திங்கள், 30 நவம்பர், 2009

துபாய் பொருளாதார நெருக்கடி: 20 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் பணி நீக்கம் நோட்டீசு அனுப்பினர்

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்து உள்ளன.
 
பொருளாதார நெருக்கடியால் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறுத்திவிட்டனர்.
 
இந்த பணிகளில் 60 லட்சம் பேர் ஈடுபட்டு வந்தனர். அவர்களில் 40 லட்சம் பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதில் 20 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
 
இவர்களில் ஏராள மானோருக்கு அந்தந்த நிறுவனங்கள் ஏற்கனவே வேலை நீக்க நோட்டீசு அனுப்பி விட்டது. விடு முறையில் ஊருக்கு வந்து இருப்பவர்களுக்கு நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்களுக்கு இனி வேலை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம் என செல்போன் எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலம் அனுப்பி விடுகின்றனர்.
 
எனவே விடுமுறையில் வந்து இருப்பவர்கள் அனைவரும் வேலை பறி போய்விடுமோ என்று கலக்கத்தில் உள்ளனர்.
 
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சாஜித் என்பவர் பக்ரீத்துக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரது இ மெயிலுக்கு அவர் வேலை பார்த்த நிறுவனம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.
 
அதில் உங்கள் வேலை காண்டிராக்டை ரத்து செய்து விட்டோம், வேலைக்கு வழங்கிய அனுமதியும் ரத்தாகி விட்டது. நீங்கள் துபாய்க்கு திரும்பி வரவேண்டாம். உங்கள் சம்பள பாக்கி, உங்கள் உடமைகள் அனைத்தும் தபால் மூலம் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
 




இதுபற்றி சாஜித் கூறும் போது எங்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் தரவில்லை. இப்போது வேலையை விட்டே நீக்கி விட்டார்கள். எனது நண்பர் கள் பலருக்கும் இதே போல நோட்டீசு வந்துள்ளது. எங்கள் கனவெல்லாம் வீணாகி விட்டது என்றார்.
 
துபாயில் இருக்கும் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்வது அதிகமாக இருந்தது. சமீப காலமாக அது குறைந்து வந்தது. பொருளாதார நெருக்கடியும் முதலீடு கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: