செவ்வாய், 29 செப்டம்பர், 2009

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை



இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.



ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.



முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.



ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.



மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.



இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.



அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.



பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.



அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.



மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இயந்திரம்

உள்நாட்டில் உருவான கிரையோஜெனிக் இயந்திரம் விண்ணில் பறக்க தயார்
செப்டம்பர் 29,2009,00:00 IST

திருநெல்வெலி : இந்திய தொழில்நுட்பத்தில் உருவான கிரையோஜெனிக் எரிபொருள்இயந்திரத்தின் மூலம் வரும் டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி.,ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரி மலைப்பகுதியில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் "திரவ திட்ட இயக்க மையம்' உள்ளது.



ராக்கெட்டின் உந்து சக்தியாக விளங்கும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனை தளமாக மகேந்திரகிரி மையம் செயல்படுகிறது. இதற்கு முன்பு ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் கூடிய கிரையோஜெனிக் இயந்திரங்களை இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது. முதன்முறையாக இந்திய தொழில்நுட்பத்தில் கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மகேந்திரகிரியில் நடந்த இதற்கான சோதனைகள் வெற்றியடைந்துள்ளன. மையத்தை நேற்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பார்வையிட்டார். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.



பின்னர் அவர் கூறியதாவது: அதிக எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவுவதற்கு பயன்படும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்களை செலுத்த எடை குறைந்த திரவ எரிபொருளில் இயங்கும் கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுகிறது. முதன்முறையாக இந்திய தொழில்நுட்பத்திலேயே தயாரான கிரையோஜெனிக் இயந்திரம் வரும் டிசம்பரில் தகவல் பரிமாற்றத்திற்காக விண்ணில் செலுத்தப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி.,மார்க் 3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான கிரையோஜெனிக் பயன்பாட்டிற்கு வருவதில் பெருமிதம் கொள்வோம். சந்திரயான் 1 வெற்றியை தொடர்ந்து சந்திரயான் 2 விண்கலம் வரும் 2010ம் ஆண்டின் இறுதியிலோ 2013ம் ஆண்டில் துவக்கத்திலோ ஏவப்படும் என்றார்.

தமிழக அரசின் திரைப்பட விருது அறிவிப்பு

தமிழக அரசு விருது பட்டியல் : முழு விவரம்

தமிழக அரசு 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, "சிவாஜி' படத்துக்காக ரஜினிகாந்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது, "தசாவதாரம்' படத்துக்காக கமல்ஹாசனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, முதல்வர் கருணாநிதிக்கு (உளியின் ஓசை) அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின், 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்க, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரை அப்படியே ஏற்கப்பட்டு, விருது பெறுவோர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன் விவரம்:கடந்த 2007ம் ஆண்டுக்கான சிறந்த படம் முதல் பரிசு - சிவாஜி,இரண்டாம் பரிசு - மொழி,மூன்றாம் பரிசு - பள்ளிக்கூடம்,சிறப்புப் பரிசு - பெரியார்,பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்,குடும்ப நெறிகளை பிரதிபலிக்கிற படம் - தூவானம்சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி),சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி),சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு - சத்யராஜ் (பெரியார்),சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - பத்மபிரியா (மிருகம்),சிறந்த வில்லன் - சுமன் (சிவாஜி),சிறந்த நகைச்சுவை நடிகர் விவேக் (சிவாஜி),சிறந்த குணச்சித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி),சிறந்த குணச்சித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு),சிறந்த இயக்குனர் தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்)சிறந்த கதையாசிரியர் - வசந்த் (சத்தம் போடாதே),சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல்,சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி),சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து,சிறந்த பின்னணி பாடகர் - ஸ்ரீநிவாஸ்,சிறந்த பின்னணி பாடகி - சின்மயி,சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா),சிறந்த ஒலிப்பதிவாளர் - அய்யப்பன் (பில்லா),சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவாசிறந்த கலை இயக்குனர் - தோட்டா தரணி,சிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு,சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா,சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன்,சிறந்த தையல் கலைஞர் - அனுவர்தன்,சிறந்த பின்னணி குரல் - கே.பி.சேகர், மகாலட்சுமி2008ம் ஆண்டுக்கான சிறந்த படம் - முதல் பரிசு தசாவதாரம்,இரண்டாம் பரிசு - அபியும் நானும்,மூன்றாம் பரிசு - சந்தோஷ் சுப்பிரமணியம்,சிறப்புப் பரிசு - மெய்ப்பொருள்,பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ,குடும்ப நெறிகளை பிரதிபலிக்கும் படம் முதல் பரிசு - வல்லமை தாராயோ,இரண்டாம் பரிசு - வண்ணத்துப்பூச்சி,சிறந்த நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம்),சிறந்த நடிகை - சினேகா (பிரிவோம் சந்திப்போம்),சிறப்புப் பரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்),சிறந்த நடிகை சிறப்புப் பரிசு - த்ரிஷா (அபியும் நானும்),சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்),சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்),சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை),சிறந்த குணச்சித்திர நடிகர் - பிரகாஷ் ராஜ்,சிறந்த குணச்சித்திர நடிகை - பூஜா,சிறந்த இயக்குனர் - ராதா மோகன்,சிறந்த கதையாசிரியர் - தமிழ்ச்செல்வன்,சிறந்த உரையாடல் ஆசிரியர் - கருணாநிதி (உளியின் ஓசை),சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா,சிறந்த பாடலாசிரியர் - வாலி,சிறந்த பின்னணி பாடகர் - பெள்ளிராஜ்,சிறந்த பின்னணி பாடகி - மஹதி,சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் வில்சன்,சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி,சிறந்த எடிட்டர் - பிரவீன் - ஸ்ரீகாந்த்,சிறந்த கலை இயக்குனர் - ராஜீவன்,சிறந்த சண்டை பயிற்சியாளர் - கனல் கண்ணன்,சிறந்த நடன ஆசிரியர் - சிவசங்கர்,சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்),சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன்,சிறந்த குழந்தை நட்சத்திரம் - ஸ்ரீலட்சுமி,சிறந்த பின்னணி குரல் கொடுப்போர் - பிரகாஷ், சவீதா.இதைதவிர, 2006ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகளில், சிறந்த இயக்குனர் அன்பு, ஒளிப்பதிவாளர் தினேஷ், ஒலிப்பதிவாளர் ராம்குமார், எடிட்டர் சசிகுமார், படம் பதனிடுபவர் முருகன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டுக்கான விருதுகளில், இயக்குனர் கண்ணன், ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், ஒலிப்பதிவாளர் லட்சுமி நாராயணன், எடிட்டர் மர்பி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
.

திங்கள், 28 செப்டம்பர், 2009

இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம்


சென்னை, செப். 26: "இலங்கை முகாம்களில் மனிதப் பேரவலம் நடக்கிறது' என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர் வேதனை தெரிவித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் ஷான்டர், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து தமிழகத்தில் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதுடன், அவரது இந்தியப் பயணத்துக்கான விசா அனுமதியும் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம்... இந்நிலையில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் "இலங்கைத் தமிழர்' குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இக்கருத்தரங்கில் விடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் அமெரிக்காவில் இருந்து எலின் ஷான்டர் பேசியது: 1940-களில் போலந்து நாட்டில் சித்திரவதை முகாம்களில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்படி படுகொலையானவர்களில் என்னுடைய குடும்பத்தாரும் அடங்குவர். ஈழத்தமிழருக்கு எதிராக இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள், இலங்கையின் யூதர்கள் என்று அழைக்கலாம். அகதிகள் முகாமில் 10 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டனர். இப்போது தொடங்கிவிட்ட பருவ மழையால் அங்கு நிலைமை மோசமாகி இருக்கிறது. முகாம்களில் உள்ள 35 ஆயிரம் குழந்தைகளில், 1,800 பேர் பெற்றோரை இழந்து அனாதையாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் உதவி நிறுவனத்தை இலங்கை அரசு வெளியேற்றி விட்டது. அக் குழந்தைகளுக்கு யார் உதவி செய்ய இருக்கிறார்கள். கொசாவோ நகரில் மக்களை படுகொலை செய்த மிலோசெவிக், சூடான் பஷீர், லிபியா அதிபர் கடாபி ஆகியோர் போல இலங்கை அதிபர் ராஜபக்ஷவும் கொடுமையாக தமிழர்களை கொன்றுள்ளார். அவரை ஒரு போர் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும். உலகில் எந்த நாடும், ஈழத்தமிழருக்கு ஆதரவாக இல்லை. ஐக்கிய நாடுகள் சபை உதவ மறுக்கிறது. இப்போது தமிழக தமிழர்களும் உதவி செய்யாவிட்டால் யார் உதவி செய்வர்?. தமிழகத்தில் இருந்து 18 மைல் தொலைவில் தான் ஈழத்தமிழர்கள் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் நிறவெறி அரசுக்கு எதிராக உலக நாடுகள் பொருளாதாரப் புறக்கணிப்பு செய்தன. அதன் விளைவாக நிறவெறி அரசு வீழ்ந்தது. அதுபோல ராஜபக்ஷ அரசுக்கு எதிராக பொருளாதாரப் புறக்கணிப்பை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் பொருள்களை வாங்கக் கூடாது. அங்கு சுற்றுலா செல்லக் கூடாது. இலங்கையில் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலியில் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ளது வேறு எங்கும் நடக்காத மனிதப் பேரவலமாகும். 3 லட்சம் பேருக்கு முறையான தங்கும் வசதி கிடையாது. போதிய கழிப்பறை வசதி கிடையாது. வெறும் 500 கழிப்பறைகள் தான் உள்ளன. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் சிக்குன்-குன்யா, மலேரியா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி இறந்து வருகின்றனர். சிகிச்சை அளிக்கப் போதிய டாக்டர்கள் இல்லை. இலங்கை அரசின் போர் குற்றங்களுக்கு சர்வதேச சமூகம் தண்டனை வழங்க வேண்டும் என்றார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் இதில் பேசினர்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

அமெரிக்கா இந்தியா ஆட்டோ காதல்

காதலுக்கு கண் இல்லைன்னு தெரியும் ஆனால் கண்டம் கூட இல்லைன்னு இப்போதாங்க தெரிஞ்சிக்கிட்டேன்.என்னங்க ஒன்னும் புரியலையா? என்ன இவன் குழப்புறானேன்னு யோசிக்கிறீங்களா? சரி வாங்க அது என்னன்னு பார்ப்போம்.அதாவது காதலிக்கறதுக்கு அழகு,பணம்,பேரு,புகழ் இப்படி எதுவுமே தடையில்லைன்னு தெரியும்.அதனால்தான் காதலுக்கு கண் இல்லைன்னு சொல்றாங்கன்னு நான் நினைக்கிறேன்.ஆனால் சமீபத்துல ஜெய்ப்பூரில் நடந்த ஒரு கல்யாணத்துல கண்டம் கூட காதலுக்கு ஒரு தடையில்லைன்னு நிரூபிச்சு இருக்காங்க அமெரிக்க-இந்திய காதல் ஜோடியான விட்னி-ஹரிஷ்! என்ன ஆச்சரியமா இருக்கா? ஆமாங்க, உண்மைதான்! அந்த பொண்ணு அமெரிக்காவின் சிக்காகோகாரர், நம்ம பையன் இந்தியாவின் ஜெய்ப்பூர்க்காரர், ஆனா பிடிச்ச உடனே காதல சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அந்த ரெண்டு பேரும் இந்தியாவிலேயே!

அதாவது, விட்னி என்கிற ஒரு அமெரிக்கப் பெண் இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார்.இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க விரும்பிய அந்த பெண் ஒரு ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி சுற்றிப்பார்கிறார்.அந்தப் பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் ஹரிஷுக்கு பிடித்துப் போக, தேனீர் அருந்தலாமா என அழைகிறார் ஹரிஷ்.ஆனால் முதலில் மறுத்து விடுகிறார் விட்னி.பிறகு இரண்டாம் நாளும் ஜெய்ப்பூரை சுற்றிப்பார்க்க எண்ணிய விட்னி ஆட்டோ தேடுகிறார்.புது ஆட்டோவை வாடகைக்கு அமர்த்த விருப்பமில்லாத விட்னி, மீண்டும் ஹரிஷின் ஆட்டோவையே அமர்த்தி சுற்றிப்பார்கிறார். நிறைய இடங்கள் சுற்றிப்பார்க்க வேண்டி இருப்பதால் ஹரிஷின் ஆட்டோவை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வாடகைக்கு அமர்த்தி ஜெய்ப்பூரை வலம் வருகிறார் விட்னி.

ஆட்டோவில் ஒரு காதல் கதை!

இந்த மூன்று நாட்களும் ஜெய்ப்பூரில் அவர்கள் மட்டும் இடமாறவில்லை(சுற்றிப்பார்க்கத்தாங்க!) அவர்களின் இதயங்களும் இடமாறிவிடுகிறது! அதாங்க காதல்! வெறும் காதல் இல்லீங்க, கண்டம் இல்லாக் காதல்.அப்புறமென்ன, காதலன் காதலியை மணம் முடிக்க எண்ணி சம்மதம் கேட்கிறார்.விட்னியும் உடனே சம்மதம் தெரிவிக்க காதல் கல்யாணமாய் மலர்கிறது.விட்னிக்கு “இது புதுசு கண்ணா புதுசு”, நம்ம ஹரிஷுக்கும்தாங்க! இதுல விசேஷம் என்னன்னா, விட்னி தன் பெற்றோரிடம் சம்மதம் எதுவும் பெருசா வாங்கி கல்யாணம் செய்துகொள்ளவில்லை.பிறகு எப்படிங்கிறீங்களா? அதாவது, ஹரிஷை மணக்க எண்ணிய விட்னி, தன் தாயாரிடம் அலைபேசியில் சொல்ல, அவர் ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் சரியென்றிருக்கிறார்.தந்தையார் மட்டும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்.அடுத்த வாரம் அமெரிக்க பறக்கவிருக்கும் விட்னி, தன் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்து பின் இந்தியா திரும்புவதாக முடிவெடுத்து இருக்கிறார்.

அந்த கண்டம் தாண்டி கண்டம் வந்து கல்யாணம் செய்துகொண்ட விட்னியை நீங்க பார்க்க வேணாமா? அதற்கு, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் காணொளியை நீங்கள் பார்க்க வேண்டும்!

இதுதான் கண்டம் இல்லாக் காதல் போலிருக்கிறது! ம்ம்ம்…காலம் கெட்டுகெடக்கு மக்களே.சொடக்கு போடற நேரத்துக்குள்ள எடக்கு மடக்கா எது வேணும்னாலும் நடக்கும் போல இருக்கு.பார்த்து நடந்துக்குங்க!

வியாழன், 24 செப்டம்பர், 2009

வெள்ளை மாளிகையில் உயர் பதவியில் 9 இந்தியர்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒன்பது பேர், வெள்ளை மாளிகையில் பணியாற்றுவதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சிலர் ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை அலுவலக வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்:அமெரிக்க அதிபர் ஒபாமா நிர்வாகத்தில், சமூக மாறுதல் மற்றும் மக்கள் பங்களிப்பு துறையில் துணை உதவியாளராக பணியாற்றும் சோனல் ஷா என்பவர், ஆண்டுக்கு 60 லட்ச ரூபாயும், சிறப்பு திட்டங்களின் இயக்குனர்களாக இருக்கும் ரச்சனா பவுமிக் மற்றும் ஆதித்ய குமார் இருவரும் ஆண்டுக்கு 49.5 லட்ச ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.ஒபாமா நிர்வாகத்தில் பணியாற்றும், அனிஷா தாஸ் குப்தா மற்றும் பிரதீப் ராமமூர்த்தி ஆகிய இருவரும், ஆண்டுக்கு 43.4 லட்ச ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.இன்டர்கவர்மென்டல் மற்றும் பப்ளிக் என்கேஜ்மென்ட் துறை கொள்கைகள் வகுக்கும் அலுவலகத்தின் இயக்குனராக இருக்கும் கவிதா படேல், ஆண்டுக்கு 32.5 லட்ச ரூபாயும், வெள்ளை மாளிகை கவுன்சிலின் சிறப்பு உதவியாளராக இருக்கும் ஷோமிக் தத்தா, ஆண்டுக்கு 31 லட்ச ரூபாயும் சம்பளம் பெறுகின்றனர்.வெள்ளை மாளிகை கொள்கைகள் வகுக்கும் துறை ஆலோசகர் மானசி தேஷ்பாண்டே ஆண்டுக்கு 27 லட்ச ரூபாயும், தாரா ரங்கராஜன் என்பவர் ஆண்டுக்கு 20 லட்ச ரூபாயும் சம்பளம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

'ஓசியானா-சபாஷ் இந்தியா

ஓசியானா'வுடன் நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,
செப்டம்பர் 22,2009,00:00 IST

சென்னை : இந்திய கடல் ஆராய்ச்சிக்கான, "ஓசியானா' செயற்கைக்கோள் மற்றும் ஆறு குறு செயற்கைக்கோள்களுடன், பி.எஸ்.எல்.வி., ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மிகவும் வெற்றிகரமான நம்பிக்கைக்குரிய ராக்கெட் பி.எஸ்.எல்.வி., 1993ம் ஆண்டு முதல் 15 முறை விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட், 14 முறை வெற்றிகரமாக செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளது.



இதுவரை 32 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ள பி.எஸ்.எல்.வி., மூலம், நாளை பகல் 11 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. இந்தியாவின் பெருங்கடலைக் கண்காணிக்கும், "ஓசியானா-2' செயற்கைக்கோளுடன், ஆறு குறு செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த, "பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் ஏவப்படுகிறது. "ஓசியானா' செயற்கைக்கோளுடன், "கியூப்சாட்' 1, 2, 3, 4 என நான்கு குறு செயற்கைக்கோள்களையும், "ரூபின் 9.1 மற்றும் 9.2' என இரு செயற்கைக்கோள்களையும் பி.எஸ்.எல்.வி., ஏந்திச் செல்லும். இந்த குறு செயற்கைக்கோள்கள் ஐரோப்பிய பல்கலைக் கழகங்களின் கல்வி ஆராய்ச்சிக்காக விண்ணில் செலுத்தப்படுகின்றன.



"பி.எஸ்.எல்.வி., சி-14' ராக்கெட் 44.4 மீட்டர் உயரமும், புறப்படும் சமயத்தில் 230 டன் எடையும் கொண்டிருக்கும். நான்கு கட்டங்களாக இது விண்ணுக்குச் செல்லும். முதலில் ராக்கெட்டில் இருந்து "ஓசியானா-2' பிரிந்து சென்றதும், அடுத்த கட்டமாக நான்கு "கியூப்சாட்'களும் விண்வெளியில் நிலை நிறுத்தப்படும். கடைசி கட்டத்தில், "ரூபின்' செயற்கைக்கோள்கள் மட்டும் இத்துடன் நிலைத்து நிற்கும். பி.எஸ்.எல்.வி., இதுவரை விண்ணில் செலுத்திய 32 செயற்கைக்கோள்களில் 16 இந்தியாவின் செயற்கைக்கோள்கள்; மற்றவை வெளிநாடுகளுடையவை. இந்த ராக்கெட் பல செயற்கைக்கோள்களை ஒரே முறையில் கொண்டு சென்றுள்ளது. இதில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏவப்பட்ட, "பி.எஸ்.எல்.வி.,-9' மிக அதிகபட்சமாக 10 செயற்கைக்கோள்களை ஏந்திச் சென்று, விண்ணில் நிலைநிறுத்தியது.



விண்ணில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை நாளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைத்துக் கொண்டுள்ளனர். தொடர்ந்து வெற்றியை தந்து வந்துள்ள பி.எஸ்.எல்.வி., இம்முறையும் வெற்றியையே தரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்படுவதை பார்வையிட, துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி, இன்று சென்னை வருகிறார்.



டில்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் இன்று மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, ஸ்ரீஹரிகோட்டாவுக்கு 5.40 மணிக்கு சென்றடைகிறார். நாளை காலை 10 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவப்படும் வளாகத்துக்கு செல்கிறார். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிட்ட பின், மாலை 4.50 மணிக்கு விமானப்படை விமானம் மூலம் டில்லி புறப்படுகிறார்.

துரந்தோ எக்ஸ்பிரஸ்,

சென்னை - டில்லி பாயின்ட் டூ பாயின்ட் புது ரயில் அறிமுகம் : இடையில் நிற்காமல் 28 மணி நேரத்தில் செல்லும்
செப்டம்பர் 22,2009,00:00 IST

சென்னை : ""சென்னை சென்ட்ரல் - டில்லி ஹஸ்ரத் நிஜாமுதின் இடையே வாரத்தில் ஒரு நாள் இயக்கப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ், விரைவில் வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும்,'' என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறினார்.





இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சென்னை சென்ட்ரல் - டில்லி இடையே, இடையில் நில்லா, "துரந்தோ' விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். "துரந்தோ' ரயில் போக்குவரத்தை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரம் நேற்று காலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.





துரந்தோ ரயிலின் சிறப்பம்சம் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜெயந்த் பேசியதாவது:"துரந்தோ' விரைவு ரயில் பெட்டிகள், ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் உருவாக்கப்பட்டுள்ளன. மற்ற ரயில் பெட்டிகளை விட 1.5 டன் எடை குறைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இப்பெட்டிகள் துருப்பிடிக்காது; தீ பாதுகாப்பு உள்ளது; பராமரிப்பு செலவும் குறைவு. பழைய பெட்டிகளை விட இரண்டு மீட்டர் நீளமாக இருப்பதால், அதிக இடவசதி கொண்டுள்ளது. "ஏசி' மூன்றடுக்கு பெட்டிகளில், 64 படுக்கைக்கு பதிலாக 72 படுக்கைகள் உள்ளன. இரண்டாம் வகுப்பு பெட்டியில், 72 படுக்கைகளுக்கு பதிலாக 78 படுக்கைகள் உள்ளன. "ஏசி' பெட்டிகளில் ஜன்னல்கள் பெரிய அளவில் உள்ளதால், பயணிகள் இயற்கை காட்சிகளை முழுமையாக ரசிக்கலாம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு கருதி இப்பெட்டியில் நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் ஓடத் துவங்கி 30 கி.மீ., வேகத்தை அடைந்த பின்னரே கழிவறை கழிவுகள் வெளியே கொட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் நிலையங்கள் அசுத்தமாவது தவிர்க்கப்படும்.பயணிகளின் சொகுசான பயணத்திற்காக, இப்பெட்டிகளில் காயில் ஸ்பிரிங்குகளுக்கு பதிலாக ஏர் ஸ்பிரிங்குகள் பொருத்தப்பட்டுள்ளன.





வண்டி முழுவதும் பொது அறிவிப்பு சாதனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.பெட்டிகளின் வெளிப்புறம், எழில் மிகு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் வசதிக்கென தண்ணீர் பாட்டில்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை வைக்க வசதியும், உணவு அருந்த கண்ணாடியால் ஆன மேஜை வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி இரண்டாம் வகுப்பு பெட்டியிலும் செய்யப்பட்டுள்ளது. உணவு வசதிக்காக நவீன வசதிகள் கொண்ட, "பான்ட்ரி காரும்' இணைக்கப்பட்டுள்ளது.





பயணிகளுக்கு, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் பிரத்யேக உணவு வகைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை - நிஜாமுதின் இடையேயான 2,177 கி.மீ., தூரத்தை இந்த ரயில், 27 மணி 55 நிமிடங்களில் சென்றடையும். பயணக் கட்டணம் ராஜதானி ரயிலை விட குறைவாகவே உள்ளது.துரந்தோ ரயில் 130 கி.மீ., வேத்தில் செல்லக்கூடியது. சென்னை - டில்லி பிரிவில் ரயில் தடங்களில் வேகம் அதிகரிக்கப்படும் போது, இந்த ரயிலின் வேகமும் கணிசமாக அதிகரிக்கப்படும். இதனால், பயண நேரம் மேலும் இரண்டு மணி நேரம் குறைய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு ஜெயந்த் கூறினார்.





சாப்பாட்டுடன் சேர்த்து கட்டணம் :துரந்தோ ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திங்கள் கிழமை காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.35 மணிக்கு டில்லி ஹஸ்ரத் நிஜாமுதின் சென்றடையும். ஹஸ்ரத் நிஜாமுதினிலிருந்து செவ்வாய்க் கிழமைகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.இந்த ரயிலில், சென்னையிலிருந்து, டில்லி ஹஸ்ரத் நிஜாமுதினுக்கு பயணம் செய்ய, "ஏசி' இரண்டாம் வகுப்பு கட்டணம் 2,530 ரூபாயும், "ஏசி' மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய 1,925 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 760 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணம் செய்ய முடியும். பயணிகளுக்கு ரயிலிலேயே ரயில்வே சார்பில் காலை, மதியம், இரவு உணவு வழங்கப்படும். அதற்கு தனியாக கட்டணம் கிடையாது.

சனி, 19 செப்டம்பர், 2009

உலக தமிழர் மாநாடு -கோவை

உலகத்தமிழ் மாநாடு 4 நாட்கள் நடக்கிறது : முதல்வர் கருணாநிதி தேதி அறிவித்தார்
செப்டம்பர் 19,2009,13:02 IST


சென்னை: வரும் 2010 ம் ஆண்டில் ஜனவரி மாதம் 21,22,23,24 உள்ளிட்ட தேதிகளில் உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடைபெறும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் கருணாநிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கான அழைப்பிதழ் உடனடியாக தயார் செய்து உலகம் முழுவதும் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.



சென்னையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு நடந்தது. மாநாட்டு துவக்க விழாவில் உரையாற்றிய முதல்வர் கருணாநிதி கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். இதன்படி மாநாடு நடத்துவது குறித்து இன்று முதல்வர் கருணாநிதி அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.



கூட்ட முடிவிற்கு பின்னர் அவர்கூறுகையில் ; உலகத்தமிழ் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 21,22,23,24 தேதிகளில் 4 நாட்கள் கோவையில் இம்மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டுக்குழு அமைப்பது தொடர்பாகவும், மாநாட்டு நிகழ்ச்சி பொறுப்புக்களை யார், யாரிடம் ஒப்படைப்பது, வெளிநாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்களுக்கு அழைப்பு அனுப்புவது ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டன. மாநாட்டு நிகழ்ச்சிகள் குறித்து அடுத்து நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இதற்கான முதற்கட்ப்பணிகள் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதன், 16 செப்டம்பர், 2009

ஒரு மில்லியன் டாலர் நாணயம்.



உலகில் முதல் முறையாக 1 மில்லியன் டாலர் நாணயத்தை கனடா அரசு வெளிஇட்டு இருக்கிறது.

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

இதயம் இரவல் பெற்ற அபிராமியின் கண்கள் தானம்

இதயம் இரவல் பெற்ற அபிராமியின் கண்கள் தானம்
செப்டம்பர் 14,2009,23:30


சென்னை : கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரா புரத்தில் வசிக்கும் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). இவருக்கு, கடந்தாண்டு செப்டம்பர் 23ல், சென்னை முகப்பேரில் உள்ள, "பிராண்டியர் லைப் லைன்' மருத்துவமனையில், இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள், 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் சிறுமிக்கு இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு சிறுமி அபிராமி, மீண்டும் சுட்டிக் குழந்தையாக இவ்வுலகை வலம் வந்தாள். இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பன்மடங்கு பெருகியது.


கடந்த மாதம் வரை பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த அபிராமிக்கு, 10 நாட்களுக்கு முன், பழைய முறையிலான நோய் அறிகுறிகள் தென்பட்டன. உடனே, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக டாக்டர்கள் அவளைக் கண்காணித்து வந்தனர். ஆனால், பொருத்தப்பட்ட இதயம் ஒத்துழைக்காததால், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்து போனாள். இடைவிடாத முயற்சியினால், அபிராமியின் உயிரை மீட்டெடுத்த அவளது பெற்றோருக்கு அவளது மரணம், பேரிடியாக இருந்தது. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு, கண்ணீரோடு, அபிராமியின் கண்களை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர். அன்று நள்ளிரவே அவளது உடலை பெங்களூரு கொண்டு சென்றனர். இறந்தும் கண்களை தானமாக விட்டுச் சென்ற அபிராமி, மீண்டும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்டாள். ஆனால், அவளின் திடீர் மரணமோ, இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.


உறுப்பு தானத்தை இயக்கமாக மாற்றிய இதயேந்திரன்: மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம், ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக்கொண்டபோதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது. மனித உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, 1994ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு 1994ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அப்போதைய ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இச்சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தால், இரு நபர்கள் முன்னிலையில் எழுதித்தர வேண்டும். அந்த இரு நபர்களில் ஒருவர், உறவினராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, பெற்றோர் அனுமதி வழங்க வேண்டும்.


உடல் உறுப்பு தானத்தை வர்த்தகமயமாக்குவதைத் தடுக்கவும், சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவரது உடல் உறுப்புகளை அனுமதியின்றி அகற்றுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. உறுப்புகளை தானமாக வழங்க முன்வருபவர்களுக்கு, டி.பி., போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருக்கக் கூடாது. தானமாக வழங்கப்படும் உறுப்புகளை எடுக்கும்போது, டாக்டர்கள் இது குறித்து கவனமாக பரிசோதனை நடத்துகின்றனர். ரத்த வகை, உடல் உறுப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து, ஒருவரது உடல் உறுப்புகள், மற்றொருவருக்கு பொருத்தப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் உடல் உறுப்பு தானம் மிகவும் குறைவாக உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ளும்போது, ஸ்பெயினில் 32 பேர், அமெரிக்காவில் 21 பேர், போர்ச்சுக்கலில் 17 பேர், போலந்தில் ஆறு பேர், தாய்லாந்தில் ஒருவர் உடல் உறுப்பை தானமாக வழங்குகின்றனர். ஆனால் நம் நாட்டில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 0.05 பேர் மட்டுமே தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர். தேசிய சராசரியை விட அதிகமாக, தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 0.8 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர்.


சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலியின் மகன் இதயேந்திரன் (17) சாலை விபத்தில் சிக்கினான். டாக்டர்கள், இதயேந்திரனின் மூளை செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது பெற்றோர், இதயேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்காக இதயேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலிக்கு தமிழக அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. இதயேந்திரன் பெற்றோரின் தியாகத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற ஒன்பது வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம் ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக் கொண்ட போதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 120 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 76 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், 31 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் அடங்கும். தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, ஆறு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 48 மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரு மருத்துவமனைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானமாக தேவைப்படும் நோயாளிகள் விவரங்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கும் போது, பதிவு மூப்பு அடிப்படையில், அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.


மாநிலம் முழுவதும் தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை பொது மருத்துவம�னையில் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட மையத்தில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலேர்பவநாதன் கூறுகையில், ""மாணவன் இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன்பிறகு, பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்,'' என்றார்.


மாற்று இதயம் நீண்ட கால தீர்வா? நம் வாழ்நாளில் சராசரியாக 250 கோடி முறை இதயம் துடிக்கிறது. ஒருவர் உடலிலிருந்து இதயம் எடுக்கப்பட்டுவிட்டால், அது 4 - 6 மணி நேரத்துக்குள் இன்னொருவருக்கு பொருத்திவிட வேண்டும். இது ஆபரேஷன் நடக்கும் நேரத்தையும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு செப்., 23ல் இதயேந்திரன் இதயம், பெங்களூருவைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டது. இச்சிறுமி ஓர் ஆண்டுக்குள் உயிரிழந்துவிட்டார். பொதுவாக, முதல் ஐந்து ஆண்டுகளில், மாற்று இதயம் பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துவிடுகின்றனர். மாற்று இதயம் பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் ஓர் ஆண்டும், 75 சதவீதம் பேர் மூன்று ஆண்டும், 68 சதவீதம் பேர் ஐந்து ஆண்டு வரையும் உயிர் வாழ்கின்றனர். 10 ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் மரணமடைந்துவிடுகின்றனர்.


இதயம் தொடர்பான நோய்களே, மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. 1978ல் மாற்று இதயம் பெற்ற டோனி ஹியூஸ்மென் என்பவர், 31 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்து 2009 ஆகஸ்ட் 10ல் உயிரிழந்தார். 1967ல் தான் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்ரிக்காவில் நடந்தது. 1994ல் இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் 4 - 5 ஆயிரம் பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1994ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 43 பேருக்குத் தான் இதயம் மாற்றப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2,000 இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 3,000 ஆக உள்ளது.

திங்கள், 14 செப்டம்பர், 2009

டாக்டர் ராஜசேகர ரெட்டி மரணம்- புகைப்படங்கள்

மறைந்த ஆந்திர பிரதேச முதல் அமைச்சர் டாக்டர் ராஜசேகர ரெட்டியின் மரணம்நிகழ்ந்த காட்டு பிரதேசம். தயவு செய்து இதயம் பலகீனமானவர்கள் பார்கவேண்டம்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது

காஞ்சிவரம் ' சிறந்த படம் : பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது
செப்டம்பர் 08,2009,00:00 IST


"புதுடில்லி: கடந்த 2007ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக, "காஞ்சிவரம்' என்ற தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த பிரகாஷ் ராஜுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

நாட்டின் 55வது தேசிய திரைப்பட விருதுகளை தேர்வு செய்வதற்காக, பிரபல இயக்குனர் சாய் பரஞ்சபே தலைமையில், நடுவர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 2007ல் வெளியான 102 திரைப்படங்கள் மற்றும் 106 டாகுமென்டரி படங்களை ஆய்வு செய்து, தேசிய விருதுகளை அறிவித்துள்ளது. கடந்த வாரமே விருதுக்கான அறிவிப்பு வெளியாவதாக இருந்தது. ஆனால், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் திடீர் மரணம் காரணமாக இந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டது.

நேற்று விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக, பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் "காஞ்சிவரம்' என்ற தமிழ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த இயக்குனர் பிரகாஷ் ராஜுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. காஞ்சி ஏழை நெசவாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து, யதார்த்தமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. "சக்தே இந்தியா'வில் நடித்த ஷாரூக் கான், "தாரே ஜமீன்பார்' படத்தில் நடித்த அமீர் கான் ஆகியோரில் யாருக்காவது ஒருவருக்குத் தான் சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இருந்தாலும், ஏழை நெசவாளனாக காஞ்சிவரம் படத்தில் வாழ்ந்து காட்டிய பிரகாஷ் ராஜுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. பிரகாஷ் ராஜ்,"இருவர்'என்ற படத்தில் நடித்ததற்காக ஏற்கனவே, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் . உமாஸ்ரீ தேர்வு :சிறந்த நடிகையாக "குலாபி டாக்கீஸ்' என்ற கன்னடப் படத்தில் நடித்ததற்காக உமாஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஷாரூக்கான் நடித்த சக்தே இந்தியா இந்தி படம், தேசிய அளவில் சிறந்த பொழுது போக்கு படமாகவும், அமீர் கான் நடித்த தாரே ஜமீன்பார் இந்தி படம் தேசிய அளவில் சிறந்த குடும்ப நல படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த பின்னணி பாடகராக, தாரே ஜமீன்பார் படத்தில் "மேரி மா'என்ற பாடலைப் பாடிய, சங்கர் மகாதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த குழந்தை நட்சத்திரமாக, "டின்கயா' என்ற மராட்டிய மொழிப் படத்தில் நடித்த சரத் கோயகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "காந்தி மை பாதர்'என்ற இந்திப் படம், தேர்வுக் குழுவின் சிறப்பு விருதுக்கான படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு மேலும் இரு விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த திரைக்கதைக்கான விருது பெரோஸ் அப்பாசுக்கும், சிறந்த துணை நடிகர் விருது தர்ஷன் ஜாரிவாலாவுக்கும் கிடைத்துள்ளது. சிறந்த படத்துக்கான தேசிய ஒருமைப்பாட்டு விருது, "தார்ம்'என்ற படத்துக்கு கிடைத்துள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான விருது "சேம் சங்'என்ற படத்தில் பாடல் எழுதிய, பர்சூன் ஜோசிக்கு கிடைத்துள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபலகிருஷ்ணனின் "நாலு பெண்கள்'என்ற படத்துக்காக, சிறந்த இயக்குனர் விருதை பெற்றுள்ளார். இது, இவருக்கு கிடைத்த ஏழாவது தேசிய விருது என்பது குறிப்பிடத் தக்கது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திரா காந்தி விருது "புரோஜன்'என்ற இந்தி திரைப்படத்தை இயக்கிய சிவாஜி சந்திரபூஷனுக்கு கிடைத்துள்ளது.

இந்த படத்துக்கு, சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் கிடைத்துள்ளது. குழந்தைகளுக்கான சிறந்த திரைப்படமாக "போடோ'என்ற இந்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த படத் தொகுப்புக்கான விருது "நாலு பெண்கள்'மலையாள படத்துக்கு கிடைத்துள்ளது. பெரியார் படத்துக்கு விருது: சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது, "இனிமே நாங்கதான்' என்ற தமிழ் படத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகையாக, ஷெபாலி ஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். "தி லாஸ்ட் லையர்'என்ற படத்தில் நடித்ததற்காக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த பின்னணி பாடகியாக, ஷ்ரேயா கோஷல் (ஜாப் வீ மீட்) தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடனத்துக்கான விருதும் "ஜாப் வீ மீட்' படத்துக்கு கிடைத்துள்ளது. மாநில மொழி வாரியான விருதில், சிறந்த தமிழ் படமாக "பெரியார்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த மலையாள படமாக "ஒரே கடல்'என்ற படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் மகிழ்ச்சி:காஞ்சிவரம் படத்துக்கு விருது கிடைத்தது குறித்து இயக்குனர் பிரியதர்ஷன் கூறுகையில்,"மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வர்த்தக ரீதியான படங்களின் இயக்குனர் என்ற பெயர் எனக்கு இருந்தது. தற்போது, காஞ்சிவரம் படம் அதில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், பிரகாஷ் ராஜ் சிறப்பாக நடித்திருந்தார். எனவே, அவருக்கு விருது கிடைத்ததில் எனக்கு ஆச்சர்யம் எதுவும் இல்லை'என்றார்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

தற்கொலை போதும்

YsR மரண அதிர்ச்சி:இதுவரை 500பேர் மரணம்

ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததகவல் கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தொடர்ந்து உயிரை மாய்த்து வருகிறார்கள். முதல் நாளிலேயே 67 பேர் மாரடைப்பாலும் 20 பேர் தற்கொலை செய்தும் உயிரிழந்தனர்.

அவரது இறுதிசடங்கு காட்சிகளை டி.வி.யில் பார்த்தபோது 178 பேர் பலியானார்கள். ராஜசேகர ரெட்டிக்காக உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரை 494 பேர் உயிரிழந்ததாக தெலுங்கு நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 79 பேர் பலியாகியுள்ளனர். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 12 பேரும், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் 7 பேரும், அனந்தபுரம் மாவட்டத்தில் 3 பேரும், குண்டூரில் 7 பேரும்,

அதிலாபாத்தில் 10 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 6 பேரும், நிஜாமாபாத்தில் 2 பேரும், கர்னூலில் 7 பேரும், கரீம்நகரில் 10 பேரும், நல்கொண்டாவில் 9 பேரும், ஐதராபாத், ஜுப்ளி ஹில்ஸ், மெகபூப் நகர், விஜயநகரம், ஸ்ரீகாகுளத்தில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இது தவிர துபாயிலும் ஒருவர் ராஜசேகர ரெட்டி மரணம் அடைந்த அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்துள்ளார்.

டாக்டர் அப்துல் கலாம்: இளைஞர்கள் காலம்.


ரு தலைவன் கிடைத்தால்...

தமிழகத்தின்அருமைமிகு மக்களே, வாசகர்களே, இளைஞர்களே, உங்களுடன் ஒவ்வொரு “நக்கீரன்’’ இதழிலும் நான் மனம் திறந்து உரையாடப் போகிறேன். என்றுமே எனக்கு மக்களை, குறிப்பாக இளைய சமுதாயத்தைச் சந்திப்பதில் மிகவும் விருப்பம் உண்டு. இதுவரை என் வாழ்நாளில் பல பள்ளிகளுக்குச் சென்று அன்றலர்ந்த மலர்களைப் போல் இருக்கும் குழந்தை களைச் சந்தித்து அவர்களிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி இருக்கிறேன். கிட்டத்தட்ட 1 கோடி மாணவர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி, அவர்கள் என்னுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுள்ளார்கள்.


அப்போதெல்லாம் அவர்கள் என்னிடம் காட்டிய அன்பும், மரியாதையும், நேசமும் என்னால் எப்போதுமே மறக்க முடியாது. என்னையே புதுப்பித்துக் கொண்ட தருணங்கள் அவை. பள்ளிகளில் மட்டும் அல்லாது, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், விஞ்ஞான ஆய்வரங்கங்கள், கூட்டங்கள் என்று பல்வேறு சந்திப்பு மையங்களில் நான் கண்ட இளைய சமுதாயம் என்னுள்ளே எப்போதுமே பெருமிதத்தையும், மிகப் பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இந்த நாட்டின் மிகப்பெரிய வளம் மனித வளம். அதுவும் இளைய சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய இந்த நாட்டின் மனித வளம் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையைத் தருகிறது.

கனல்விடும் இளைய நெஞ்சங்களே சக்தி வாய்ந்ததோர் ஆற்றல் வளம் என்பதை நான் உணர்கிறேன். அதையே தான் எல்லோரிடமும் சொல்லி வருகிறேன். 2020-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்னாலே கூட, இந்தியா ஒரு வளர்ந்த நாடு ஆகும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஆதாரங்களைக் கொண்ட நம்பிக்கையும் கூட. இந்த நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்டன என்கிற தாக்கங்கள் இளைய சமுதாயத்தைச் சென்றடைந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணியதன் விளைவே, உங்களுடன் நான் உரையாடப் போகும் இந்தத் தொடர்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான ஒன்றாக நான் கருதுவது “கற்பனை திறன் வாய்ந்த லீடர்ஷிப்’ (ஈழ்ங்ஹற்ண்ஸ்ங் கங்ஹக்ங்ழ்ள்ட்ண்ல்) எனப்படும் தலைமைப் பண்புதான். சிறிய அளவில் இருந்து நாட்டின் மிக உயர் பதவிகள் வரை சிறந்த தலைவர்கள் கிடைத்து விட்டால், அந்த நாடு மிக வேகமாக முன்னேறி விடும் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. எத்தனையோ சந்தர்ப்பங்களில் இதை நான் கண்கூடாகப் பார்த்திருக் கிறேன். நல்ல தலைவனும், நல்ல தலைமைப் பண்புகளும் சுபிட்சத்தைக் கொண்டு வரக்கூடிய ஆதார சக்திகள்.

இதற்கு எடுத்துக் காட்டாக எத்த னையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதியாக நான் பதவி வகித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள்..

தமிழ்நாட்டிலிருந்து சுமார் ஐம்பது கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். அந்த எளிய மனிதர்களைக் காண எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், மழைத் தண்ணீர் சேமிப்புத் திட்டம் எப்படி செயல்படுத்தப் படுகிறது என்பதை பார்வையிட்டு விட்டு அவர்கள் என்னைக் காண வந்திருந் தார்கள்.

அவர்களிடம் நான், எப்படி கிராமங்கள் தன்முனைச் செயல்பாட்டின் மூலம் தன்னிறைவு கிராமங்களாக மாற முடியும் என்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். நான் பேசி முடித்ததும் ஒருவர் எழுந்தார். வேட்டி-சட்டையில் ஒரு கிராமத்து விவசாயியைப் போன்ற தோற்றம். அவர் பெயர் பன்னீர்செல்வம். கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் கிராமத்திலிருந்து வந்திருப்பதாகச் சொல்லித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், அவருடைய கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும், சுமார் 1125 வீடுகள், சுகாதாரத் தண்ணீர் வசதிகள் தன்முனைப்புடன், கிராம மக்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சொன்னார். நேரம் கிடைக்கும் போது தன் கிராமத்துக்கு வந்து அதைக் காணுமாறும் அவர் அன்போடு அழைப்பு விடுத்தார். தன்னிறைவு பெற்ற ஒரு தமிழகத்து கிராமத்தை உடனே காண எனக்கும் மிக விருப்பமாகவே இருந்தது. "கண்டிப்பாக வருவேன்' என்று அவரிடம் சொல்லி எல் லோருக்கும் விடை கொடுத்து அனுப்பினேன். மனதுக்குள் கீரப்பாளையம் கிராமமே சுற்றிச் சுற்றி வந்தது. எனது அலுவலர்களிடம் உதவியாளர்களிடம் சொல்லி சீக்கிரமே ‘கீரப்பாளையம்' கிராமத்துக்குச் செல்லப் பயண ஏற்பாடு செய்யுமாறு சொன்னேன்.

அந்த நாளும் சீக்கிரமே வந்தது. 2004-ம் வருடம் ஆகஸ்டு மாதம் 27-ம் தேதி நான் கீரப்பாளையம் கிராமத்துக்குச் சென்றேன். என் வருகையை நம்ப முடியாத அந்த கிராமப் பஞ்சாயத்துத் தலைவரும், மக்களும் பெரும் ஆரவாரத்துடன் என்னை அன்போடு வரவேற்றார்கள். என்னைச் சூழந்து கொண்ட சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்தவர்கள்... அவர்கள் தயாரிக்கும் பொருட்களின் கண்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சுகாதாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை மட்டுமின்றி உணவு, உடை, பாத்திரங்கள், ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் என்று வகை வகையாய் அவர்கள் செய்து வைத்திருந்த கைவினைப் பொருட்களின் அழகியலையும் தரத்தையும் கண்டு நான் வியந்து போனேன். இந்தப் பொருட்களைச் சுற்று வட்டார மாவட்டங்களில் விற்பதாகவும் அவர்கள் தெரிவித்தது எனக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தந்தது. அவர்களிடம் "பொருட்களை மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யுங்கள்' என்று கூறினேன். மாவட்ட ஆட்சியரிடம், அதற்கான வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னேன்.

அவர்கள் என்னை அமரவைத்து இனிமையான கிராமத்துப் பாடல்களைப் பாடியபடி நடனம் ஆடினார்கள். அந்த நாட்டார் சங்கீதம் மிக இனிமையாக இருந்தது. கீரப்பாளையம் கிராமமே பல விதங்களில் தன்னிறைவைப் பெற்று சந்தோஷமாக இருந்தது. அந்த கிராம பஞ்சாயத்துத் தலைவர் பன்னீர் செல்வம் தொலைநோக்கு கொண்டவராய், அருமையான தலைமைப்பண்புகள் கொண்ட எளிய தலைவராக இருந்தார். ஒரு சிறப்பான தலைமையின் வழி காட்டுதலில் கிராமம் கம்பீர நடை போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ணாரக் கண்டேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட் டுதல்களைத் தெரிவித்துக் கொண்டேன்.

இன்னொருவரைப் பற்றி யும் இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். கடலூர் மாவட்டத் தின் ஆட்சியாளராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த திரு. ககன் தீப் சிங் பேடிதான் அவர். சுற்று வட்ட கிராமங்களில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் களையும், சுய உதவிக் குழுக் களையும் ஒருங்கிணைத்து கை தேர்ந்த முறையில் உற்சாகப் படுத்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஒரு தலைவருக்குரிய நற்பண்புகளுடன் செய்து கொண்டி ருந்தார்.

தலைவர்களின் வழிகாட்டுதலி லும், மக்களின் உழைப்பிலும் பல கிராமங்களில் உள்ள குளங்கள் தூர் வாரப்பட்டு, நல்ல தண்ணீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டி ருந்ததை நான் கண்டேன். கீரப் பாளையம் கிராமத்தில் 5347 பேர் வசித்தார்கள். அவர்களில் ஆண்கள் 3012 பேர், பெண்கள் 2335 பேர். அவர்கள் வசித்த அத்தனை வீடுகளுக்கும் குடிதண்ணீரும், சுகாதாரத்துக்கான தண்ணீரும் குறைவில்லாமல் கிடைத்துக் கொண்டிருந்தது. இதைப் போலவே இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற ஆசை அப்போது என் மனதில் தோன்றியது. அப்போதுதான் காந்தி கண்ட கனவை நாம் நனவாக்க முடியும்.

ஏன், அது நடக்க முடியாத கனவா என்ன?

இந்த "கீரப்பாளையம்' என்கிற ஒரே ஒரு கிராமம் எனக்கு அந்த உண்மையை ஒரு ஒளிக்கதிர் போல உணர்த்தியது. இந்திய கிராம மக்கள் எல்லோருமே நல்ல மாற்றத்தை மனதார விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தின் கருவிகளாய் தாங்களும் உழைப்பதற்குத் தயாராகவே இருக்கிறார்கள்.

அவர்களுக்குத் தேவை எல்லாம் ஒரு தலைவன். வழிகாட்ட ஒரு தலைமை. அந்த தலைவன் எங்கிருந்தோ வந்துதிப்பான் என்று இருக்கக்கூடாது. நம்மில் இருந்து, இளைய சமுதாயத்தில் இருந்து, நமது மண்ணில் இருந்து தலைவர்கள் தோன்ற வேண்டும்.

இந்த 21-ம் நூற்றாண்டில், உணர்ச்சிகளுக்கு அப்பாற் பட்டு அறிவார்ந்த சமுதாயத்திற்கு மக்களை இட்டுச்செல்லும் கூடமாக பள்ளிகள் இருக்க வேண்டும், அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் விளங்க வேண்டும், குழந்தைகளை வழிநடத்த வேண்டும், அவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும், அந்த மாற்றத்திற்கு மக்கள் தயாராக வேண்டும்.

அறிவுசார்ந்த சமுதாயம் உருவாக தலைவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகை மற்றும் டி.வி. ஊடகங்கள், மற்றும் சினிமா, நகைச்சுவை மூலம், நல்ல கருத்துக்கள் அனைத்து தரப்புக்கும் சென்று சேரவேண்டும். அந்த சூழ்நிலையை நமது நாட்டில் தோற்றுவிக்க வேண்டியது அனைவரது கடமையாகும். அந்த மாற்றத்திற்கு நாம் தயாராக வேண்டும். அந்த மாற்றம் மட்டும் சரியாக ஏற்பட்டுவிட்டால் இங்கே மகத்தான மறுமலர்ச்சி ஏற்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

(தொடரும்)

Picture
Picture

சனி, 5 செப்டம்பர், 2009

காட்டி கொடுத்த தமிழ் துரோகி

ஜூனியர் விகடன் ஆசிரியர் விகேஷ் நீக்கம் ஏன்? – இலங்கை அரசின் கைக்கூலி பத்திரிகையாளர்கள் – தெரியாத செய்திகள்!
  • தமிழக ஊடகவியலாளர்களிடையே சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயம், விகடன் குழுமத்திற்குச் சொந்தமான ஜூனியர் விகடன் இதழில் நிர்வாக ஆசிரியராக இருந்த விகேஷ் என்பவர் அதிரடியாக வேலைநீக்கம் செயப்பட்டிருப்பது பற்றித்தான். அவருக்கு சென்னையில் மட்டும் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாகவும்,......
    சில பெரிய புள்ளிகளோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், அது தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகள் போன்றவற்றில் நீண்டகாலமாகவே அவர் கைதேர்ந்தவர் என்றும், ஒட்டு மொத்தமாக தன் தொழிலுக்கு ஜுனியர் விகடன் பெயரைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

    சமீபத்தில் மோசடி வைத்தியசாலை தொடர்பான கட்டுரை ஒன்றைப் பிரசுரிக்காமல் தவிர்த்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் அவரைக் கண்காணித்ததாகவும் தனியார் துப்பறியும் நிறுவனம் மூலமாக விசாரணை நடத்தியதில் பல லட்சமோ, கோடியோ மோசடி நடந்திருப்பது உறுதியானதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் விகேஷ் அலுவலத்துக்குள் அனுமதிக்கப்படாமலேயே வீட்டிற்கு அனுப்பப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    இதைக்காட்டிலும் தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியூட்டத்தக்க குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. அது விகேஷ் இலங்கைத் தூதரகத்துடன் வைத்திருந்த உறவு தொடர்பானது. இன அழிப்புப் போரின் போது தமிழகத்து அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர்களையும் ‘திறமையாக’க் கையாண்டதற்காக சென்னையில் இலங்கை அரசின் துணைத்தூதராக இருந்த அம்சாவுக்கு பதவி உயர்வு கொடுத்து இலண்டனுக்கு அனுப்பி வைத்தது, இலங்கை அரசு. தமிழ் ஊடகவியலாளர்களில் சிலர் அம்சாவோடு மிக நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்கள். போருக்கு முன்னர்; இலங்கை அரசின் பிரச்சாரத்தை முன்னெடுக்க அவர்களுக்குச் சன்மானங்கள் வழங்கப்பட்டன. போரின் வெற்றிக்குப் பின்னர், செய்த வேலைக்காக சன்மானமும் விருந்தும் வைக்கப்பட்டது.

    அம்சாவிடம் கேள்வி எழுதிக் கொடுத்து ராஜபட்சேவிடம் பதில் வாங்கி, அதைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன, சில ஊடகங்கள். போர் தீவீரமாக நடந்த காலத்தில் வழக்கறிஞர்களும் மாணவர்களும் அரசியல் அமைப்புகளும் போர் நிறுத்தம் கேட்டு போராடிய காலத்தில், இலங்கைத் தூதரகம் துரோகி கருணாவின் நேர்காணலுக்கான ஏற்பாட்டைச் செய்து, இங்குள்ள எல்லா பெரிய ஊடக நிறுவனங்களிலும் அது வெளியானது. ஜூனியர் விகடன் இரண்டு வாரமாக துரோகி கருணாவின் பேட்டியை வெளியிட்டது. இந்த நேர்காணல்களை வெளியிடும் சுதந்திரம் எல்லா ஊடகங்களுக்குமே உண்டு என்று வாதிடலாம். ஆனால், அதிர்ச்சிகரமான செய்தி என்ன வென்றால், புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் பா.நடேசனின் நேர்காணலை ஜூனியர் விகடனும், டெக்கான் குரோனிக்கலும் வெளியிட மறுத்து கருணாவின் நேர்காணலை வெளியிட்டதுதான்.

    தமிழ் ஊடகங்களில் உள்ள கணிசமான பத்திரிகையாளர்கள் வளைக்கப்பட்டார்கள். சில மானமுள்ள பத்திரிகையாளர்கள் அம்சாவின் அன்பளிப்புகளைப் புறக்கணித்தும் இருக்கிறார்கள்.இலங்கை தூதரகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதிய ஊடகங்களும் உண்டு. போருக்கு முன்னரும் பின்னரும் ஆங்கிலம் பேசும் ஊடகவியலாளர்களை கொழும்புக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டியும். தமிழ் பேசும் ஊடகவியலாளர்களை சென்னையிலேயே குளிப்பாட்டியதும் கூட நடந்திருக்கிறது.

    இதில் விகேஷ் மட்டுமல்ல, ஜுனியர் விகடன் குழுமத்தில் இப்போதும் பணியாற்றிவரும் ஒருவர்தான் அம்சாவுக்கு அதிகமான தரகு வேலை பார்த்ததாகவும், இப்போது புதிதாக வந்திருக்கும் துணைத் தூதருக்கும் அவரே ஊடகத் தரகராக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

    இவரது பணி வித்தியாசமானது; யாராவது புலிகளை ஆதரித்து எழுதினால், உடனே இவர் விகடனின் தீவீர வாசகர் என்ற போர்வையில் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு விகடன் நிர்வாகத்தினரைப் பார்க்கச் செல்வார். இவர் அழைத்துச் செல்லும் நபர் இலங்கை தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்படுபவராக இருப்பார். இவர் போய் ‘விகடனில் ஒரே புலி ஆதரவு கட்டுரையாக வருகிறது’ என்று பற்ற வைப்பார். இலங்கை தூதரகத்தால் இவருக்கு வழங்கப்பட்ட பல பணிகளில் இதுவும் ஒன்று.

    தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, சென்னை அரசினர் தோட்டத்திற்குள் இருக்கும் பத்திரிகையாளர் மன்றம் என்கிற அமைப்பின் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. தமிழ் ஊடகவியலாளர்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்குப் பெயர் வைக்கும் போது ஒரு பைசாத் தமிழன் இதழை நடத்திய அயோத்திதாசப் பண்டிதரின் பெயர் முதல் தினத்தந்தி ஆதித்தனார் பெயர் வரை, ஏதாவது ஒரு ஊடகவியல் சார்ந்தோரின் பெயரை வைத்திருக்கலாம்.

    ஆனால், அக்கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? ” எஸ்.ஆர். எம். மாளிகை”. அதாவது, எஸ்.ஆர். எம். கல்லூரி முதலாளி பச்சைமுத்துவின் நிதியில் அந்தக் கட்டிடம் கட்டப்பட்டதால், அவர் பெயரையே கட்டிடத்திற்கு வைத்து விட்டார்களாம். இலங்கை அரசின் முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் விருது வாங்கியவரும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராக நஞ்சைக் கக்கிவருபவருமான ஹிந்து ராமைக் கொண்டு ‘எஸ்.ஆர்.எம்‘ என்ற அந்தக் கட்டிடம் திறக்கப்படுகிறது என்றால், பத்திரிகையாளர் மன்றத்தின் இன்றைய சில துரோக நிர்வாகிகளுக்கும் இலங்கைத் தூதரகத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை ஊடக நிறுவனங்கள் விசாரித்திருக்க வேண்டும்.

    எஸ். ஆர்.எம். கல்லூரியின் மர்ம அறையில் மாணவர்களை அடைத்து வைத்துத் தாக்கியதும். அந்தக் கல்லூரியின் தொழில் நுட்பச் சான்றிதழ்கள் செல்லாதவை என்று இந்திய தொழில் கூட்டமைப்பு அறிவித்தது குறித்தும் எஸ். ஆர். எம். கல்லூரி நிர்வாகத்தின் கட்டணக் கொள்ளை குறித்தும் யோக்கியமான எந்தப் பத்திரிகையாவது வெளியில் கொண்டு வந்திருக்கிறதா? போர் கொடூரமாக நடந்த காலத்தில், போர் நிறுத்தம் கோரியோ சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தோ ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை இந்த ஊடக அமைப்பு. காரணம் இதில் தலைமைப் பொறுப்பில் உள்ள சிலர் எது செய்தாலும் இந்து ராமிடம் கேட்டுத்தான் செய்வார்களாம்.

    ஈழத்தமிழினத்திற்கெதிராக நடைபெற்ற ஒரு இன அழிப்பு போரை இருட்டடிப்பு செய்வதற்காகவும், சிங்கள இனவெறி அரசை நியாயப்படுத்துவதற்காகவும் கைநீட்டி காசு வாங்கிய பத்திரிகையாளர்களின் குற்றம் வெறும் ஊழல் குற்றமல்ல. அது போர்க்குற்றத்திற்கு இணையாக, தண்டிக்கப்பட வேண்டிய ஒரு கிரிமினல் குற்றம். இவர்கள் இனப்படுகொலையின் கூட்டாளிகள்.

    எண்ணிப்பாரக்கவே இயலாத இந்த அருவருப்பான நடவடிக்கை சிறு சிறு ஊழல்கள் வழியாகத்தான வளர்ந்து விசுவரூபமெடுத்திருக்கிறது. மாணவ நிருபராக இருந்து ஜுனியர் விகடனுக்கு நிர்வாக ஆசிரியராக வந்தவர்தான் விகேஷ். பொறுப்புக்கு வந்த மாணவ நிருபர்கள் மிக மிக தந்திரமாக செய்த ஒரு விஷயம், தங்கள் இருப்புக்கு இன்னொரு மாணவ நிருபர் உலைவைத்து விடாமல் பார்த்துக் கொண்டதுதான். ஒரு கட்டத்தில் மாணவ நிருபர்களின் வரவே குறைந்து ஒப்புக்கு மட்டும் அந்தத் திட்டம் இப்போது விகடனில் இருப்பதாக அறிய முடிகிறது.

    நேர்மை, ஊடக தர்மம், எழுத்தை மட்டுமே நம்பி வாழ்கிற பத்திரிகையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்களாகவும், ஊழல், செல்வாக்கை வளர்த்து அதிகார பீடங்களுக்கு வருபவர்கள் திறமைசாலிகளாகச் சித்தரிக்கப்பட்டதும் ஊழல்மயப்பட்ட ஊடக ஒழுக்கம் கட்டமைத்த கருத்தியலே. அந்தக் கருத்தியலின் ஒரு நவகால அடையாளம் மட்டுமே விகேஷ். ஒரு எல்லை வரை ஊழல், கட்டப்பஞ்சாயத்து போன்ற இழி செயல்களை எல்லா ஊடக நிறுவனங்களும் அனுமதித்தே வந்திருக்கின்றன. தமிழ் மக்களின் மனச்சாட்சி. நாடித்துடிப்பு என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்த ஊடகங்கள் பத்திரிகையாளர்களுக்கு வழங்கும் ஊதியம் மிகவும் சொற்பமானது. உழைப்பைச் சுரண்டி ஊதியம் கொடுக்காத முதலாளிகள் ஒரு எல்லை வரை தனது நிருபர்கள் வெளியில் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கிறார்கள். இதுதான் பெரும்பலான தமிழக பத்திரிகையாளர்களின் நிலை.

    தொடக்க காலத்தில் போலீசு அக்கிரமங்களை வெளிக்கொண்டு வந்த ஜுனியர் விகடன், நாளடைவில் போலீசு புகழ்பாடத் துவங்கியது. போலீசை வைத்து வாசகர்களுக்குச் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு அது வளர்ந்து சென்றது. சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வழக்கறிஞர்கள் இருக்க, போலீசாரைக் கொண்டு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் தொடங்குகிறது விகடன் நிருபர்களின் போலீசு கூட்டு. ரௌடி, போலீசு, அரசியல்வாதி கூட்டணியோடு பத்திரிகையாளர்களில் சிலரும் இணைந்து வளர்ந்த கதை சுவாரசியமானது. போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்துகளில் பத்திரிகையாளர்களும் கூட்டு சேர்ந்து தொழில் துரோகம் செய்த விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. காலம் தோறும் இத்தகைய மோசடிப் பேர்வழிகள் குமுதம், விகடன் குழுமம், நக்கீரன் என எல்லா ஊடகங்களிலுமே இருந்துதான் வந்திருக்கிறார்கள். ஆனால், அதிர்சியளிக்கும் விஷயமாக அத்தனை பேரும் பேசிக் கொள்வது விகடனுக்குள்ளேயே இது நடந்து விட்டது என்பதுதான்

    பாரம்பரியமிக்க பத்திரிகை நிறுவனம் எங்களுடையது என்று மூச்சுக்கு முந்நூறு தடவைச் சொல்லிக் கொள்ளும் விகடன் தங்கள் நிறுவனத்தின் பெயரை தவறான வகையில் பயன்படுத்திய மோசடிப் பேர்வழி விகேஷ் மீது ஏன் சட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என்கிற கேள்வி இங்கே முக்கியமானது. சில வருடங்களுக்கு முன்பு இதே ஜுனியர்விகடனில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் பிரச்சினை ஒன்றில் செய்தியை வெளியிடாமல் இருக்க, சம்பந்தப்பட்டவர்களை மிரட்டுகிற தொனியில் பேசி வகையாகச் சிக்கிக் கொண்டார். அப்போது ஜூனியர் விகடன் நிர்வாகத்தினர், அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். விகேஷ் போன்றோரின் குற்றங்களை ஒப்பிடும்போது அது மிகச்சாதாரண குற்றம்.

    இலங்கைத் தூதரின் விருந்தைச் சுவைத்தவர்கள் முதல் எலும்பைச் சுவைத்தவர்கள் வரையிலான எல்லா குற்றவாளிகளும் அடையாளம் காட்டப்படவேண்டும். இதனைத் தெரிந்து கொள்வது தமிழ் மக்களின் உரிமை. ஆதாரங்கள் தெரியாத வண்ணம் இழைக்கப்படும் இத்தகைய குற்றங்களுக்கான ஆதாரங்களை அம்பலமாக்குவது நேர்மையான பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரின் கடமை.

  • இந்திய கார் சந்தையில் புதிய பென்ஸ்

    மெர்சிடிஸ் நிறுவன புதிய கார் அறிமுகம்





    புதுடில்லி: பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ்-பென்ஸ், விரைவில் தனது புதிய மாடல் காரை அறிமுகப்படுத்துகிறது. ஜெர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மெர்சிடிஸ் -பென்ஸ். இந்தியாவில் இந்நிறுவனத்தின் கார் விற்பனை, கடந் தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு குறைந்துள்ளது. இந்த இழப்பை ஈடு செய்யும் வகையில், புதிய 'இ-கிளாஸ்' மாடல் காரை, இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த கார், பி.எம்.டபிள்யூ 5 -சீரியஸ் போன்ற கார்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

    மெர்சிடிஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வில்பிரட் ஆல்பர் கூறியதாவது: இந்த கார், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மதிப்பு மிக்க பொருளை வைத்திருக்கும் ஒரு அனுபவத்தை ஏற்படுத்தி தரும் என்பது உறுதி. கடந்தாண்டு இந்தியாவில் எங்கள் நிறுவனம் சார்பில், 3,562 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு விற்பனையில் பின் தங்கியுள்ளோம். புதிய இ-கிளாஸ் கார்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், 2010ம் ஆண்டில் விற்பனையில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி கிடைக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு வில்பிரட் ஆல்பர் கூறினார். கார் டீலர் வட்டாரங்கள் கூறுகையில், 'நவீன தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இந்த கார் வடிவமைக்கப்படும். இதன் விலை, 40 லட்ச ரூபாயில் இருந்து 45 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது'என்றார்.

    வெள்ளி, 4 செப்டம்பர், 2009

    விமான விபத்தில் இறந்த இந்திய தலைவர்கள்

    விமான விபத்தும், இந்திய அரசியல் தலைவர்களும்!
    செப்டம்பர் 04,2009,00:00 IST

    புதுடில்லி : ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கடந்த கால வரலாற்றை புரட்டிப் பார்த்தால், பல்வேறு முக்கிய தலைவர்கள், இதே போன்ற விமான விபத்தில் சிக்கியது தெரியவரும்.



    விமான விபத்துகளில் உயிரிழந்த சில தலைவர்கள்:



    * ராஜசேகர ரெட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரகாசம் மாவட்டத்தில் இருந்து, ஐதராபாத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற போது, இதே போன்ற விபத்து ஒன்றை எதிர்கொண்டார். அப்போது, மோசமான வானிலை காரணமாக, பள்ளி மைதானம் ஒன்றில், ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. இந்த முறை, அவருக்கு அத்தகைய அதிர்ஷ்டம் ஏற்படவில்லை.



    * கடந்த 2005ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி நிகழ்ந்த, ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில், அரியானா மாநிலத்தின் அப்போதைய விவசாயத்துறை அமைச்சர் சுரேந்திர சிங் மற்றும் தொழிலதிபர் ஓ.பி.ஜிண்டால் ஆகியோர் உயிரிழந்தனர்.



    * கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி, ஆந்திராவின், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், அப்போதைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி.பாலயோகி உயிரிழந்தார். மோசமான வானிலையால், குறைந்த வெளிச் சத்தில், குளத்தை சமதளமாக கருதி ஹெலிகாப்டரை தரையிறக்கியதால், அந்த விபத்து நிகழ்ந்தது.



    * கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி, உ.பி.,யில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரான மாதவ் ராவ் சிந்தியா உயிரிழந்தார்.



    * கடந்த 1973ம் ஆண்டு, இந்திரா காந்தியின் மகன் சஞ்சய், சென்ற கிளைடர் விமானம், டில்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தார்.



    * காங்கிரஸ் தலைவர் எஸ்.மோகன் குமாரமங்கலம், டில்லி விமான விபத்தில் காலமானார்.

    வியாழன், 3 செப்டம்பர், 2009

    ஆந்திர முதலமைச்சர் மரணம்

    ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
    செப்டம்பர் 03,2009,00:00 IST

    ஐதராபாத் : ஆந்திர முதல்வர் சாலமன் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். முதல்வர் உட்பட ஐந்து பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் 24 மணி நேரத்துக்குப் பிறகு கர்னூல் பகுதி மலையில் ‌இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டது.முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தை பிரதமர் மந்திரியின் அலுவலகம் உறுதி செய்துள்ளது. முதல்வர் மரணம் குறித்து ம‌த்திய கேபினட் குழு கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வர் மரண‌த்தை அடுத்து காங்., தலைவர் சோனியா ஆந்திரா விரைகிறார்.

    ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்துவிட்டார். நேற்று காலை 8.35 மணிக்கு ஐதராபாத்திலிருந்து சித்தூர் செல்லும் வழியில் கர்னூல் அருகே உள்ள மலைப் பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக உருவெடுத்து வரும் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    1949 ஜூலை 8ல், புலிவெண்டுலு எனும் இடத்தில் ராஜா மற்றும் ஜெயம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த அவர், மருத்துவத்தில் பட்டம் பெற்றவர். அவர் பிறந்த கடப்பா மாவட்டத்தில் சில காலம் மருத்துவப் பணியில் ஈடுபட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். கடப்பா லோக்சபா தொகுதியிலிருந்து அவர் நான்கு முறை தேர்வானார். புலிவெண்டுலு சட்டசபை தொகுதியிலிருந்து ஆறு முறை தேர்வாகியிருக்கிறார்.

    1980-83ல் கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். கர்நாடாகவிலுள்ள துங்கபத்திரா நதியிலிருந்து, புலிவெண்டுலு கிளை கால்வாயில் தண்ணீர் பெற்றுத் தந்தது இவரை அரசியலில் மற்றவர்களை திரும்பிப் பார்க்க வைக்கும் சாதனையாக அமைந்தது.

    1983-1985 மற்றும் 1998 - 2000 ஆகிய காலங்களில் ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். இவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    2003ல், தெலுங்கு தேசம் சார்பில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து, சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர் மூன்று மாதத்தில் 1,400 கி.மீ., தூரம் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்திய அரசியலில் இது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியானது.பிற்படுத்தப்பட்டவர்கள் வாழும் அதிகப்பகுதிகளுக்கு இந்த பாதயாத்திரையின் போது சென்றார். அதற்கடுத்த ஆண்டில் நடந்த தேர்தலில் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு இது காரணமாக அமைந்தது.

    தேர்தலில் வெற்றி பெற்ற அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளித்தார். கிடப்பில் இருந்த 70 நீர்ப்பாசன வசதிகளை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். நெல் கொள்முதல் விலையை உயர்த்தினார். சிறு தொழில் நடத்துவோருக்கு சிறப்பு சலுகைகள், சுய உதவிக்குழுக்களுக்கு ஆதரவு, ஏழை எளியோருக்கு உதவிகள் உள்ளிட்ட நலத்திட்டங்களை அவர் வாரி வழங்கினார்.

    செவ்வாய், 1 செப்டம்பர், 2009

    வாட்டர் ஸ்கூட்டர்

    .முட்டுக்காடு படகுத்துறையில் வாட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

    சென்னை: சென்னையில் உள்ள முட்டுக்காடு படகுத்துறையில் வாட்டர் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க சென்னையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் பல விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக சென்னை முட்டுக்காடு படகு குழாமில் இரண்டு வாட்டர் ஸ்கூட்டர்களை சுற்றலா கழகம் அறிமுகம் செய்தது. இதனை தமிழ்நாடு சுற்றுலா கழகத்தின் இயக்குநர் மோகன்தாஸ் துவக்கி வைத்தார். இது மணிக்கு 80-120கிலோ மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது. வாட்டர் ஸ்கூட்டர் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. முதல் நாளிலேயே ஏராமான சுற்றுலா பயணிகள் இதில் சென்று மகிழ்ந்தனர். வாட்டர் ஸ்கூட்டரில் செல்ல 5நிமிடத்திற்கு ரூபாய் 400 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.