கள் தலைவிரித்தாடும். இப்படியே சென்றால் நாடு நாடாக இருக்காது. நாடு காடாகிவிடும்.
 
அவர்களுக்கு தக்க தண்டனை அளிக்காவிட்டால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், காவல் துறையின் மீதும் நம்பிக்கையே இல்லாமல் போய்விடும்.
 
நாடு அமைதியான சூழ்நிலையில் இருக்கவேண்டுமானால் இம்மாதிரியான கொலை செய்தவர்களுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்.
 
அவ்வாறு தக்க தண்டனை அளித்தால்தான் இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும். இந்த எதிரிகளின் கொலையை பார்க்கும்போது தனக்கு எதிராக இருக்கும் நபர்களை அடியோடு அதாவது வேரோடு அழித்து அவர்களை இல்லாமல் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
 
சட்டத்தை தன் கையிலேயே எடுத்துக்கொண்டு "சட்டம் என் கையில்" என்று இவர்களே ஒரு தனி கூட்டமைப்பு அமைத்து அவர்களுக்கு எதிரானவர்களை பழி வாங்கி இருக்கும் கொலையை பார்க்கும்போது அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அளிப்பதுதான் நீதியின் நலனுக்கு உகந்தது.
 
அவ்வாறு தண்டனை அளித்தால்தான் நாட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகும். அனைவரும் அமைதியுடன் வாழ வழி ஏற்படும்.
 
எனவே, நீதியின் நலன் கருதியும், வழக்கின் தன்மையை கருதியும் சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை அளிக்கிறேன்.எதிரிகள் ஜெயவேலு, ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவம் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறேன்.
 
எதிரிகள் சங்கர், எல்டின், சிவாஜி மூவரும் சாகும் வரை தூக்கில் தொங்கவிடப்பட வேண்டும். இவர்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மரணதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தினரால் உறுதி செய்யப்படவேண்டும். 30 நாட்களுக்குள் மேல் முறையீடு (அப்பீல்) செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
 
இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.
 
தண்டனை பெற்ற 8 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.


2009-ம் ஆண்டு உலக பொருளாதாரம் ஒரு பார்வை !  

Posted by அபுல் பசர் in ,

 

* உலக பணக்காரர்கள் பட்டியலில் உருக்கு ஆலை அதிபர் லட்சுமி மிட்டலை பின்னுக் குத் தள்ளி முன்னேறியுள்ளார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி. இந்திய பணக் காரர்கள் பட்டியலில் தற்போது முதலிடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியரும் உருக்கு அதிபருமான லட்சுமி மிட்டல் அடுத்த இடத்துக்குத் தள்ளப் பட்டார். அமெரிக்காவிலிருந்து வெளி யாகும் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இது தெரிய வந்துள்ளது.

* இந்தியாவில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எ வேல்யூ செர்வ் என்ற ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியா தனியார் பங்கு முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் உள்ள ஏழு நாடுகளில் ஒன்றாக உள்ளது.

* கெல்லி சர்வீசஸ் நிறுவனம் உலகம் முழுவதும் ஊழியர்கள் எந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஓர் சர்வே நடத்தியது. அதில் பல சுவாரஸ்ய மான தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 28 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவில் மிக மகிழ்ச்சியான ஊழியர்கள் ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்தியா-துபை இடையிலான வர்த்தகம் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.45,000 கோடியாக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டில் இந்தியா- துபை இடையிலான வர்த்தகம் ரூ.12,000 கோடியாக இருந்தது. இது 6 ஆண்டுகளில் 340 சதவிகிதம் உயர்ந்து ரூ.45,000 கோடியாக அதிகரித்துள்ளது.

* உலக கோடீஸ்வரர்கள் பட்டியலைத் தொடர்ந்து உலகிலுள்ள பிரம்மாண்ட மான தொழிற்சாலைகள் பட்டியலை போர்பஸ் இதழ் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2000 ஆலைகள் இதில் இடம் பெற் றுள்ளன. அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த 48 தொழிற்சாலைகள் இடம் பெற்றுள்ளன.

* இந்தியாவில், காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டு உச்சவரம்பு தற்போது 26 சதவீதமாக உள்ளது. இது விரை வில் 49 சதவீதமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய காப்பீட்டு நிறுவனங்களின் செயல்திறனில் அதிவேக முன்னேற்றம் ஏற்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

* சர்வதேச நிதி நெருக்கடியால் வெளிநாட்டினர் பலர் சிக்கனம் கருதி இந்திய நகரங்களில் வசிக்க ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களது பட்டியலில் சென்னை, டெல்லி மும்பை, ஐதராபாத், பெங்களூரு, புனே, கொல்கத்தா ஆகிய ஏழு நகரங்கள் முன்னணி வகிக்கின்றன. இந்த விவரங்களை இசிஏ இண்டர்நேஷனல் என்ற மனிதவள ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

* கடந்த ஆண்டில் சொத்து மதிப்பின் அடிப்படையில் உலக அளவில் வலிமையான 1000 வங்கிகளை “தி பாங்க்கர்’ என்ற பத்திரிகை தர வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பட்டி யலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜே.பி. மார்கன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டில் நான்காவது இடத்தில் இருந்தது.

* உலகின் மிகக்குறைந்த விலை மதிப்பில் தயாரான டாடாவின் நானோ கார்கள் முதல் இந்தியச் சாலைகளில் தனது பயணத்தைத் துவங்கியது. முதல் காரை தனது வாடிக்கை யாளருக்கு ரத்தன் டாடாவே நேரில் வழங்கி விற்பனையைத் தொடங்கி வைத் தார்.

* அமெரிக்காவின் வர்த்தக இதழான பார்ச் சூன், உலக அளவில் விரைவாக வளரும் நிறுவனங்களின் பட்டியலை வெளியிட் டுள்ளது. இந்த பட்டியலில். பிளாக்பெர்ரி போன் தயாரிக்கும் கனடாவின் ரிசர்ச் இன் மோசன் முதல் இடம் பிடித்துள்ளது

* உலகிலேயே அதிக சம்பளம் பெறும் முதல் 25 பேரில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ள னர். அமெரிக்க இதழான பார்ச்சூன் வெளி யிட்ட இந்தப் பட்டியலில் மோட்டரோலா நிறுவன இணை தலைமை அதிகாரி சஞ்சய் ஜா ரூ.500 கோடி சம்பளத்துடன் 2-வது இடத்திலும், ரூ.183 கோடி சம்பளத்துடன் சிட்டி குழுமத் தலைமை அதிகாரி விக்ரம் பண்டிட் 14-வது இடத்திலும், ரூ.146 கோடி சம்பளத்துடன் ஹார்மன் இண்டர் நேஷனல் நிறுவன துணைத் தலைவர் தினேஷ் பாலிவல் 25-வது இடத்திலும் உள்ளனர்.

* உலகின் தலைசிறந்த ஐந்து நிர்வாகிகளின் பட்டியலை ஹார்வார்டு பல்கலைகழ கத்தின் ஹார்வார்டு பிசினஸ் ரிவ்யூ இதழ் தயாரித்துள்ளது. முதல் நான்கு இடங்களில் ஆப்பிள் நிறுவன நிர்வாகிகள் உள்ளனர். டாப்-50 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி:
நக்கீரன்.


ஒரே மாத்திரை... ஓஹோன்னு வாழ்க்கை  

Posted by அபுல் பசர் in ,

 
  

நூறு ஆண்டுகள் வாழ இனி ஒரு மாத்திரை போதும் என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். நோய்களைத் தடுக்கும் 3 ஜீன்களை பயன்படுத்தி அந்த மாத்திரை தயா ரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதுபற்றி நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ கல்லூரியில் வயது தொடர்பான  ஆராய்ச்சி மையம் சார்பில் ஆராய்ச்சி நடந்தது. அந்த குழுவுக்கு விஞ்ஞானி நிர் பர்ஜிலய்  தலைமை வகித்தார். 

அவர்களது கண்டுபிடிப்பின்படி மனிதனின் வாழ்நாளை நீட்டிக்கவும்,  நோய்களைத் தடுக்கவும் 3 ஜீன்கள் உதவுவது தெரிய வந்தது.
அந்த மூன்றில் இரண்டு ஜீன்கள், உடலில் நல்ல கொலஸ்டிராலை உற்பத்தி செய்கின்றன.  இது இதய நோய்கள், பக்கவாதம், மூளை செயல்திறன் மாறுபாடு (அல்சமீர்) ஆகியவற்றைத்  தடுக்கிறது. 

3வது ஜீன், டயபடீசைத் தடுக்கிறது. ஜெர்மனியில் உள்ள யூதர்களில் 100 வய தைக் கடந்த சிலரிடம் நடந்த மரபணு ஆய்வில் இது தெரிய வந்தது.
அந்த ஜீன்களை உடலில் தூண்டச் செய்ய மாத்திரை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானி கள் தீவிரம் காட்டி வருகின்றனர். 

அதில் ஏறக்குறைய வெற்றி கிடைத்துள்ளதாக நிர் பர்ஜிலய்  தெரிவித்தார். இதே ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு ஆய்வகங்கள் ஈடுபட்டு வருவதாகவும்  அவர் கூறினார்.
 
இதய நோய், அல்சமீர், டயபடீஸ் ஆகியவற்றைத் தடுக்கும் ஜீன்களைத் தூண்டும் மாத்திரை  பயன்பாட்டுக்கு வந்தால் ‘ஒரே மாத்திரை... ஓஹோன்னு வாழ்க்கை’ என்பது உறுதியாகி விடும்  போலிருக்கிறது.


வைகோ : ஒரு சிறப்புப் பார்வை !  

Posted by அபுல் பசர் in ,

 




அரசியல் மேடைகளில் வைகோ உமிழும் ஒவ்வொரு வெப்ப வார்த்தையும் களத்தை கொதிகலனாகவே வைத்திருக்கும்.போர்வாள்,புரட்சிப்புயல்,என பளீர் பட்டங்களால் அடையாளம் காணப்படும் பிளாக் டைகர்.பொது வாழ்க்கையில் பம்பரமாகச் சுழன்று கொண்டு  இருப்பவரின் பெர்சனல் பக்கங்களில் இருந்து  இங்கே கொஞ்சம்.....

வை.கோபாலசாமி என பெற்றோர் வைத்த பெயரைத் தொண்டர்கள் சுருக்கி வைகோ என்று அழைக்க அதையே தனது பெயராக வைத்துக்கொண்டார்.அந்த காலத்தில் அவரது தாத்தாவை அனைவரும் " அகோ " என்பார்களாம்.

எட்டு வயதில்,காந்தியின் பேரன் கிருஸ்ணதாஸ் காந்தியின் முன்னால் பூமிதான இயக்கத்தை ஆதரித்து இவர் பேசியதுதான் முதல் மேடை பேச்சு.ஐந்தாம் வகுப்பு மாணவனாக எட்டையபுரம் பாரதி விழாவில் கலந்து கொண்டது முதல் போட்டி.

நெல்லை சவேரியார், சென்னை மாநில கல்லூரி,சட்ட கல்லூரியில் படித்த காலங்களில் அத்தனை பேச்சு போட்டிகளிலும் முதல் பரிசு இவருக்குதான்.இவருக்கு சளைக்காமல் சவால் கொடுத்தவர் " வலம்புரி ஜான் ".

மே 22 இவரது பிறந்த நாள்.ஆனால் சின்ன கொண்டாட்டம் கூட இருக்காது.அன்றைய தினத்தில் எங்கு இருக்கிறார் என்று குடும்பத்தினர் தவிர,யாருக்கும் தெரியாது !

இதுவரை, 28 முறை சிறை சென்றுள்ளதில்,நான்காண்டுகாலம் சிறையில் கழிந்திருக்கிறது.திராவிட இயக்க தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்தவர். சிறையில் எப்போதும் சிறப்பு வகுப்பு வாங்கிக்கொள்ள மாட்டார்.

பொடாவில் வைகோ கைதானதைக் கண்டித்து  1 கோடியே  10 லட்சம் பேர் கையெழுத்துப் போட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது போன்று இதுவரை வேறு எவரது கைதுக்கும் நடந்ததா என்பது சந்தேகம்தான்!

எந்த மேடைப்  பேச்சுக்கு முன்னரும் இரவு உணவை சாப்பிட மாட்டார். பசி இருந்தால்தான் பேச்சும்,குரலும்,சரியாக வரும் என்பார்.

சிவப்பு சட்டை,கறுப்பு பேன்ட் சீருடையுடன் தி.மு.க. வில் இப்போது வலம்வரும் தொண்டர் படையை அப்போது உருவாக்கியவர் வைகோ. " ஆயுத படையை உருவாக்குகிறார்" என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வைகோவையும்  300 தொண்டர்களையும் கைது செய்தார். இன்று ம.தி.மு.க-விலும் அப்படி ஒரு பெரும்படை இருக்கிறது.

கலிங்கப்பட்டி ஊராட்சித் தலைவராக வெற்றி பெற்றதற்காக கருப்பு,சிவப்பு, மோதிரம் ஒன்றை இவருக்கு அணிவித்தார்கள். எமெர்ஜென்சி காலத்தில் சிறை சென்ற போது மோதிரத்தை கழற்றச்  சொன்னார்கள். அதன் பிறகு 40 ஆண்டுகளாக வைகோ மோதிரம் அணிவதே இல்லை.

கருப்பையா மூப்பனார், இவர் மீது பாசமாக இருப்பார்.வைகோ வைத்திருக்கும் சூட்கேஸ் மூப்பனார் கொடுத்ததுதான்.வைகோவை காங்கிரசில் சேரச் சொல்லி ராஜீவ் காந்தி தூது அனுப்பியதும் மூப்பனாரைத்தான்.

விமான விபத்தில் சஞ்சய் காந்தி பலியான மறுநாள், நாடாளுமன்றத்தில் ராமகிருஷ்ண ஹெக்டே அவரை அவமானப் படுத்துவது போல பேசினார். உடனே வைகோ " இறந்தவர் குறித்து விமர்சிப்பது தவறு.சஞ்சய் காந்தியின் உடலைகூடப் பார்க்காமல் அவருடன் பலியான விமானி வீட்டுக்கு ஓடிபோய் அஞ்சலி செலுத்தியவர் இந்திரா.

ஆனால் பிரதமர் மொரார்ஜியைக் காப்பாற்றுவதற்காகப் பலியான ஐவர் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க உங்களில் ஒருவர்கூடச் செல்லவில்லை! என்று பதிலளித்தார்.அந்த பேச்சுதான் தலைநகரத்தில் வைகோ மீது பலரது கவனத்தை ஈர்த்தது.

தமிழீழத்துக்கு ரகசியமாகச் சென்று 23 நாட்கள் தங்கி இருந்திருக்கிறார்.அப்போது " உங்களது வாழ்க்கைக் கதையை நான் எழுதுகிறேன் " என்று வைகோ கேட்டுக் கொண்டதற்கு இணங்க, 15 நாட்கள் மனம்விட்டு பேசி இருக்கிறார் பிரபாகரன். அந்த குறிப்பும் கேசட்டும் இன்றும் வைகோவிடம் உள்ளது!

வைகோ திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி தர ஒப்புகொண்டு இருந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. திருமண நாள் அன்று அவருக்குத் திடீர் கண்வலி.கருணாநிதிக்குப் பதில் நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வைகோ திருமணம் நடைபெற்றது.

காலை 11  மணிக்கு வேகவைத்த காய்கறி, மதியம் 4 மணிக்கு, பயிறு வகைகள்  சாப்பிடுவது இவரது பழக்கம்.

அலெக்சாண்டர், நெப்போலியன்,உமர் முக்தார், சே குவேரா,கரிபால்டி,ஆகிய ஐவரும் வைகோ மிகவும் ஆராதிக்கும் மா வீரர்கள்.

தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ள இவரிடம் கடந்த  35 ஆண்டு கால டைரிகள் பத்திரமாக இருக்கின்றனவாம்.

கார் பயணங்களில் எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்கள்தான் ஒலிக்கும்.அவ்வப்பொழுது தியாகராஜ பகாவதர், பி.யு.சின்னப்பா பாடல்களும் அவரின் விருப்பமாகும்.

அசைவ உணவுகளின் ஏகப் பிரியர்.அம்மா மாரியம்மாள் வைக்கும் கோழிக் குழம்புக்கு ஆயுட்கால அடிமை.

வைகோ தோளில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட  கருப்பு சால்வையை முதலில் அணிவித்தவர் சங்கரன்கோயில் பிச்சையா.தன் மகள் திருமணத்திற்கு வந்தவருக்கு  1985 -ம் ஆண்டு கருப்பு சால்வை அணிவித்தார் பிச்சையா.ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புது சால்வை இன்றும் அனுப்ப்பிகொண்டு இருக்கிறார் பிச்சையா.

தமிழ்,ஆங்கிலத்தில் வெளியாகும் அனைத்து முக்கிய திரைப் படங்களையும் தியேட்டரில் பார்த்துவிடுவார். சமீபத்தில் இவர் பார்த்த படம் " அவதார் ".

குறிப்புகள் இல்லாமலேயே மணிக்கணக்கில் மேடையில் பேசும் வழக்கம்கொண்டவர். நா சுளுக்கும் கரடு முரடான சங்க இலக்கிய பாடல்களைக்கூட இரண்டு ,மூன்று,முறை வாசித்ததுமே அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பார்.

வைகோவின் அக்கா கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுபவர் என்பதால்,இவரது மேடைப் பேச்சில் சில சமயம் பைபிள் மேற்கோள் எட்டிபார்க்கும்.

வைகோவிற்கு வரும் கடிதங்களையும், அவர் அனுப்பும் கடிதங்களையும் பிரித்துப் படிப்பதற்கு சென்னைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வெளிப்படையான அரசாங்க உத்தரவே போட்டு இருந்தார் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

சமாதான  காலத்தில் ஈழத்துக்கு வர வைகோவிற்கு அழைப்பு வைத்தார்கள்.
" சுதந்திரத் தமிழ் ஈழத்துக்குத்தான்  இனி நான் வருவேன் "  என்று அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

வாலிபால்,பேஸ்கட்பால்,புட்பால் விளையாட்டுகளைப் பற்றி மணிக்கணக்கில் கூட பேசிக்கொண்டு இருப்பார். டி.வி-யிலும் நேரிலும் இந்தப் போட்டிகளைப் பார்ப்பதில் அலாதியான் ஆர்வம் கொண்டவர். 

நன்றி :
விகடன்.


Related Posts with Thumbnails

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்