திங்கள், 9 நவம்பர், 2009

தமிழ்நாட்டு சனி கர்நாடகாவை பிடித்தது


பெங்களூரு: கர்நாடக தலைமை நீதிபதி தினகரனுக்கு எதிராக வக்கீல்கள் போராட்டத்தில் குதித்தனர். கோர்ட்டை தொடர்ந்து நடத்துவோம் என அடம்பிடித்த நீதிபதிகளின் அறைகள் கதவை உடைத்து நீதிபதிகளை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் இங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. நிலம் ஆக்கிரமிப்பு விவகாரம் : கர்நாடக மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தினகரன். இவர் திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜ புரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் ,அளவுக்கு மீறி சொத்து சேர்த்திருப்பதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் காரணத்தினால் சுப்ரீம் கோர்ட்டுக்கு பதவி உயர்வு பெறும் நிலையில் தொய்வு ஏற்பட்டது. இவருடன் சேர்ந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். ஆனால் நீதிபதி தினகரன் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.



கோர்ட் வளாகத்தை விட்டு கிளம்பினார் நீதிபதி : இந்நிலையில் கடந்த வாரம் பெங்களூரு பார் கவுன்சில் கூட்டத்தில் நீதிபதிக்கு எதிராக கண்டணத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர் பதவியில் நீடிப்பதன் மூலம் கோர்ட் மதிப்பும் , மரியாதையும் குறைப்பதாக வக்கீல்கள் குறை கூறியுள்ளனர். இதனை காப்பாற்ற கோர்ட்டை புறக்கணிக்க முடிவு செய்வதாக அறிவித்துள்ளனர். இதன்படி கோர்ட்டை இன்று ( திங்கட்கிழமை ) வக்கீல்கள் புறக்கணித்தனர். இதனால் கோர்ட் பணிகள் பாதிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தினகரன் வழக்கை விசரித்து கொண்டிருந்தபோது கோர்ட் அறைக்குள் வக்கீல்கள் நுழைந்தனர். அங்கு அவர்கள் நீதிபதிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனையடுத்து அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. கோர்ட் வளாகத்திலேயே கோஷமிட்டதால் கோர்ட்டில் தொடர்ந்து நீதிபதி தினகரன் வழக்கை விசாரிப்பதை நிறுத்தி விட்டு கோர்ட் வளாகத்தை விட்டு கிளம்பி சென்றார். இந்நேரத்தில் இது தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்களை வக்கீல்கள் விரட்டினர். இதில் ஐ.பி.என் தொலைக்காட்சி காமிராமேன் தாக்கப்பட்டார்.



நீதிபதிகளை இழுத்த வக்கீல்கள் : கோர்ட் எண் -2 ல் இருந்த நீதிபதிகள் ஒருவர் கோர்ட் அறையின் கதவை மூடிக்கொண்டு கோர்ட் பணிகளை தொடர்ந்து நடத்தி வந்தார். இதனை அறிந்த வக்கீல்கள் கோர்ட்டின் பின்புற வழியாக கதவை உடைத்தனர். உள்ளே புகுந்த வக்கீல்கள் நீதிபதிகளை வெளியே இழுத்தனர். இதனையடுத்து பெரும் பதட்டம் தொற்றிக்கொண்டது. இதில் சில வக்கீல்கள் தலையிட்டு , நீதிபதியை காப்பாற்றினர். தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோர்ட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் திசைமாறுகிறது என்பது மட்டும் உண்மை.



வீரப்பமொய்லி கண்டனம்: மத்திய சட்ட அமைச்சர் கர்நாடகாவில் நிருபர்களிடம் பேசினார். இவர் ‌கூறுகையில் ; வக்கீல்கள் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். எந்த பிரச்னையானாலும் சட்டப்பூர்வமாகத்தான் தீர்வு காணவேண்டும். வக்கீல்கள் நீதிபதிகளுக்கு இடையூறு செய்வது கண்டிக்கத்தக்கது. நீதி்தத்துறை மிக உயர்வான மதிப்புமிக்கது என்பதை யாரும் மறக்கக்கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை: