வியாழன், 5 நவம்பர், 2009

இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா முயற்சி: பழ. நெடுமாறன்


சென்னை, அக். 4: இலங்கை போர்க் குற்றவாளிகளை காப்பாற்ற இந்தியா உதவி செய்வதாகக் கூறி, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், இதில் ராஜபட்சவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபட்சவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அமெரிக்காவில் இருக்கும் இலங்கை படைகளின் கூட்டுத் தளபதி சரத் பொன்சேகாவிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையைத் தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். இதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் தில்லியில் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல. மனித நேயமற்ற செயலும் ஆகும். ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது. இப்போதும் அதேபோல செயல்படுமானால், தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்று தெரிவித்துள்ளார் பழ. நெடுமாறன்

கருத்துகள் இல்லை: