வியாழன், 26 நவம்பர், 2009

முடிந்த தொடர்... முடியாத வரலாறு: யாருக்கு ?


இலங்கை வன்னிப் பகுதியில் வாழ்ந்த பண்டாரக வன்னியன் என்ற தமிழ் மன்னரின் கதை முடியாத வரலாறாக வாழும் என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இன்று விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த தினம். அதை நினைவில் கொண்டு முதல்வர் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை எழுதியுள்ள கடித விவரம்: "முரசொலி'யில் இரண்டாவது முறையாக வெளிவந்துகொண்டிருந்த "பாயும்புலி பண்டாரக வன்னியன்' என்ற வரலாற்று காவியம் முடிவடைந்துவிட்டது. ஆனால், அந்த வீர காவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில், வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், "நானும் தமிழன் தானே' என்று கூறுகிற காக்கை வன்னியனை நோக்கி, "நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் ரத்தத்தால் நீ தமிழன் தான்! ஆனால் சூடு, சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!' என்று சினந்து கூறுவதாக அமையும். இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய நிதியமைச்சர் க. அன்பழகன், ""இது இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது'' என்று குறிப்பிட்டுள்ள்ர். மற்றொரு இடத்தில் வெள்ளைக்கார மேஜர், "எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே, தாங்களாகவே பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான்!' என்று கூறுவதாக அமையும். ""இந்தக் கூற்று எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது'' என்று தான் கொண்ட அதிர்வை அன்பழகன் அணிந்துரையில் எடுத்துக்காட்டுகிறார். இந்த வீரனது சிலை திறப்பு விழா 1982-ம் ஆண்டு நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன், ""வன்னிப் பிரதேச மக்களுக்கு மட்டுமின்றி, நம்பிக்கை தளர்ந்து போயிருக்கும் ஈழத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக் குரலும் அதிகரிக்க இச்சிலை உதவும். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனம் கண்டு கொள்ளவும், புதிய தலைவர்கள் தோன்றவும் இந்த சிலை வழிவகுக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்றுவிட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் "பாயும் புலி பண்டாரக வன்னியன்' தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரம் கொப்பளிக்கும் பதில்! அந்த நாவலின் முடிவில், குருவிச்சியின் மூச்சு நின்று போனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டதாக வரும். மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள், இலட்சியத் திருவிளக்காய், பிணக்கோலம் பூண்டு பண்டாரகனின் குதிரையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தாள்; அவள் உயிருடன் இருப்பதாகவே கருதிக்கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்றுகொண்டிருந்தனர் என்று முடியும். காட்டுப்பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட, அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே, அது வாழும் வரலாறு என்று முதல்வர் கருணாநிதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: