செவ்வாய், 24 நவம்பர், 2009

வேலை வாய்ப்புக்கு உறுதி அளிக்கும் கல்வி முறை

ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வியைக் கல்லூரிகளில் நிறைவு செய்த பின்பு சில ஆயிரம் இளைஞர்கள் அரசுத் துறைகளிலும், தனியார்துறைகளிலும், சிலர் வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பைப் பெறுகின்றனர். அதேவேளையில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலையும் நிலையும் உள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் தமிழகப் பல்கலைக்கழகங்களிலிருந்து குறைந்தது 10 லட்சம் இளைஞர்கள் உயர்கல்வியை முடித்து வேலை தேடும் படலத்துக்குத் தயாராகவுள்ளனர். இதில் 10 சதவீத இளைஞர்களே வேலை வாய்ப்பைப் பெற முடிகிறது. ஆள்பலம், பணபலம் மற்றும் பின்புலம் உள்ளவர்களே இத்தகைய பணியைப் பெற முடிகிறது. வேலை வாய்ப்பைத் தேடி அலையும் இளைஞர் பட்டாளத்தின் தொகை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் உள்ள, 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 50 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காகத் தங்களின் பெயரைப் பதிவு செய்துள்ளனர் என அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலை வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வேலை வேட்டையை மிகுந்த வேட்கையுடன் நடத்தி ஓய்ந்து விடுவதையும், சிலர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் காண முடிகிறது. இதற்கு அரசே முழுப்பொறுப்பு என்று, அரசியல் கட்சிகள் போன்றே அரசின் மீது பழியைச் சுமத்திவிட்டுத் தப்பிக்காமல், சமூக அக்கறையுள்ள சமூகவியலாளர்கள் இப்பிரச்னையின்பால், தங்கள் கவனத்தைத் திருப்பினால் ஓரளவுக்கு இப்பிரச்னைக்கு விடியலை ஏற்படுத்த முடியும். பல துறைகளில் வளர்ந்து விட்ட சூழலிலும் நாம் இன்னும் எதற்கெடுத்தாலும் ஜப்பானையும், ரஷியாவையும் மேற்கோளாகக் காட்டிக் கொண்டு நம்மிடம் இருக்கும் அடையாளங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறோம். அவ்விதம் நம்மிடம் உள்ள அடையாளங்கள் என்ன? வாய்ப்புகள் என்ன? என்பதை அறிந்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. அவ்வாறு அடையாளம் கண்ட பின்பு அதை நடைமுறை சாத்தியமாக்கி நம் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் கொள்ளச் செய்தல் வேண்டும். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் வேண்டும் என்ற கோஷம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் காணவும், கேட்கவும் இயலுகிறது. குறிப்பாக நாடு முழுவதும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட பிறகு, தங்கள் நிறுவனங்களில் பயிலும் மாணவர்க்கு, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் பணியைச் சில தனியார் கல்லூரி நிறுவனங்கள் மேற்கொண்டு வேலை வாய்ப்புப் பிரிவை ஏற்படுத்தின. அதன் உள்நோக்கம் புதிதாகக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களைத் தங்கள் நிறுவனங்களில் சேருவதற்கான ஓர் ஈர்ப்பு முறையாக எண்ணியதே ஆகும். இதனால் தனியார் கல்வி நிலையங்களில் பயின்ற மாணவர்களில் சிலர் தனியார் ஐ.டி. தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற்று வருகின்றனர் என்பதும் உண்மை. ஆனால் இம் முறையினால் உயர்கல்வி பெறும் அனைவரும் வேலை வாய்ப்பைப் பெற முடிகிறதா என்றால் இல்லை என்ற விடையே நமக்குக் கிடைக்கும். ஆனால் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வியை முடித்தவுடன் தங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் அல்லது வேலை கிடைத்துவிடும் என்ற மேலோங்கிய உணர்வோடுதான் உள்ளனர். இது தவறு என்று கொள்ள முடியாது. காரணம் இதுதான் இன்றைய சமூகத் தேவை. அதற்குண்டான முதல் பணி நம் கல்வி முறையில் சிலமாற்றங்களைக் கொண்டு வருவது அவசியத் தேவையாகும். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரிகள் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய ஓராண்டு சான்றிதழ் படிப்புகளை வழங்கத் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை வாயிலாகத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 62 கலை அறிவியல் கல்லூரிகள், 53 பாலிடெக்னிக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு, அலுவலக மின்னாட்சி (ஆபீஸ் ஆட்டோமேஷன்) மற்றும் வலைத்தள வடிவமைப்பு (வெப்டிசைன்) உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளிக்கப்படும் கல்வி முறை உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும், கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்று ஆண்டு பட்டப்படிப்புகள் காலத்தேவை மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுவது அவசியம் என சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி. திருவாசகம் வெளியிட்டுள்ள கருத்தும், மாணவர்கள் தாங்கள் உயர்கல்வி பயிலுகின்ற போதே வேலைவாய்ப்புக் கல்வியையும் கற்று, கல்லூரியை விட்டு வெளியே வருகின்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும் அறிவிப்புகளாகும். இத்தகைய அறிவிப்புகளின் தொடர்ச்சியாக ஒரு கருத்தை இங்கே பதிவு செய்வது அவசியமாகிறது. உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பில் இறுதி ஆண்டு பயிலுகின்ற போதே தொழில் முனைவோர் என்ற பாடத்திட்டத்தை அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெறச் செய்து இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பாடமாக்கி, மாணவர்கள் அவர்கள் விரும்பும் தொழில் குறித்த தொழிற் பாடங்களைக் கற்கும் வகையில் பாடத்திட்டங்களும், அதற்குரிய வசதியும், வாய்ப்பும் உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய பாடத்திட்டங்களை உருவாக்குவதால் மட்டும் வேலை வாய்ப்புக் கிடைத்துவிடுமா என்ற கேள்வி எழக் கூடும். தொழில் முனைவோர் பயிற்சியின் வாயிலாக ஒரு மாணவர் உற்பத்திப் பொருள், உற்பத்தித்திறன், வணிகம், வணிகம் செய்வதற்கான களம், சந்தைப் பொருளாதாரம், திட்டம் உருவாக்கல், திட்டஅறிக்கை உருவாக்குதல், பொருள்களைத் தேர்வுசெய்தல், புதிய பொருள்களின் தேவையும் அதன் உற்பத்தியும், தொழில் நுட்பத் திறனைத் தேர்வு செய்வது, தொழிற்சாலை வசதிகள், தொழில் முனைவதற்கான நிதி ஆதாரம் வங்கிகள் மூலமும், வர்த்தக நிறுவனங்கள் மூலமும் கடன் பெறுவதற்கான வழிவகைகளை அறிவது, பெற்ற நிதி ஒழுங்காகச் செலவிடப்படுகிறதா என்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், நிதி அளவீடுகள், லாபத்தை அறிதல், வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்தும் முறை, தொழிலாளர் நிர்வாகம், தரநிர்ணயம், விற்பனை நிர்வாகம், இடைத்தரகர்களின் சூழ்ச்சியை எதிர்கொள்ளுதல், சந்தை வணிக யுக்திகள், விலையை நிர்ணயிக்கும் திறன், விற்பனை வரி, சுங்கவரி, மன அழுத்தம், ஆளுமைத்திறன் ஆகியவை குறித்து தெளிவான முறையிலும், விரிவான வகையிலும் பாடத்திட்டங்களை உருவாக்கி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகள் நேர்முறைப்பாடமாகவும், செயல்முறை விளக்கமாகவும், கருத்தரங்குகளாகவும் வரையறுக்கப்படவேண்டும். செயல்முறை விளக்கமும், கருத்தரங்குகளும் மாணவர், தான் என்ன தொழில் குறித்து தொழில் முனைவோர் பயிற்சியைப் பெற விரும்புகிறாரோ அது பற்றி விரிவான வகையில் அறிந்து கொள்ளப் பெரிதும் உதவும். அவர் சுய தொழிலைத் தொடங்குவதற்கான அடிப்படையான பொருள் குறித்தும், அதன் உற்பத்தி பற்றியும், பொருள் ஈட்டும் வழிவகைகள் குறித்தும் அறிந்து கொள்ள இத்தகைய செயல்முறைப் பயிற்சிகள் துணைநிற்கும். பயிற்சி முடியும் தருவாயில் பயிற்சியாளர்கள் நன்கு பயிற்சி பெற்ற தொழில் முனைவோர்களாகவும், விற்பனை உத்தி, விற்பனைத் தந்திரங்களை அறிந்து தங்களை ஒரு தொழில் முனைவோராய் உருவாக்கிக் கொள்ளவும் முடியும். மேலும் அவர்கள் வேலைத் தேடி அலையும் அவலத்திலிருந்து விடுபட்டு ஒரு சிறந்த தொழில் முனைவோராய் தன் உயர்கல்வியை முடித்து வெளியேறும் வாய்ப்பைப் பெறுவர். விரும்பி ஏற்கும் தொழிற்கல்வியின் மூலம், தாங்கள் ஏற்கப்போகும் தொழில் குறித்தும், அதன் மூலம் பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அதில் வரும் இடையூறுகளை ஆராய்ந்து, நீக்கவல்ல திறன் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும் பயிற்சி, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த வகையில் மாணவர்களைத் தயார்படுத்த சிறந்த ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் இனம் காணப்படவேண்டும். அவர்கள் சிறந்த முறையில் பாடத் திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் உருவாக்கித் தரவேண்டும். சிந்தனையின் வெளிப்பாடுதான் செயல்திட்டங்கள் என்ற வகையில் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், அனுபவமிக்க தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் ஆகியோரிடம் இது குறித்த சிந்தனைகளையும், கருத்துகளையும் கேட்டறிந்து அவர்களது பரிந்துரையின்படி பாடத்திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டின் முடிவில் பட்டத்துடன் வெளியே வருவதுடன் ஒரு தொழில் முனைவோராகவும், கல்லூரியை விட்டு வெளியே வரும் போது தன் வாழ்வில் தன்னம்பிக்கை கொண்ட மனிதனாய் வெளியேறுகிறோம் என்ற உணர்வையும், நிலையையும் உண்டாக்க வேண்டும். இந்த உணர்வே அவரை ஒரு தொழில் முனைவோராய் நிலைநிறுத்தும். புதிய தொழில் முனைவோரால் தொழில்கள் தொடங்கப்பட்டால் அந்தந்தப் பகுதிகளில் பிரசித்தி பெற்ற தொழில்கள் மேலும் நன்கு செழித்து வளர்கின்ற நிலை ஏற்படும். இதன் மூலம் வேலை தேடுவோரின் எண்ணிக்கை ஓரளவுக்குக் குறைவதற்கான வழிவகைகள் உண்டாகும் என்று நம்பலாம். எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், அனைவருக்கும் வேலை உண்டென்று சொல்லும் நிலை வரவேண்டும் என்ற சூழலை வளர்ந்து வரும் சமுதாயத்துக்கு உருவாக்கித் தரவேண்டியது இன்றைய அவசியத் தேவை. சமுதாயத்தின் இன்றைய இன்றியமையாத் தேவையை அறிந்து அதைப் பூர்த்தி செய்யும் வகையில் கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது மட்டுமன்று, அது காலத்தின் கட்டாயம். அதுவே சமூகத் தேடலை நிறைவு செய்யும் உண்மையான கல்வி முறையின் அடையாளம்.
நன்றி:
தினமணி

1 கருத்து:

venkat சொன்னது…

நல்ல பதிவு