ஞாயிறு, 22 நவம்பர், 2009

தூர தேசத்து துயரங்கள்

உலகின் 180 நாடுகளில் மூன்று கோடிக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 70 லட்சம் பேர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள் போலி ஏஜன்டுகளிடம் சிக்கி தவிக்கும் நிலையும், படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்க போராட வேண்டிய நிலையும் தற்போது தலை தூக்கி வருகிறது.



இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, கனடாவுக்கும், சவுதி அரேபியா, துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்காக செல்பவர்கள், போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில், பல்வேறு நகரங்களில், 2500 தமிழர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. இதில், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்ட 400 இந்தியர்கள் வேலையின்றி தவித்து வருவது குறித்து கனிமொழி எம்.பி., சமீபத்தில் ராஜ்யசபாவில் குரல் எழுப்பியதால், மத்திய அரசு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.



மும்பை போலி ஏஜன்டுகளை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 80 பேர் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடந்த மாதம் தமிழகம் வந்தடைந்தனர். பஞ்சாபிலிருந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 63 பேர் ஏமாற்றப்பட்டு தாயகம் திரும்ப வழியின்றி, ஆறு வருடங்களாக வீதிகளில் தவித்து வருவதாகவும், இதில் ஐந்து பேர் அங்கு இறந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



வெளிநாடுகளுக்கு அரசு மூலம் அனுப்பப்படுபவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அவ்வளவாக பிரச்னையில் சிக்குவதில்லை. "எல்லாரும் வெளிநாடு போய் சம்பாதிக்கின்றனர்; நாமும் போவோம்' என்று, படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அங்கு என்ன சம்பளம், என்ன வேலை, பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல், போலி ஏஜன்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். போலி ஏஜன்டுகளிடம் ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.



துபாய், சவுதி அரேபியா உட்பட 17 வெளிநாடுகளில் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்க, "இந்தியர்கள் நல நிதி'க்காக மத்திய அரசு நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்துடன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் ஏஜன்டுகளை தண்டிக்க போதுமான அளவில் தற்போதைய சட்டத்தில் இடமில்லை. ஏமாற்றும் ஏஜன்டுகளைத் தண்டிக்க, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளைத் தண்டிக்க, குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.



முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும், 8 சதவீதம் பேர் பிரிட்டனுக்கும், 7.6 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றனர். அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 56 சதவீதமாகக் குறைந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படிப்பு உதவி வசதி, படிக்கும் போதே வேலையும் தேடிக்கொள்ளும் நிலையும் உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த 95 ஆயிரம் மாணவர்கள் தற்போது அங்கு படித்து வருகின்றனர்.



இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது, 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இனவெறி தாக்குதலும் நடத்தப்பட்ட போதும் கூட, அந்நாட்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனவெறி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்களுக்கான விதிமுறைகளை அந்நாடு, கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கியுள்ளதால், கடந்த மூன்று மாதங்களில் 41.9 சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.



வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு, இந்தியர்களாலேயே பிரச்னை ஏற்படும் நிலையும் தலை தூக்கியுள்ளது. மலேசியாவில் இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்கவும் அங்குள்ள இந்தியர்கள் ஒன்றிணைந்து, "இன்ட்ராப்' என்ற அமைப்பு மூலம் இரண்டாண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இதில், 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த இன்ட்ராப் தலைவர்களின் ஒருவரான உதயகுமார், "மனித உரிமை கட்சி'யை கடந்த மே மாதம் துவங்கினார். "ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதே கட்சியின் வேலையாக இருக்கும்' என்று, உதயகுமார் அறிவித்துள்ளார். இது, வரவேற்கப்படக் கூடிய முடிவு என்றாலும் ஆளும் கட்சி அதிருப்தியில் உள்ளதால், இந்தியர்களின் ஒற்றுமை பலத்தை மறைமுகமாகக் குறைக்கும் நோக்கில் தனேந்திரன் தலைமையில், "மலேசிய மக்கள் சக்தி' என்ற பெயரில் புதிய கட்சியை அந்நாட்டு பிரதமர் துவங்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.



பல கட்சி கூட்டணி ஆட்சி நடக்கும் மலேசியாவில், இந்தியர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம். அரசியல் மூலம் தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. ஆளும் அரசை அனுசரித்தே காரியம் சாதித்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. எனவே, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் செல்பவர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

நன்றி:

வீ.சக்கரபாணி

கருத்துகள் இல்லை: