திங்கள், 20 செப்டம்பர், 2010

விண்வெளியில் உங்கள் புகைப்படம் ! ஒரு அரிய வாய்ப்பு

     விண்வெளியில் தங்கள் புகைப்படம் மிதக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக, ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான "நாசா' அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புகைப்படத்தை மட்டுமல்லாமல், பெயரையும் விண்வெளியில் மிதக்க விட முடியும்.


விண்வெளிக்கு பறக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, நமது முகமாவது பறந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அறிமுகப்படுத்தியுள்ளது. face in space  என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், ஒருவர் தனது புகைப்படத்தையோ அல்லது பெயரையோ விண்வெளியில் பறக்க விட முடியும்.
 இத்திட்டத்திற்காக https://faceinspace.nasa.gov என்ற பெயரில் ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்திற்கான  சுட்டி  தங்களின் புகைப்படத்தை விண்வெளிக்கு அனுப்ப விரும்புபவர்கள் இந்த இணையதளத்தில் தங்களின் புகைப்படத்தை  "அப்லோடு' செய்ய வேண்டும்.இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் புகைப்படங்கள் மற்றும்  பெயர்களை, விண்வெளிக்கு கொண்டு செல்ல டிஸ்கவரி எஸ்.டி.எஸ்.,-133 மற்றும் எண்டோவர் எஸ்.டி.எஸ்., - 134 என்ற இரண்டு விண்வெளி ஓடங்கள் பயன்படுத்தப்படும். 

"இத்திட்டம் பொதுமக்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்களை விண்வெளி வீரர்கள் கொண்டு சென்று, பூமியின் வட்டப்பாதையில் மிதக்க விடுவார்கள். விண்வெளியில் இருந்து ஓடம் திரும்பியதும், விண்வெளிக்கு சென்று வந்த கமாண்டரின் கையெழுத்துடன் ஒரு நினைவுச் சான்று இன்டர்நெட் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம், புகைப்படம் அனுப்பியவர் தனது புகைப்படம் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது என்ற இனிய நினைவுகளை பெற முடியும். அவர்  மறைந்தாலும், அவரது புகைப்படம் நீண்ட காலத்திற்கு விண்வெளியில் மிதந்து கொண்டிருந்து, வரலாற்றில் அவரது உருவத்தை  பதிய வைக்கும்'.


 

வியாழன், 16 செப்டம்பர், 2010

பெற்றோரின் டுவிட்டர் மோகம் : சிக்கியது பச்சிளங்குழந்தை



ஆடை இல்லா மனிதன் அரை மனிதன் என்பது பழமொழி, 
ஆனால் தற்போது சமூக வலை தளங்களைப் 
பயன்படுத்தாதவன் மனிதனல்ல - புது மொழி என்பதுபோல 
சமூகவலை தளங்கள் இன்றைய நாகரீக மக்களை பெரிதும் 
ஆட்கொண்டுள்ளன. 

அதற்கு ஒரு சான்றாக, பஞ்சாப் மாநிலம் 
ஜலந்தரில் உள்ள குர்சிம்ரன் என்ற பெண் தான் டுவிட்டரில் 
இணைந்ததோடு மட்டுமல்லாமல், பிறந்து 2 நாட்களே ஆன 
ஹினாயத் என்று பெயர் சூட்டப்பட்ட தனது 
பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் இணைத்துள்ளார். 

டுவிட்டர்அட்பேபிஹினாயத் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள 
இந்த டுவிட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் 
எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. 
இதுகுறி்தது குர்சிம்ரன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது : 

தான் கர்ப்பமாக இருந்தபோது, என் டுவிட்டர் நண்பர்கள் எனக்காக 
பிரார்த்தித்ததாகவும், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் 
விதமாக, தங்களது பச்சிளங்குழந்தையையும் டுவிட்டரில் 
இணைத்து, அவளது போட்டோக்களையும் டுவிட்டரில் 
இணைத்ததாக அவர் அதில் தெரிவித்தார். தாங்கள், டுவிட்டரில் 
பேபிஹினாயத் சேர்ந்த சில நிமிடங்களிலேயே, அவருக்கு 
உலகின் பலபகுதிகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் 
உள்ளதாகவும், அவர் மேலும் கூறுகையில், டுவிட்டரில் 
செய்திகள் உடனுக்குடன் பரிமாறப்படுவதால், நட்புறவு எளிதில் 
விரிவடைவதாகவும், தங்கள் குழந்தைக்கு ஹினாயத் என்ற 
பெயர் கூட டுவிட்டரில் உள்ள நண்பர் கூறித்தான் வைத்தது 
என்றும், இதன்மூலம், டுவிட்டரில் பிறந்து 2 நாட்களே ஆன என் 
குழந்தைக்கும் டுவிட்டரில் அக்கவுண்ட் உள்ளது குறித்து 
பெருமையடைவதாக குர்சிம்ரன் தெரிவித்துள்ளார். 

நன்றி :
தினமலர்

 

சனி, 11 செப்டம்பர், 2010

பூமியை நோக்கி வரும் விண் கற்கள் !


இரண்டு விண்கற்கள் இன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ கூறியிருப்பதாவது: 

பிரபஞ்சத்தில் ஏராளமான கோள்கள், துணைக் கோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவற்றில் 2 விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதை டஸ்கன் நகரில் உள்ள கேடலினா விண்ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. 2010ஆர்எக்ஸ்30 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல் சுமார் 32 முதல் 65 அடி நீளம் இருக்கலாம் என்று தெரிகிறது.
இது  பூமியை 2.46 லட்சம் கி.மீ. தூரத்தில் புதன்கிழமை கடக்கும். 2010ஆர்எப்12 என்ற கல் 20 முதல் 46 அடி நீளம் இருக்கும் என்று தெரிகிறது. இது 78 ஆயிரம் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லும். பிரபஞ்சத்தை பொருத்தவரை இந்த தொலைவு மிகமிக குறைவு. அதனால், ‘நூலிழையில்’ பூமி தப்பியது என்றே கூறலாம். இந்த கற்களால் பூமிக்கு ஆபத்து இல்லை

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !

வலைப்பூ நண்பர்கள்,வலைப்பூ பதிவர்கள், வலைப்பூ 
வாசகர்கள், மற்றும் வலைப்பூ திரட்டிகளான 


தமிழ்மணம்,இன்ட்லி,தமிழ்வெளி இன்னும் பிற 
உங்கள்  அனைவருக்கும் என்னுடைய  

" இனிய ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் "  

நட்புடன்
 

திங்கள், 6 செப்டம்பர், 2010

3D ஒரு அதிசயம் : இனி படங்களை தொட்டுபார்க்கலாம்!



 
3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து 
வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் 
வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் 
கேமராக்கள் வந்துவிட்டன. 

3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.
இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு
தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல்
தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 

திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை 
எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் 
பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது 
கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே 
பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் 
மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். 
பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் 
இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. 

இதன்  அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். 
முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் 
இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.
 

சனி, 4 செப்டம்பர், 2010

சூப்பர் கம்ப்யூட்டர் : சீனா சாதனை !

 
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பரிவு பல்கலை கழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. 

தியான்கி-1 என பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. கடந்த 2009 ம் ஆண்டு முதலே இதற்கான பணிகளை துவக்கி விட்டிருந்தது. கடந்த ஆண்டின் உலகின் முதல் 500 சூப்பர் கம்ப்யூட்டர் களில் 5-வது இடத்தை இந்த வகை கம்ப்யூட்டர் பிடித்துள்ளது. 

1.3மில்லியன் மக்கள் 88 ஆண்டுகளில் போட்டு வந்த கணக்குகளை இந்த வகை கம்ப்யூட்டர்கள் ஒரு செகண்டிலேயே போட்டு முடித்து விடும் என்பது இதன் முக்கிய அம்சமாகும். மேலும் 27 மில்லியன் புத்தகங்களை இதனுள் அடக்கி விடலாம் என்பது கூடுதல் தகவல். 

இந்த கம்ப்யூட்டர் மூலம் அனிமேஷன் , பயோ மெடிக்கல், வானுலகை ஆராய்வதற்கான வளர்ச்சி , செயற்கை கோள்களை கட்டுப்படுத்துதல், நீர்வள ஆதாரங்களை கண்டறியப்பயன்படுத்தவும் முடியும்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் ? பகுதி-2

என்ன நடக்கிறது காஷ்மீரில் ? முதல் பகுதியை படிக்க இந்த சுட்டியை
அழுத்தவும். 

தொடர்ச்சி.......

இந்தியா,பாகிஸ்தான்,இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சு வார்த்தையில் காஷ்மீரிகளைப்  பிரதிநிகளாக கூட அழைப்பது இல்லை.ஆனால் இரு தேசங்களுக்கும் இடையிலான போரில் இதுவரை
75  ஆயிரம் காஷ்மீரிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். காஷ்மீரின் பல பகுதிகளில் இரவு 9  மணிக்கு மேல் விளக்கு ஏற்றக்கூடாது.அங்கு பயன்படுத்தப்படும் செல் போன்களில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்ப முடியாது.

எந்த நேரத்திலும், யார் வீட்டிலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் ராணுவத்திற்கு உண்டு.சித்தரவதையால் கொல்லப்பட்ட உடல்கள் வீதிகளில் திடீர்,திடீர் என வீசப்படும்.எல்லைக்கோட்டிற்கு அந்தப் பக்கம் இருக்கும் உறவினர்களைப் பார்க்க வேண்டுமானால் பாஸ்போர்ட்டும்,விசாவும் வாங்கவேண்டும்.அங்கு துப்பாக்கி சத்தம் கேட்காத நாள் என ஒரு நாள் கூட இல்லை.

தற்போதைய பிரச்சினையின் தொடக்கம் எது ? காஷ்மீருக்கு நேரடியாகச் சென்றுவந்தவரும்,அதைப்ப் பற்றி தொடர்ச்சியாக எழுதிவருபவருமான பேராசிரியர் அ.மார்க்ஸ் சொல்வதைக் கேளுங்கள்." கடந்த ஏப்ரல் மாதம் "மச்சில்" என்ற ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை தினம் 500  ரூபாய் ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி இந்திய ராணுவத்தினர் அழைத்துச் சென்றனர்.இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

"அவர்கள் தீவிரவாதிகள் " என வழக்கம் போல ராணுவம் அறிவித்தது.ஆனால்,அது அப்பட்டனமான கொலை என்பதும்,தங்களின் பதவி உயர்வுக்காக இராணுவத்தினர் அப்பாவிகளைச் சுட்டு கொன்றதும் மிக விரைவில் ஆதாரத்துடன் அம்பலமானது. காஷ்மீர் முழுவதும் இது மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.இளைஞர்கள் முன்னணியில்  இருந்து ஆக்ரோசத்துடன் போராடினார்கள். ஆனால் ஆயுதப் போராட்டமாகவோ,
ஆர்பாட்டம்,உண்ணாவிரதம்,என்பதாகவோ,இல்லை.
போராட்டம் தன்னெழுச்சியான தெரு சண்டையாக இருந்தது.

இளைஞர்கள் திரண்டு நின்று ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் மீது கற்களை வீசித் தாக்கினார்கள்.அவர்கள் மீது துணை ராணுவப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,கடந்த  60  நாட்களில் மட்டும்  52  பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.அதில் சிறுவர்களும் அடக்கம்.இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் தலைகளில் குடங்களுடனும்,கைகளில் கற்களுடனும் சாலைகளில் திரள்கின்றனர்.காயம்பட்டு மருத்துவமனைகளில் இருப்போருக்கு ரத்த  தானம் அளிக்க மக்களே முகாம்கள் அமைத்துள்ளனர்.போராடுபவர்களின் உணவுக்கு பெரிய அளவில் சமூக உணவுக் கூடங்களையும் அமைத்துள்ளனர்.

காஷ்மீர் வரலாற்றில் இப்படி ஒரு போராட்டம் இதுவரை நடந்தது இல்லை.

விவரம் அறிந்த வயதில் இருந்து ராணுவக் கெடுபிடி,கடும் அடக்குமுறை
மனித   உரிமை மீறல்களுக்கு மத்தியில் வளர்ந்தவர்கள் அவர்கள்.வாழ்வின் பாதி நாட்களை ஊரடங்கு வாழ்வில் கழித்தவர்கள். தற்போதைய ஆக்ரோசமான எதிர்ப்புக்கு இதுதான் பின்னணி.ஆனால், அரசு இதை இந்தக் கோணத்தில் அணுகத் தயாராக இல்லை. " வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது,லஷ்கர்-இ-தொய்பா பின்னணியில் உள்ளது" என்று சொல்லிக்கொண்டு இருப்பது பிரச்சினையை தீர்க்காது.அங்கு நடப்பது அரசியல் போராட்டம்.முதலில் இதை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போதைய காஷ்மீரத்துப் போராட்டங்கள் எந்த திசையில் செல்லும் என யாராலும் கணிக்க முடியவில்லை. யார் சொல்லியும் அதை நிறுத்தமுடியாது.ஏனெனில்,அது யார் சொல்லியும் தொடங்கியது அல்ல,இந்திய அரசு இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.மக்களே மக்களுக்காக  மக்களைக் கொண்டு நடத்தும் போராட்டத்தை எப்படி அடக்குவது ? ஒரே வழி,அவர்களின் அரசியல் கோரிக்கையைத் தீர்பதுதான்! என்கிறார் மார்க்ஸ்.

அந்த அழகிய பள்ளத்தாக்கின் அமைதி எப்படியேனும் மீட்கப்பட வேண்டும் என்பது நம் அனைவரின் ஆசை!.
டிஸ்கி: ஆனந்த விகடனில் வெளிவந்த இந்த கட்டுரையை வலைப்பூ வாசகர்களுக்காக அப்படியே பதிவு செய்துள்ளேன்.
நன்றி: ஆனந்த விகடன்  

நட்புடன்