சனி, 31 அக்டோபர், 2009

உலகின் மிக பெரிய பயணிகள் கப்பல்


உலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் ஓயாசிஸ் பின்லாந்து நாட்டில் உள்ள தூர்கு தளத்தில் கட்டப்பட்டுள்ளது. 360 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பல் 16 அடுக்கு மாடிகளை கொண்டது.
2700 அறைகள் உள்ளது. இதில் 6,300 பேர் பயணம் செய்யலாம். 2100 பேர் இக்கப்பலில் பணிபுரிகின்றனர். இது ரூ.7500 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இதில், 4 நீச்சல் குளங்கள், கைப்பந்து, கூடைப் ந்து, விளையாட்டு மைதானங் களும் உள்ளன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்க கூடிய பூங்காக்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளன.
கோல்ப் விளையாட்டு மைதானமும் அமைக்கப் பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 780 பேர் அமரக்கூடிய கலை அரங்கமும் உள்ளது.
இக்கப்பல் பின்லாந்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடாவுக்கு இன்று தனது பயணத்தை தொடங்கியது. இதில் 6300 பேர் பயணம் செய்கின்றனர்.

இது வருகிற 10-ந் தேதி அமெரிக்கா சென்ற டைகிறது. அங்கு இக்கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்படு கிறது.

கிணறு வெட்ட பூதம் வந்த கதை


பாஜக ஆட்சியில் ரூ. 1.6 லட்சம் கோடி டெலிகாம் ஊழல்: ஆ. ராசா


புது தில்லி, அக். 30: தொலைத் தொடர்புத் துறையில் பாஜக ஆட்சியில் ரூ. 1,60,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா குற்றம் சாட்டியுள்ளார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். டெலிகாம் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து இப்பதவியிலிருந்து ஆ. ராசா விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சிபிஐ விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டுமெனில் அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலக வேண்டும் என பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ராசாவை பதவியிலிருந்து நீக்க பிரதமருக்கு துணிச்சல் இருக்கிறதா? என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கேட்டிருந்தார். பிரதமரின் ஆலோசனையின் பேரிலும் முன்னர் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ராசா திரும்பத் திரும்ப கூறிவந்தார். தற்போது முதல் முறையாக பாஜக ஆட்சியில் டெலிகாம் ஊழல் நடைபெற்றதாக ராசா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாஜக தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது செல்போன் சேவை அளித்த நிறுவனங்களுக்கு அலைக்கற்றைகள் இலவசமாக ஒதுக்கப்பட்டன. டெலிகாம் வரலாற்றில் நடைபெற்ற மிகப் பெரிய முறைகேடு இதுவேயாகும். 4.4 மெகாஹெர்ட்ஸ் அளவுக்கு அலைக்கற்றை சில நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. பாஜக ஆட்சியின்போது இலவசமாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கு ஆதரவாக பாஜக தலைவர் அருண் ஜேட்லி வாதாடி வருவதாகவும் ராசா கூறினார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முரண்பட்ட முடிவுகள் உருவானதற்கும் பாஜக அரசுதான் காரணம். ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வது தொடர்பான முடிவை முதலில் கிடப்பில் போட்டதும் பாஜகதான். பின்னர் மிகவும் வசதியான சமயத்தில் 500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பாஜக அமைச்சரவை ஒதுக்கியது. மேலும் 8 மெகாஹெர்ட்ஸிலிருந்து 10 மெகாஹெட்ர்ஸ் வரையிலான அளவை உயர்த்தினாலும் அதற்கான வருவாய் பகிர்வு வரம்பை உயர்த்தவில்லை. 2001-ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராயிருந்த பிரமோத் மகாஜன் 6.2 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை கூடுதல் கட்டணமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கினார். இது டெலிகாம் கமிஷன் பரிந்துரையை மீறி மேற்கொண்ட நடவடிக்கையாகும். இதேபோல கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடும் நடைபெற்றுள்ளது. 2004-ம் ஆண்டு இத்துறை அமைச்சராயிருந்த அருண் செüரி, லைசென்ஸ் கட்டணத்தை 2 சதவீதமாகக் குறைத்தார். அருண் செüரி எடுத்த முடிவினால் மட்டும் ரூ. 900 கோடி இழப்பு ஏற்பட்டதாக ராசா குற்றம் சாட்டினார்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

சந்திரனில் மனிதன் கால் பதித்த சம்பவம்


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சி, மனிதன் சந்திரனுக்குச் சென்று கால்பதித்து நடந்ததுதான். பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சந்திரன். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு, தண்ணீர் முதலியவை அங்கு இல்லை. எனவே, மனிதன் சந்திரனுக்குப்போய் வருவது என்பது நடக்க முடியாத காரியம் என்றே நீண்ட காலமாக எண்ணப்பட்டு வந்தது.
ஆயினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சிகளில், அமெரிக்காவும், ரஷியாவும் 20_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டன.
ரஷியாவின் சாதனை
விண்வெளிச் சோதனையில், ஆரம்ப வெற்றிகள் ரஷியாவுக்கே கிடைத்தன. வானவெளியில், பூமியைச் சுற்றி முதன் முதலில் விண்வெளிக் கப்பலை ("ஸ்புட்னிக்") பறக்கவிட்டது ரஷியா தான். 1957_ம் ஆண்டு அது பூமியைச் சுற்றிப் பறந்தது.
பின்னர் 12_4_1961_ல் காகரின் (வயது 27) என்ற ரஷிய வானவெளி வீரர் ராக்கெட்டில் பூமியைச் சுற்றிப் பறந்துவிட்டு பத்திரமாகத் திரும்பி வந்தார். (இந்த மாபெரும் சாதனையாளர், பின்னர் விமான விபத்து ஒன்றில் பலியானார்). 5_5_1961_ல் ஷெப்பர்டு என்ற வானவெளி வீரரை ராக்கெட்டில் அமெரிக்கா அனுப்பியது. அவர் பூமியைச் வெற்றிகரமாகச் சுற்றினார்.
வானவெளியில் பூமியைச் சுற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் வாலண்டினா தெரஸ்கோவா (வயது 26). ரஷியாவைச் சேர்ந்த இவர் 16_6_1963_ல் பூமியைச் சுற்றிப் பறந்தார்.
இப்படி வானவெளி ஆராய்ச்சிகளில் ரஷியா முன்னணியில் இருந்தபோதிலும், "சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் வெற்றி பெறப்போவது அமெரிக்காதான்" என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கூறினார்.
அவர் சொன்னபடியே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ம்ஸ் டிராங் என்ற வானவெளி வீரர்தான் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன். இந்த அதிசயம் 1969 ஜுலை 21_ந்தேதி நடந்தது. அன்று அமெரிக்க வான வெளி வீரர்கள் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கினார்கள். சந்திரனில் முதன் முதலாக நடந்த பெருமை ஆர்ம்ஸ் டிராங்கை சாரும்.
இருவரும் 21 மணி 36 நிமிடம் 21 விநாடிகள் சந்திரனில் இருந்துவிட்டு, 48 பவுண்டு எடையுள்ள கற்களை சந்திரனில் இருந்து எடுத்துக் கொண்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:-

15_7_1969:_ சந்திரனுக்கு மனிதன் செல்லும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஒத்திகைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. நாளை புறப்படுகிறார்கள்.
16_7_1969 இரவு 7_02 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது. கென்னடி முனையில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அதில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோர் இருந்தனர்.
17_ந்தேதி: ராக்கெட் சந்திரனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாதி தூரத்தை ராக்கெட் தாண்டி விட்டது. ராக்கெட்டில் இருக்கும் 3 பேரும் நலமாக இருப்பதாகவும், சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பூமிக்கு தகவல் கொடுத்தனர். ராக்கெட்டின் வேகம் மணிக்கு 3,500 மைல்.
18_ந்தேதி: சந்திரனை ராக்கெட் நெருங்கிவிட்டது.
19_ந்தேதி: பூமியில் இருந்து 2 லட்சம் மைல்களை கடந்து ராக்கெட் சந்திர மண்டலத்துக்குள் புகுந்தது. சந்திரனை ராக்கெட் சுற்றத்தொடங்கியது.

20_ந்தேதி: மாலை 6_30 மணி அளவில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் "தாய் ராக்கெட்"டில் இருந்து, சந்திரனில் இறங்கும் குட்டி ராக்கெட் ("பூச்சி வடிவ வண்டி")டுக்குள் சென்றனர். பிறகு 11.47 மணிக்கு தாய் ராக்கெட்டுடன் இருந்து குட்டி ராக்கெட்டை பிரித்து சந்திரனை நோக்கி பயணமானார்கள். தாய் ராக்கெட்டில் காலின்ஸ் இருந்தார்.
குட்டி ராக்கெட் 2 மணி நேரம் பறந்து சென்று நள்ளிரவு 1.47க்கு சந்திரனில் இறங்கியது. ஆர்ம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் பூச்சி வண்டிக்குள்ளேயே விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.
21_ந்தேதி உலகமே வியக்கும் அதிசயம் நடத்தப்பட்டது. அன்று காலை 8_26 மணிக்கு பூச்சி வடிவ வண்டியின் கதவை திறந்து ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் காலை வைத்தார். நிலாவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர்.
பிறகு ஆல்ட்ரினும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். இருவரும் சந்திரனில் சிறிது தூரம் நடந்தார்கள். சந்திரனில் கல், மண் முதலியவற்றை சேகரித்தார்கள். பிறகு சந்திரனில் அமெரிக்க கொடியை நாட்டினார்கள். அதோடு தாங்கள் சந்திரனில் இறங்கியதை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை பதித்தார்கள்.
அவர்கள் இருவரும் மீண்டும் பூச்சி வடிவ ராக்கெட்டுக்கு வந்து தாய் ராக்கெட்டுடன் இணைந்தார்கள். பிறகு பூமியை நோக்கி புறப்பட்டனர். 24_ந்தேதி:_ இரவு 10_19 மணிக்கு அந்த ராக்கெட் பத்திரமாக கடலில் வந்து இறங்கியது. உலகமே அவர்களை பாராட்டியது.
சந்திரனில் மனிதன் இறங்கிய சோதனை வெற்றி பெற்றுவிட்டதால் அமெரிக்கா தொடர்ந்து ராக்கெட்டுகளை பறக்கவிட்டது. அடுத்து சென்ற அமெரிக்க வான வெளி வீரர்கள், சந்திரனில் சிறு வண்டியை ஓட்டிச்சென்று பல்வேறு சோதனைகளை நடத்தினார்கள்.

பிரதமற்கு ஜெயலலிதா சவால்?

ராசாவை நீக்க பிரதமருக்கு துணிவு இருக்கிறதா?: ஜெயலலிதா கேள்வி


சென்னை, அக். 29: "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் புகாருக்கு ஆளாகியுள்ள மத்திய அமைச்சர் ஆ. ராசாவை பதவி நீக்கம் செய்யும் துணிவு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருக்கிறதா என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக ரூ.60 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நாட்டிற்கு இழப்பு ஏற்பட்டது. எனவே, இதில் உள்ள முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய கண்காணிப்பு ஆணையம் கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படையில் தொலைதொடர்பு அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அண்மைக் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மிகப்பெரிய ஊழலுக்கு தலைமை தாங்கிய மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா, பதவி விலக முடியாது என அறிவித்துள்ளார். இது பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடைபெறாது என்பதற்கு இடமளிக்கிறது. அவர் அவ்வாறு அறிவித்ததில் வியப்பேதும் இல்லை. தி.மு.க.வில் இருக்கும் ஒருவரிடமிருந்து யாரும் எவ்வித நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. பிரமதர் மன்மோகன் சிங், ராசாவை ராஜிநாமா செய்யச் சொல்லவில்லை. இது ஆச்சர்யம் அளிக்கிறது. தனக்கு முன்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பின்பற்றிய அதே முறையைத்தான் தானும் பின்பற்றியதாகவும், பிரதமரின் அனுமதியுடன்தான் அனைத்தும் நடைபெற்றதாகவும் ராசா பகிரங்கமாக கூறியுள்ளார். இதை மன்மோகன் சிங் ஒப்புக் கொள்கிறாரா? அதனால்தான் ராசா ராஜிநாமா செய்ய வேண்டாமென்று நினைக்கிறாரா? அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நீக்கினால்தான் இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் என்று நான் ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தேன். இல்லையெனில், மத்திய அமைச்சர் ராசா சொல்வதை கேட்கக்கூடிய சில துறை அலுவலர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, சிபிஐ தனது பணியை நிறுத்தி விடும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் யாரும் பயனடையவில்லை எனில், அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏன் அடிமாட்டு விலைக்கு அரசு விற்றது? யாராவது ஆதாயம் அடைந்தார்கள் என்றால், யார் அந்த பயனாளிகள்? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால், சிபிஐ விசாரணைக்கு எந்த அர்த்தமும் இருக்காது. தொலை தொடர்பு துறையின் சில அதிகாரிகளிடம் மட்டுமின்றி, அத்துறை அமைச்சர் ஆ. ராசாவின் பங்கு குறித்தும் சிபிஐ ஆழமாக விசாரிக்க வேண்டும்.தொடர்புகள் பற்றி விசாரணை... 2004-ல் ராசாவுக்கு நெருக்கமானவர்களால் வெறும் ஒரு லட்ச ரூபாய் பங்கு முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பல ஆயிரம் கோடிகள் மதிப்புடையதாக விளங்கும் "கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ்' கட்டுமான நிறுவனத்திற்கும், "ஸ்வான் டெலிகாம்' நிறுவனத்திற்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். இ.டி.ஏ. குழுமம், ஸ்வான் டெலிகாம் நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு, இ.டி.ஏ. மற்றும் முதல்வர் கருணாநிதிக்கும் இடையேயான தொடர்பு ஆகியவை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இது போன்ற முழுமையான விசாரணை நடத்தினால்தான், தலைமைச் செயலக வளாகம், புதிய மாநில நூலகம், நெடுஞ்சாலைத் துறை மேம்பாலங்கள் உள்பட பல்வேறு முக்கியக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் இ.டி.ஏ. குழும இயக்குநர்களுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் உள்ள நிதித் தொடர்புகள் குறித்த உண்மை நிலையும் தெரியும். மேலும் தமிழக அரசின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள, சர்ச்சைக்குரிய, அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளது இ.டி.ஏ. குழுமத்தின் "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம்தான் என்பதும் தெரிய வரும். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் "ஸ்டார் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தை பதிவு செய்ததும் இந்த இ.டி.ஏ. குழுமம்தான் என்பதும் வெளிப்படும். 1960, 1970-ம் ஆண்டுகளில் இருந்த "ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் ஒரு பகுதிதான் இ.டி.ஏ. குழுமம். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, 1972-73-ம் ஆண்டுகளில் அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் மற்றும் இதர மேம்பாலங்கள் கட்டும் பணியையும் இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைத்தார். இதில் உள்ள சில தொடர்புகள் குறித்து சர்க்காரியா விசாரணை ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ஆனால், இதில் உள்ள எல்லா உண்மைகளும் வெளிச்சத்திற்கு வர வேண்டுமானால், ராசாவை மத்திய அமைச்சரவையிலிருந்து தூக்கி எறியும் துணிச்சல் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வர வேண்டும். இதை மன்மோகன் சிங் செய்வாரா? என ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

வியாழன், 29 அக்டோபர், 2009

யாஹுவை ஜிமெயில் முந்தியது


இந்தியாவில் இமெயில் பயன்பாட்டில் யாஹூவை பின்னுக்குத் தள்ளி ஜிமெயில் முன்னுக்கு வந்துள்ளது. இதுவரை மிகவும் விசுவாசத்துடன் யாஹூ மெயிலைப் பயன்படுத்தி வந்த பலர் ஜிமெயிலுக்குத் தாவி உள்ளனர். வைஸி சென்ஸ் (ViziSense) என்ற ஆன்லைன் கண்காணிப்பு நிறுவனம் ஒன்று இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இப்போது அதிகம் பயன் படுத்தப்படும் இமெயில் கிளையண்ட்டாக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் இடம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு கோடியே 80 லட்சம் பேர்களுக்கும் மேலாக ஜிமெயிலை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ற மாதம் வரை யாஹூ தான் முதல் இடத்தில் இருந்து வந்தது.
யாஹூ மெயிலின் நேயர்கள் எண்ணிக்கை இப்போது ஒரு கோடியே 68 லட்சமாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் இதன் வாடிக்கையாளர்கள் 8% குறையத் தொடங்கினர். அதே நேரத்தில் ஜிமெயில் பயனாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 3% அதிகரிக்கத் தொடங்கியது. அக்டோபரின் முதல் வாரத்திலேயே ஜிமெயில் முதல் இடத்திற்கு வந்தது. அதே போல விண்டோஸ் லைவ் மெயில் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி 8% ஆகும்.
ரீடிப் மெயில் 62 லட்சத்து 50 ஆயிரம் பேர்களுடன் இயங்கி மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் உலக அளவில் யாஹூ மெயில் இடத்தை ஜிமெயில் பிடிக்க இன்னும் சில மாதங்களாகலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் லைவ் மெயில் இரண்டாவது இடத்தில் உள்ளது.



அமெரிக்காவில் ஜிமெயில் வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருவதாக அங்குள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. எனவே யாஹூவும் மைக்ரோசாப்டின் விண்டோஸ் லைவ் மெயிலும் ஏதேனும் அதிரடியான மாற்றங்களையும் வசதிகளையும் கொண்டு வரவில்லை என்றால், நிச்சயம் உலக அளவில் ஜிமெயில் முதல் இடத்தைப் பிடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம். இதனால் தான் அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவின் பிரபலமான ஆங்கில நாளிதழில் யாஹூ ஒரு முழுப் பக்க விளம்பரத்தினை க் கொடுத்தது. தன்னிடம் விசுவாசமாக உள்ள மெயில் பயனாளர்களைத் தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள யாஹு எடுத்த முயற்சியே இது என்று இந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் எண்ணுகின்றனர்.

காலம் கடந்த நடவடிக்கை ?

ஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் பயங்கர மோதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தானாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கையும் எடுத்தது. இதற்கிடையில், 'போலீஸ் அதிகாரிகள் இருவரை சஸ்பெண்ட் செய்வது அரசைப் பொறுத்தது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்டையே அணுகுமாறு உத்தரவிட்டது. தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வக்கீல் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதியை, ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே நியமித்தார். இந்த வழக்கில் 20 நாட்களாக விசாரணை நடந்தது. சம்பவத்தின் போது, எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை 'சிடி'க்களில் பதிவு செய்து நீதிபதிகள் முன் போலீசாரும், வக்கீல்களும் தாக்கல் செய்திருந்தனர். இவ்வழக்கின் மீதான தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் 'டிவிஷன் பெஞ்ச்', கடந்த 7ம் தேதி தள்ளி வைத்தது. பரபரப்பான இந்த வழக்கில், நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்', இன்று உத்தரவு பிறப்பித்தது. நீதிபதிகள் தங்களது உத்தரவில்; சம்பந்தப்பட்ட 4 போலீஸ் அதிகாரிகள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி சம்பவம் நடந்த நேரத்தில் பணியில் இருந்த கமிஷனரும் தற்போதைய சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியுமான ராதாகிருஷ்ணன் , கூடுதல் கமிஷனராக இருந்த விஸ்வநாதன் ( தற்போது டில்லியில் பணியாற்றுகிறார் ) , துணை கமிஷனராக இருந்த பிரேமானந்தன்சின்கா , இணை கமிஷனராக இருந்த ராமசுப்பிரமணியன் ஆகி‌ய 4 பேர் தான் முழுப்பொறுப்பு ஆவர். அந்நாளில் நடத்தப்பட்டது நீதித்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் . அந்நாளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டை அவமதித்தாகவும் கருதப்படுகிறது. வக்கீல்கள் மீது உள்ள கிரிமினல் வழக்கு தொடர்பான நடவடிக்கைகளை தொடரலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நெஞ்சை தொட்ட சம்பவம்

பழைய பேப்பரை விற்று 6 வயது சிறுமிக்கு உயிர் கொடுத்த மாணவர்கள்
அக்டோபர் 29,2009,00:10 IST

மதுரை : மதுரை வடமலையான் மருத்துவமனையின் "ஊர் கூடி உதவுவோம்' என்ற திட்டத்தின்கீழ், பழைய பேப்பரை சேகரித்து விற்று, அதில் கிடைத்த தொகையை 6 வயது சிறுமியின் ஆப்பரேஷனுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.


பொதுமக்களிடம் பழைய நாளிதழ்களை நன்கொடையாக பெற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பயனாக, மதுரை டால்பின் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 11 ஆயிரம் பழைய நாளிதழ்களை விற்று 47 ஆயிரம் ரூபாயும், பொதுமக்கள் 4,658 ரூபாயும் நன்கொடையாக அளித்தனர். இதைக் கொண்டு, பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருந்த திண்டுக்கல் சிறுமி சித்ராவுக்கு அறுவை சிகிச்சையின்றி, கேத்லாப் முறை மூலம் இருதய ஓட்டை அடைக்கப்பட்டது. மொத்த செலவு 1.10 லட்சம் ரூபாயில், நன்கொடை போக, மீதமுள்ள தொகையை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.


ஆப்பரேஷன் செய்த டாக்டர் கண்ணனும் கட்டணம் பெறவில்லை. நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், ""ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்துதான் சமுத்திரத்தை உருவாக்குகிறது. அதுபோல் அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று இதனை வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.திட்டமேலாளர் ஹேமலட்சுமி, ரேடியோ மிர்ச்சி நிலைய இயக்குனர் தினேஷ், நிகழ்ச்சி இயக்குனர் ராதா உடனிருந்தனர்.

புதன், 28 அக்டோபர், 2009

எண்ணங்களின் எழுச்சி

உள்ளத்தில் உள்ளதுதான் உலகம்.இதை புரிந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும்.எண்ணங்கள்தான் மனித உறவுகளை உன்னதப்படுத்துகின்றன. மனித உறவுகள் பலப்படுவதும் பலவீனப்படுவதும் எண்ணங்களால்தான்.தயவு செய்து (Please),மன்னிக்கவும் (Sorry)
நன்றி (Thanks), இம் மூன்று வார்த்தைகள் மனித உறவுகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. விட்டு கொடுப்பதால் கெட்டும் போவதில்லை, தட்டி கொடுப்பதால் தாழ்ந்தும் போவதில்லை.

சந்தோசம் என்பது பணம் தருவதாக மட்டுமல்ல, அன்பான வார்த்தைகளை உபயோக படுத்துவதன்மூலம் ,உடலால்,உள்ளத்தால்,பலவீனமானவர்களுக்கு ஆறுதலாக வார்த்தைகள்
கூறுவதன்மூலம் உடல் பலகீனமனவர்களுக்கு செயலால் உதவுவது போன்றவை மனித உறவுகளை
வளர்க்கும்.உறவுகள் பலப்பட பாலங்கள் கட்டுவோம்.சுவர்கள் வேண்டாம்.

உங்கள் எதிரி நண்பனாவதற்கு ஆயிரம் வாய்ப்புக்கள் கொடுங்கள்.ஆனால் உங்கள் நண்பர் விரோதியாவதற்கு ஒரு வாய்ப்புக் கூட தந்து விடாதிர்கள்.

இறைவனின் உன்னதமான உயர்ந்த படைப்பான மனிதன் மீது அன்பு காட்டுவது இறைவன்
மீது காட்டும் அன்புக்கு ஒப்பாகும். மனித உறவுகள் மெல்லிய பூக்கள் போன்றவை. பூக்கள்
மீது அலை அடிக்க வேண்டாம்.

இனி ஒரு முறை பிறக்கவா போகிறோம்? இருக்கும் வாழ்வில் எத்தனை ஆண்டு காலம்
வாழ்ந்தோம் என்பது முக்கியமல்ல, எத்தனை இதயங்களில் வாழ்கிறோம் என்பதுதான்
வாழ்வின் அர்த்தமாகும்.

" குணம் நாடி குற்றம் நாடி அவற்றில்
மிகை நாடி மிக்க கொளல்"

என்ற குறளுக்கு ஏற்ப மற்றவர்களின் நிறைகளை மட்டும் பார்த்தால் உறவின் உன்னதம்
புரியும். முதுமையை நேசியுங்கள். நமக்கும் முதுமை வரும் என்பதை எண்ணுங்கள்.

முதியோர்கள் இல்லத்தில் ( வீட்டில்) இருக்க வேண்டுமே தவிர " முதியோர் இல்லத்தில் "
இருக்க கூடாது.

பகிர்ந்து கொள்ளுங்கள் - துன்பம் பாதியாகும்
பகிர்ந்து கொள்ளுங்கள் - இன்பம் இரட்டிப்பாகும்.

நன்றி:
முஸ்லீம் முரசு.

ரத்தக் கறைபடிந்த கரங்களைக் குலுக்கியவர்கள்

2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். நான்காம் கட்ட ஈழப்போரில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தார்கள். போர்ப் பகுதியில் இருந்து உயிர் தப்பிய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை நலன்புரி முகாம்கள் என்ற பெயரில் முள்வேலி முகாம்களில் ராணுவப் பாதுகாப்போடு சிங்கள அரசு அடைத்தது.
போர் முடிந்து ஐந்து மாத காலத்துக்கு மேலாகியும் அந்த மக்கள் விடுவிக்கப்பட்டு. தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. முகாம்களில் போதுமான தங்குமிடம், சுகாதார வசதிகள், உணவு, மருந்து ஆகிய எல்லாமே பற்றாக்குறையாக இருந்தது. இதன் விளைவாக தினமும் 200 முதல் 300 பேர் வரை மடிந்துகொண்டிருக்கின்றனர்.
இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களை வதைக்க ஹிட்லர் அமைத்த முகாம்களைவிட ராஜபட்ச அமைத்த முகாம்கள் மிகமோசமானவை என உலக நாடுகள் குற்றம் சாட்டின. இந்த முகாமில் இருந்த மக்களுக்கு அடிப்படை மனித உரிமைகள், இடப்பெயர்வு, வாழ்வாதாரம், கூடிப்பேசும் உரிமை, குறைகளை முறையிடும் உரிமை ஆகிய எல்லாமே மறுக்கப்பட்டன.
ஐ.நா. அமைப்புகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், பிற தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் இந்த மக்களுக்கு உதவுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவியில் ஒரு சிறு பங்குகூட இந்த மக்களுக்குக் கிடைக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்பட பல்வேறு நாடுகள் இந்த முகாம்களில் உள்ள சீர்கேடான நிலைமை குறித்து மிகுந்த கவலையுடன் எச்சரித்தன.
அந்த மக்களை விடுவித்து அவர்களது ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கும்படி வலியுறுத்தின. ஆனால் ராஜபட்சவின் கேளாக் காதுக்கு இந்தக் குரல் எட்டவில்லை. இந்த நிலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஒன்று முகாம்களை பார்வையிட அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது.
இந்தக் கோரிக்கையைத் திசை திருப்பவும், இலங்கை முகாம்களில் நடக்கும் கொடுமைகளை மறைக்கவும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி தந்திரத் திட்டம் வகுத்தார். அதற்கிணங்க காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அனுப்புவதாக அறிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, இலங்கை அதிபர் ராஜபட்சவிடமிருந்து தனக்கு வந்த அழைப்பின் அடிப்படையிலேயே இந்தக் குழுவை அனுப்புவதாக முதலமைச்சர் கூறினார். வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் இந்திய அரசை அணுகி அனுமதி பெற்று அவர்கள் போகட்டும் என எகத்தாளம் செய்தார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் ராஜபட்ச, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு அனுப்பவில்லை. இலங்கை அரசின் அதிபர் என்ற முறையில் தமிழக முதலமைச்சருக்கு அவர் அழைப்பு அனுப்பினார். இது தனிப்பட்ட அழைப்பு அல்ல. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அழைப்பாகும்.
முதலமைச்சர் என்ற முறையில் தனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முதலமைச்சர் கலந்து ஆலோசித்து அனைத்துக்கட்சி குழுவை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அதற்கு ஆழமான உள்நோக்கம் உள்ளது.
இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களோ, இந்த முகாம்களைப் பார்வையிட இதுவரை அனுமதிக்கப்படவில்லை.
சர்வதேசப் பத்திரிகையாளர்களோ அல்லது உள்நாட்டுப் பத்திரிகையாளர்களோ கூட அனுமதிக்கப்படவில்லை. தனது நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையோ பத்திரிகையாளர்களையோகூட முகாம்களைப் பார்வையிட அனுமதிக்காத ராஜபட்ச, கருணாநிதிக்கு மட்டும் அழைப்பு அனுப்பி அவர் அனுப்பிய தூதுக்குழுவை ராசோபச்சாரத்துடன் வரவேற்று விருந்தளித்து, பரிசுகள் தந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களைப் பார்வையிட அனுமதித்ததன் நோக்கம் என்ன?
முகாம்களில் உள்ள மக்களை உடனே விடுவிக்காவிட்டால் இலங்கைக்கு அளிக்கப்படும் பொருளாதார உதவிகள் நிறுத்தப்படும் என பிரிட்டன் உள்பட பல நாடுகள் எச்சரித்துள்ளன. இந்தச் சூழ்நிலையில் அந்நாடுகளிடம் காட்டுவதற்கு ராஜபட்சவுக்கு ஒரு நற்சான்றிதழ் தேவை. அதை வழங்குவதற்கு அவர் தேர்ந்தெடுத்த நபர்தான் கருணாநிதி ஆவார்.
ராஜபட்ச விரும்பியதும் எதிர்பார்த்ததும் நடந்தது. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிங்கள அரசு அழைத்துச் சென்ற இடங்களுக்கு மட்டுமே சென்றார்கள். அவர்கள் காட்டியவற்றை மட்டுமே கண்டார்கள். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும் என ஒரு போதும் கேட்கவில்லை.
இக்குழுவினர் சென்ற இடமெல்லாம், மக்கள் அவர்களிடம் எவ்வாறு தங்களுடைய குமுறல்களையெல்லாம் கொட்டியழுதார்கள் என்பது குறித்து இலங்கையிலிருந்து வெளிவரும் வீரகேசரி, உதயன், வலம்புரி ஆகிய நாளேடுகள் பக்கம் பக்கமாகச் செய்திகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளன. மலையகப் பகுதிக்கு இந்தக் குழுவினரின் வருகை ஏமாற்றத்தையே அளித்தது என மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையகத் தமிழர்களின் தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.
இந்தக் குழுவில் சென்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் கொழும்பு வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில் "சர்வதேச நியமங்களுக்கு உள்பட்டே இலங்கையில் அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மக்களின் பாதுகாப்புக்காகவே முள்கம்பிகள் போடப்பட்டுள்ளன'' என்று கூறியிருக்கிறார்.
இன்னொரு காங்கிரஸ் உறுப்பினரான ஜே.எம்.ஆரூண் இலங்கை செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என்றும் கூறியிருக்கிறார்.
இந்தக் குழுவினர் இலங்கை அதிபர் ராஜபட்ச அவருடைய சகோதரர்கள் பசில் ராசபட்ச, கோத்தபய ராஜபட்ச ஆகியோரைச் சந்தித்து அளவளாவியுள்ளனர்.
ராஜபட்சவுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகள் தந்தும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அவரும் இவர்களின் விசுவாசத்தை மெச்சி, பரிசுகள் தந்து மகிழ்வித்திருக்கிறார். லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் ரத்தக் கறைபடிந்துள்ள ராஜபட்சவின் கரங்களை தமிழர்களே குலுக்கி மகிழ்ந்த அவலம் வரலாறு காணாததாகும்.
இக்குழுவினரை இலங்கைக்கு அனுப்புவதற்கு 20 நாள்களுக்கு முன்னதாகவே 22-9-09-ல் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, பின்வருமாறு அறிவித்ததை இப்பொழுது நினைவு கூரவிரும்புகிறேன்:
""இலங்கையில் தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து வெளிவரும் தகவல்கள் நமக்குத் திருப்தியை அளிக்கின்றன. தமிழக அரசும் இந்திய அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக இலங்கை அரசின் மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் அவசரமாகக் கூடி தமிழர்களின் மறுவாழ்வு தொடர்பான நடவடிக்கைகள் எந்த நிலையில் இருக்கின்றன என ஆய்வு செய்துள்ளனர் என நாளேடுகளில் வெளிவந்த செய்திகளைச் சுட்டிகாட்டியுள்ள முதல்வர், இவையெல்லாம் திருப்தியளிக்கின்றன'' எனக் கூறியுள்ளார்.
20 நாள்களுக்கு முன்னால், முதலமைச்சர் இவ்வாறு அறிவித்த பிறகு இலங்கைக்கு இவரால் அனுப்பப்பட்ட தூதுக்குழுவினர் இந்த அறிவிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்திருக்கிறார்கள்.
இக்குழுவினர் சென்னை திரும்பியதும் முதலமைச்சர் கருணாநிதி மூலம் வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறியிருக்கிறார்கள்:
""முள்வேலி முகாம்களில் இருக்கிற மக்களின் துன்பங்கள் குறித்து அதிபர் ராஜபட்சவை நாங்கள் சந்தித்தபோது, அவரிடம் தொகுத்துக் கூறியுள்ளோம். இதனை மனிதாபிமான உணர்வோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். முகாம்களில் உள்ள தமிழர்களை மறுகுடியமர்த்தும் கோரிக்கையை முன்வைத்தோம். மொத்தத்தில் முகாம்களில் உள்ள தமிழர்களை இலங்கை அரசு மீண்டும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் நம்பிக்கையை இன்னும் இரண்டு வாரகாலத்தில் இலங்கை அரசு ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.''
இந்த அறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் கருணாநிதி, செய்தியாளர்களிடம் அறிவித்ததில் முக்கியமானவை பின்வருமாறு:
1. 15-10-09 முதல் 15 நாள்களில் 58 ஆயிரம் மக்கள், முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள்.
2. அநாதைக் குழந்தைகள் உடல் ஊனமுற்றோர் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள்.
3. இந்திய அரசு மேலும் உதவினால் நிலக்கண்ணி வெடிகள் விரைவில் அகற்றப்படும்.
4. முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்கள் யாரும் கடத்தப்படுவதில்லை. கொலைசெய்யப்படுவதும் இல்லை.
5. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து, இலங்கை அரசுக்கு விவரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துன்பநிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பு இந்தியாவிலிருந்தும் கிடைக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பட்டியலிடாத ஒரு சாதனையை குழுவின் தலைவர் டி.ஆர். பாலு கூறியிருக்கிறார். அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ""இலங்கையும் - தமிழகமும் தொழில் கண்காட்சி நடத்தி இருநாடுகளிடையேயும் தொழில் வணிகம் பெருகவும், தமிழகம் இலங்கையில் முதலீடு செய்யவும் வழிவகை இதன்மூலம் ஏற்படும் என்று கூறி புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களப் படையினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உறுதியாகியிருப்பதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது வணிகத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கையோடு தொழில் வணிகத்தைப் பெருக்குவதற்கான வழிவகைகளை முதலமைச்சரின் குழு ஆராய்ந்து கூறியுள்ள வெட்கக்கேடு நிகழ்ந்துள்ளது.
தான் அனுப்பிய தூதுக்குழுவினர் ராஜபட்சவிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை பட்டியலிட்டிருக்கிறார் முதலமைச்சர். ஆனால் அவருடைய அறிவிப்பை மாபெரும் சாதனையாகச் சித்திரித்து சுவரொட்டிகள் அச்சடித்து தி.மு.க.வினர் சென்னையெங்கும் ஒட்டியுள்ளனர். சுவரொட்டியில் உள்ள பசை உலர்வதற்கு முன்னாலேயே முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அனுப்பப்பட்ட 2,500 தமிழர்கள் நடுவழியில் மறிக்கப்பட்டு மற்றொரு முகாமில் அடைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.
செப்டம்பர் 15-ம் தேதியன்று வவுனியா முகாம்களிலிருந்து 2000 தமிழ் அகதிகள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இப்போது வேறு எங்கோ சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 11-ம் தேதியன்று யாழ்ப்பாணம் முகாமில் இருந்து 568 தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் கைத்தடி என்ற இடத்தில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை, திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 1706 அகதிகளும் அவரவர் வீடுகளுக்குப் போய்ச் சேராமல் வழியில் எங்கேயோ தடுத்துக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த விவரங்களை மனிதநேய நடவடிக்கைகளுக்கான ஐ.நா. சபையின் ஒருங்கிணைப்பு அலுவலகம் கூறியுள்ளது.
தமிழக மீனவர்கள் துன்ப நிலை தொடராமல் பார்த்துக்கொள்ள இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது என முதல்வர் கூறிய இரு நாள்களிலேயே அதாவது அக்டோபர் 18-ம் தேதியன்று ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்த செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கை சென்ற தூதுக்குழு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ள 12,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இளம்பெண்கள் குறித்து எதுவும் விசாரித்தறியவில்லை என்பது அதிர்ச்சி தருகிறது. புலிகள் எனக் குற்றம் சாட்டி இவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு தனி முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஐ.நா.வுக்கான இலங்கைத் தூதுவர் பலித்த கோஹண என்பவர் அக்டோபர் 15-ம் தேதி பின்வருமாறு கொழும்பில் அறிவித்தார்:
தனி முகாம்களில் உள்ள 12,500 பேர் புலிகளாவர். மேலும் மற்ற முகாம்களில் 10,000 புலிகள் இருக்கக்கூடும். இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு அழிப்பதே எங்கள் நோக்கம் என்று வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான டேவிட் மிலிபண்ட் பின்வருமாறு கூறியுள்ளார்: இலங்கைப்போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் 12,500 பேரை விடுதலைப்புலிகள் என்று கூறி, தனி முகாம்களில் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது. ராணுவம் ஆய்வு நடத்திய முறை வெளிப்படையாக இல்லை என்பதால் இவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளா என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களைச் சந்திக்க ஐ.நா. அமைப்புக்கோ அல்லது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கோ இன்றுவரை அனுமதியளிக்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது'' என்று கூறியுள்ளார்.
உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த முகாமை தமிழகத் தூதுகுழு எட்டிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல. அதுபற்றிய உண்மையைக் கூட விசாரித்தறிய முற்படவில்லை. எங்கேயோ பிரிட்டனில் இருக்கக்கூடிய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்த இளைஞர்கள் குறித்துக் கவலைப்படுகிறார். ஆனால் இலங்கைக்கே சென்ற தூதுக்குழுவினர் இதைப்பற்றிக் கொஞ்சமும் கவலையோ பொறுப்புணர்வோ இல்லாமல் நடந்துகொண்டுள்ளனர்.
முகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தும் அங்ககீனமாகியும் உள்ளனர். இயலாத முதியவர்களும் குழந்தைகளும் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ வசதிகள் போதுமான அளவுக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து இக்குழுவினர் விசாரித்து அறிந்ததாகத் தெரியவில்லை.
குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் பிரித்து அடைக்கப்பட்டுள்ளவர்களை ஒன்றாக வைக்கவேண்டும் என இக்குழுவினர் வலியுறுத்தியதாகவும் தெரியவில்லை.
கடற்கரை மாவட்டங்களில் வாழும் மக்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அந்த மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவேண்டும் என இக்குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.
முகாம்களில் உள்ளவர்களின் முழுமையான பட்டியல் இருக்கிறதா என்று கேட்டு அதைப் பார்வையிட்டு சிலரையாவது அழைத்துப் பேசி உண்மை அறிந்தார்களா என்பதற்கும் சான்று இல்லை. போரின் கடைசிக் கட்டத்தில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விவரப்பட்டியலை குழுவினர் கேட்டதாகவும் தெரியவில்லை.
இந்தியா உள்பட உலக நாடுகள் அளித்த உதவி முறையாக செலவிடப்பட்டதா என்பது குறித்து விசாரித்து அறியவோ அல்லது அதைக் கண்காணிக்க சர்வதேச குழு ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியுறுத்தவோ இக்குழுவினர் எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை.
தமிழகக் குழுவின் பயணம் ராஜபட்சவுக்குச் சாதகமான அறிக்கை அளிப்பதற்காகவே சென்றுள்ளது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே தனக்குச் நற்சான்றிதழ் அளித்துவிட்டார்கள் என அவரைக் குறை சொல்லும் நாடுகளுக்கும் ஐ.நா. அமைப்புக்கும் கூற இந்த அறிக்கை ராஜபட்சவால் பயன்படுத்தப்படுமே தவிர முகாம்களில் உள்ள மக்களின் துயரைப் போக்குவதற்கு எள் முனை அளவு கூட உதவாது. போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற இந்திய அரசு தவறிவிட்டது. இங்கிருந்து கப்பல்களை அனுப்பி அந்த மக்களைப் பத்திரமாக இந்தியாவுக்குக் கொண்டுவந்திருக்கலாம்.
1983-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் படுகொலை தாண்டவமாடியபோது, இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி இரண்டு கப்பல்களை அனுப்பி கொழும்பு நகரில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தில் கொண்டு சேர்க்க உதவினார். ஆனால் மன்மோகன் சிங் அரசு அந்த மனிதநேய கடமையைக் கூட செய்யத்தவறிவிட்டது. இந்த மாபெரும் தவறை மூடி மறைக்க அவருக்கும் கருணாநிதியின் இந்த நற்சான்றிதழ் உதவும். ôஜபட்சவை போர்க் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என உலக நாடுகளின் குரல் வலுத்துவரும் இந்த வேளையில் அவரைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி பரிசுகள் தந்து மகிழ்ந்த இக்குழுவினரை என்னென்று சொல்வது.
1936-ம் ஆண்டில் இத்தாலியின் சர்வாதிகாரியாக முசோலினி திகழ்ந்தபோது, காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவாஹர்லால் நேரு சுவிட்சர்லாந்தில் தனது மனைவி கமலாவின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தார். கமலா அங்கேயே காலமானார். இச்செய்தியை அறிந்த முசோலினி சுவிட்சர்லாந்தில் இருந்த இத்தாலியத் தூதர் மூலம் நேருவுக்கு இரங்கல் கடிதம் ஒன்றை அனுப்பினார். அத்துடன் தனது விருந்தினராக ரோம் வந்து தங்கும்படியும் அவருடன் பேச விரும்புவதாகவும் செய்தியனுப்பினார். ஆனால் ஜவாஹர்லால் நேரு, இந்த அழைப்பை ஏற்க மறுத்தார். ஆப்பிரிக்காவில் உள்ள அபிசீனியா மீது படையெடுத்து நச்சு வாயு குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஒரு பாசிச சர்வாதிகாரியான முசோலினியின் ரத்தக் கறைபடிந்த கரங்களால் அனுப்பப்பட்ட அழைப்பை ஏற்க மறுக்கிற துணிவு ஜவாஹர்லால் நேருவுக்கு இருந்தது. அபிசீனிய மக்களோடு எத்தகைய ரத்தத் தொடர்பும் நேருவுக்கு இல்லை. ஆனாலும் அவரிடம் இருந்த மனிதநேய உணர்வு அவரை இவ்வாறு செய்ய வைத்தது.
ஆனால் நம்முடன் தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத்தமிழர்களின் ரத்தத்தால் நனைந்து கறைபடிந்திருக்கிற ராஜபட்சவின் கரங்களைக் குலுக்கி நட்பு பாராட்ட தன் மகள் உள்பட தமிழர்களைக் கொண்ட குழுவையே அனுப்பி உறவு கொண்டாடிய கருணாநிதியின் மனித நேய உணர்வையும் மான உணர்வையும் என்னென்று சொல்வது?

செவ்வாய், 27 அக்டோபர், 2009

சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்டுடன் 3 சிங்களர்கள் கைது


ஆலந்தூர், அக்.27-

சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு 12.30 மணிக்கு கொழும்புக்கு ஒரு விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த முகமது அஷ்ரத், முகமது இர்சாத், ருஷ்மி ஆகிய 3 இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களது பாஸ்போர்ட்டை சரி பார்த்தபோது அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பே திருவனந்தபுரம் வழியாக இந்தியா வந்ததாக போலி முத்திரையிடப்பட்டு இருந்தது. அதை அதிகாரிகள் கண்டுபிடித்து விட்டனர்.
இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரும் சிங்களர்கள். இலங்கையின் சிங்கள மாவட்டத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்தியாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் எதற்காக வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது. “கியூபிராஞ்ச் போலீசாரும் அவர்கள் சதித்திட்டத்துடன் நுழைந்தார்களா? என்று விசாரிக்கிறார்கள்.

வானில் இன்று அரிய காட்சி


புது தில்லி, அக். 26: வானில் அற்புதக் காட்சியை செவ்வாய்க்கிழமை மாலை கண்டு மகிழலாம். வியாழன் கிரகமும், நிலவும் பூமிக்கு மிக அருகில் வருவதால் வெறும் கண்களால் இதைக் கண்டு ரசிக்க முடியும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் மறைந்ததும் வானில் இத்தகை அபூர்வ காட்சியைக் காண முடியும். தென்-கிழக்கு திசையில் வெறும் கண்களால் இத்தகைய காட்சியைக் காண முடியும்.

திங்கள், 26 அக்டோபர், 2009

எங்கே போய் முட்டிகொள்வது

சென்னை, அக். 26-
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள இந்துகுருபேட்டா என்ற இடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் நெல்லூர் பகுதியை சேர்ந்த 26 பேர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
இவர்களில் 15 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டு பார்வை பறிபோனது. அவர்களில் சுப்பம்மா, கோபால் ரெட்டி ஆகியோர் உள்பட 10 பேர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண் பார்வை பறிபோன 10 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிரமாக கண்காணித்தபடி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்ணீர் மல்க காத்து கிடக்கிறார்கள்.
இவர்களில் கோபால் ரெட்டி என்பவரின் கண்களை அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரித்து உள்ளதாக அவரது மகள் திவ்யா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
விவசாய வேலை செய்து வந்த எனது தந்தைக்கு கண் பார்வை சரியாக தெரியாமல் இருந்தது. இதையடுத்து போலி நெனி அறக்கட்டளை ஆஸ்பத்திரி சார்பில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் அவர் கலந்து கொண்டார்.
கடந்த 18-ந்தேதி அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து திரும்பிய மறுநாளில் இருந்து அவரது கண்களில் நீர் வடியத்தொடங்கியது. கண் வலிப்பதாக கூறினார். இதனால் பயந்து போன நாங்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது கண்களை பரிசோதித்தோம். அங்கிருந்த டாக்டர்கள் எனது தந்தையின் பார்வை பறிபோயுள்தாகவும் உடனடியாக ஆபரேசன் செய்து கண்களை அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று கூறினார்கள்.
இதையடுத்து சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தோம். சங்கர நேத்ராலயா ஆஸ்பத்திரி டாக்டர்கள் எனது தந்தைக்கு தீவிரசிகிச்சை அளித்தனர். இன்று காலையில் அவரை பரிசோதித்த பின்னர் பாதிக்கப்பட்ட கண்ணை அகற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர் இல்லையென்றால் மூளை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஆந்திர டாக்டர்களின் தவறான ஆபரேஷனாலேயே எனது தந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் மீதும் டாக்டர்கள் மீதும் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கண் பார்வை பாதிக்கப்பட்ட சுப்பம்மா என்பவரின் மகன் சுரேஷ் கூறியதாவது:-

எனது தாய்க்கு டாக்டர்கள் தவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இன்று காலையில் அவர் தலைவலி அதிகமாக இருப்பதாக கூறினார். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண் பார்வை பாதிக்கப்பட்ட 10 பேரும் சிகிச்சை பெற்று வரும் நுங்கம்பாக்கம் சங்கரநேத்ராலயா ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான பத்திரிகை மற்றும் டி.வி, கேமராமேன்கள் இன்று காலை குவிந்தனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று மாலையில் சிகிச்சை பெறுபவர்கள் பற்றிய முழு விவரங்களை வெளியிடுவதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

துபாய் "3" வது விமான நிலைய முனையம்









துபாயில் புதிதாக கட்டி முடிக்க பட்டுள்ள விமான நிலைய மூன்றாவது முனையத்தின் புகை படங்கள்.

இந்தியாவில் ஒரே வாரத்தில் ரூ.8,904 கோடிக்கு தங்கம் விற்பனை


தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தியாவில் ஒரே வாரத்தில் ரூ.8,904 கோடிக்கு தங்கம் விற்பனை



சென்னை, உலக தங்க கவுன்சில் அமைப்பின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் அஜய் மித்ரா கூறியதாவது:
பண்டிகை நாட்களில் தங்கம் வாங்குவதை இந்தியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி, புஷ்ய நக்ஷத்ரா, தான்டெராஸ், பெஸ்டு வராஸ், பாய் தூஜ் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட்டன. இதனால் தங்கம் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 12 முதல் 19ம் தேதி வரையிலான 8 நாட்களில் நாடு முழுவதும் மொத்தம் 56 டன் விற்பனை ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தைவிட 5.7 சதவீதம் அதிகம். விற்பனை மதிப்பைப் பொறுத்தவரை 39.2 சதவீதம் அதிகரித்து ரூ.8,904 கோடியானது.

உலக அளவில் ஸ்திரமற்ற பொருளாதார நிலையிலும் தங்கத்தின் மதிப்பு குறையாமல் இருந்ததால், பாதுகாப்பு கருதி இதில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இதுவும் விற்பனை அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என்றார்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தலைவர்களின் கோஷங்களும், வேஷங்களும்

இலங்கைத் தமிழர் விவகாரம், நீண்ட நெடுங்காலமாக தமிழக அரசியல் தலைவர்கள் கையில் அகப்பட்டு சிக்கித் திணறி வருகிறது. இதனால் எவ்வித முன்னேற்றமும் இன்றி, இலங்கை தமிழர்களின் இன்னல்கள் இன்றுவரை தொடர்கிறது.ஆனாலும், இந்த விவகாரத்தை தங்கள் நிலையை மேம்படுத்திக் கொள்ளும் அஸ்திரமாகவே அரசியல் தலைவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



வைகோவை தவிர்த்து, மற்ற அனைவரும் விடுதலைப் புலிகள் விஷயத்தில், அடிக்கடி மாறுபட்ட கருத்தை தெரிவித்து வந்தவர்களாகவே இருக்கின்றனர்.சில திடீர் தலைவர் களும், புதுத் தலைவர்களும், தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியோடு ஒத்துப் போகும் வகையில் தங்கள் "புலி' ஆதரவை சமயத்திற்கு தக்கபடி ஓங்கி ஒலிப்பதும், அடக்கி வாசிப்பதும் வழக்கமாக இருக்கிறது.



தமிழக அரசியல் தலைவர்களின் உறுதியற்ற நடவடிக்கையால், சொந்த நாட்டிலேயே அகதிகளாகவும், சிறைப்பட்டு கிடக்கும் பறவைகளாகவும் இலங்கை தமிழர்கள் தவித்து வருகின்றனர்.இதில் யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கொழும்பு தமிழர்கள் என யாரும் விதி விலக்கு கிடையாது. இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து, ஒரு சிலரைத் தவிர மற்ற தலைவர்கள் ஓங்கி குரல் கொடுக்கின்றனர் என்றால் அதற்கு மூன்று காரணம் மட்டுமே இருக்கும்.



ஒன்று ஏதாவது தேர்தல் நேரமாக இருக்கும். இரண்டாவது, சம்பந்தப்பட்ட தலைவர்களை, விடுதலைப்புலிகள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் தனிமையில் சந்தித்து விட்டு சென்றிருப்பர்.மூன்றாவதாக ஆளும் கட்சிக்கு ஏதாவது நெருக்கடி ஏற் பட்டிருக்கும் அல்லது நெருக்கடி ஏற்படுத்துவதற்காக இருக்கும். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இதே நிலை தமிழகத்தில் நிலவுகிறது.



தமிழகத் தலைவர்கள் யார், யாரை "புலி' ஆதரவாளர்கள் அடிக்கடி சந்திக்கின்றனர். யார், யார் புலிகள் இயக்க கட்டுப்பாட்டில் உள்ளனர். எப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட தலைவர்களிடமிருந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கைகள், பேச்சுகள், முழக்கங்கள் வெளி வரும் என்பதை உளவுத்துறையினர் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.



இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம், விவரமறிந்த நபர்கள் உள்ளுக்குள் நகைத்துக் கொள்கின்றனர். ஒரு சில தலைவர்கள், ஒரே சமயத்தில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தை எப்படி அரசுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கையாள வேண்டும் என்ற வித்தையை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.



கூட்டணியும் முறியக் கூடாது; தங்கள் பதவியும் போகக்கூடாது; இலங்கைத் தமிழர் பணம் வருவதும் நிற்க கூடாது. அதே நேரத்தில், தொண்டர்களும் தங்களை நம்ப வேண்டும் என்ற நிலையை அவர்கள் திறம்பட கையாள்கின்றனர். இவர்களின் வேஷம் சம்பந்தப்பட்டவர்களிடம் எடுபட்டாலும், பொதுமக்களிடமும், அரசியல் நோக்கர்களிடமும் நகைப்புக்கே இடமாகி வருகிறது.



இப்படி தங்களின் சொந்த ஆதாயத்திற்கும், தங்கள்நிலையை மேம்படுத்தி கொள்வதற்கும் கிடைத்த ஒரு வாய்ப்பாக, கருவியாக இலங்கை தமிழர் பிரச்னையை தமிழக அரசியல் தலைவர்கள் கையாளுவது நிற்காத வரையில், இவர்களால் இலங்கைத் தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை.



மக்களை குழப்பும் எம்.பி.,க்கள்:இலங்கையில்முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர் களின் நிலை குறித்து ஆராயச் சென்று, தமிழகம் திரும்பிய எம்.பி.,க்கள், மக்களை குழப்பும் வகையில் தனித்தனியாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதில், எது உண்மை, எது பொய் என்று தெரியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.



அனைத்து எம்.பி.,க்களும் முகாம்களை பார்வையிட ஒன்றாகவே சென்றதாகவும், ஒரு சில எம்.பி.,க்கள் தங்கள் விருப் பத்தின் பேரில் ஒரு சில முகாம்களை தனித்துச் சென்று பார்வையிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. முதலில் வாய் திறக்காத எம்.பி.,க்கள், இப்போது தனித்தனியாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது, பொது மக்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தி.மு.க., - காங்., கூட்டணியில் விரிசல்


இணக்கமான' கூட்டணியாக பெரிதும் கருதப்பட்ட தி.மு.க., - காங்கிரஸ் அணியில், விரிசல் பெரிதாகிக் கொண்டே வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக் கிறதா, பலவீனமாக இருக்கிறதா என்ற கேள்வி, இந்தக் கூட்டணியின் பலத்தைப் பற்றிய சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

கடந்த 2004 லோக்சபா தேர்தலில் ஆரம்பித்தது தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது தி.மு.க., முதல் இரண்டு ஆண்டுகள், இக்கூட்டணியில் பெரிய விரிசல் இல்லை. தமிழகம், புதுவையில் 40க்கு 40 எம்.பி., தொகுதியையும் தி.மு.க., கூட்டணி வென்று காட்டியதால், மத்தியில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் செல்வாக்கு, கொடி கட்டிப் பறந்தது. அப்போது, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி இருந்தாலும், மத்திய அரசின் ஆ(ட்)சியோடு, தி.மு.க., தனி ராஜாங்கமே நடத்தியது. 2006ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான், கூட்டணியில் விரிசலுக்கான விதை, முளைவிட்டது.



அ.தி.மு.க., தோல்வி அடைந்தாலும், தனிப் பெரும்பான்மை இல்லாமல் தி.மு.க., ஆட்சி அமைத்தது. "ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோஷத்தை காங்கிரசார் உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்தனர்.இந்த கோஷம் அவ்வப்போது எழுவதும், அடங்குவதுமாகவே இருந்தது. திருச்சியில் நடந்த தி.மு.க., மாநாட்டில் பேசிய, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மேடையிலேயே அந்த கோரிக்கையை வைத்தது, முதல்வர் கருணாநிதியை கோபமடையச் செய்தது."அதை நானும் சோனியாவும் தான் முடிவு செய்ய வேண்டும்; ஆட்சியில் பங்கு பற்றி பேசுவதானால், புதுவை நிலைமை பற்றியும் பேச வேண்டியிருக்கும்' என எச்சரித்தார். அத்தோடு அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.



இடையில், தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்துவதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அகில இந்திய பொதுச் செயலர் ராகுல், ஒரு நாள் கூட முதல்வரைச் சந்திக்காதது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இருதரப்பும், அதுபற்றிய சமாளிப்புகளை அளித்தாலும், அரசியல் நோக்கர்கள் அதை, வழக்கமான விஷயமாகக் கருதவில்லை.இப்போது, தி.மு.க.,- காங்கிரஸ் உறவை உரசிப் பார்க்கும் வகையில், முல்லைப் பெரியாறு விவகாரம் எழுந்துள்ளது.



புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த, மத்திய சுற்றுச்சூழல் மற் றும் வனத்துறை அமைச் சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி அளித்து விட்டார்.இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் சென்ற தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் அதிர்ச்சியடைந்த தி.மு.க., வரும் 1ம் தேதி மதுரையில், முதல்வர் தலைமையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்த உள்ளது. கவனிக்க வேண்டிய விஷயம், "மத்திய இணை அமைச் சர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து' நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது தான்.சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்த இரவில் அறிவிக்கப்பட்டதால், கூட்டம் ஜெய்ராம் ரமேஷைக் குறிவைத்து தான் நடக்கிறது என்பதை அறிய அரசியல் ஞானம் அவசியமில்லை. ரமேஷ், காங்கிரசைச் சேர்ந்தவர்.



தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும், கேரளாவில் அக்கட்சிக்கு இன்னும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. எனவே, அந்த மாநிலத்துக்கு எதிரான செயல்பாட்டை, காங்கிரசைச் சேர்ந்த எந்த மத்திய அமைச்சரிடமும் எதிர்பார்க்க முடியாது.இந்நிலையில், "புதிய அணை கட்டுவதில் முழுமூச்சாய் இறங்கியுள்ள கேரளாவைக் கண்டிக்காமல், மத்திய அமைச்சர் மீது பழிபோடுவது ஏன்' என காங்கிரஸ் பிரமுகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். "சோனியாவிடம், ஈடு இணையில்லாத செல்வாக்கு கொண்ட முதல்வர், அணை ஆய்வுக்கான அனுமதி தருவதைத் தடுத்திருக்க முடியாதா' என்ற சந்தேகம், அவர்களுக்கு இருக்கிறது. ஆகக்கூடி, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க., அதே அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவரைக் கண்டித்து, பொதுக்கூட்டம் நடத்த உள்ளது.



தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பாரதிய ஜனதாவுடன் அங்கம் வகித்தபோது, இதேபோல ஒரு நிலைப்பாட்டை எடுத்தது தி.மு.க.,ஆட்சியின் கடைசி கட்டத்தில், மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து, சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தியது. அடுத்தடுத்த நிகழ்வுகளின் காரணமாக, கூட்டணியை விட்டே வெளியேறி, காங்கிரசோடு கை கோர்த்தது.அதே வரலாறு, தற்போது திரும்புவதாக, தி.மு.க., முன்னணி பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். 2011ல் வரும் சட்டசபை பொதுத் தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்புகள் பற்றி காங்கிரசுக்கும், காங்கிரசின் பலம் பற்றி தி.மு.க.,வுக்கும் உள்ளூர பல சந்தேகங்கள் இருக்கின்றன.



முல்லைப் பெரியாறு விவகாரம், அந்த விரிசலை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. "மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்' என்ற வரியோடு முடிகிறது தி.மு.க., அறிக்கை. இந்த அறிவிப்புக்குப் பின், காங்கிரசின் நிலைப்பாடு, சமாதானத் தூது போன்றவை எந்த அளவுக்கு இருக்கின்றன என்பதைப் பொறுத்து, மற்ற விவரங்கள் இருக்கும் என்பது வெளிப்படை.விரிசல் அதிகரிக்குமா, பூசி மெழுகப்படுமா என்பது, நவம்பர் 1ம் தேதி தெரிந்துவிடும்.

சனி, 24 அக்டோபர், 2009

உயிர் உள்ள ஒரு மரத்தின் பயன்

மரம் நமக்கு என்ன தருகிறது?

  • மலர்கள், காய், கனிகள் தருகிறது
  • நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
  • காற்றை சுத்தப்படுத்துகிறது
  • நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.
  • மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.
  • மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
  • காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

  • ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
  • ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
  • ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
  • ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது ஒவ்வொரு மரமும் ஒரு வரம்

மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:

மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.

கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.

நன்றி

பூ உலகின் நண்பர்கள்

www.poovulagu.org


நன்றி,நன்றி, நன்றி

வலைபூ நண்பர்களுக்கும், இதுவரை எனது வலைப்பூவை பார்வை இட்ட வலைபூ அன்பர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 12.10.2009 இருந்து 24.10.2009 இந்த 12 நாட்களில் ௨000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வலைப்பூ நண்பர்கள் எனது வலைப்பூவை பார்த்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்திருக்கிறது.

உங்களுடைய இந்த ஆதரவு தொடர்ந்து எனக்கு கிடைக்க இன்னும் நிறைய விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

அன்புடன்
அபுல்.

திருமாவளவனை திமுக கூட்டணி தவிர்ப்பது ஏன்?


சென்னை, அக். 23: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவனை திமுக கூட்டணியினர் தவிர்ப்பது ஏன் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அவர் மீது முதல்வர் கருணாநிதி கோபத்தில் உள்ளதாகத் தெரிகிறது.
இதன் வெளிப்பாடாகவே, பிரதமரைச் சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி சென்ற எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமையின் இந்தச் செயலால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடும் அதிர்ச்சியில் உள்ளது.
காங்கிரஸ் தலைமையின் கோபத்தை குறைக்கவே, திமுக இத்தகைய நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
எம்.பி.க்கள் குழுவில்... இலங்கையில் போர் முடிந்த பிறகு, அங்கு அல்லல்படும் தமிழர்களின் நிலையை ஆராய திமுக அணி எம்.பி.க்கள் அண்மையில் அங்கு சென்றனர். இந்தக் குழுவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனும் இடம்பெற்றிருந்தார்.
இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய பிறகு தொல். திருமாவளவன் மட்டும் இலங்கையில் தமிழர்கள் அல்லல்படுவதாகவும், அந்த நாட்டு அதிபர் ராஜபட்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனவும் அறிக்கையும், பேட்டியும் கொடுத்தார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முதல்வர் கோபம்... திருமாவளவனின் இந்த நடவடிக்கைகள் முதல்வர் கருணாநிதியை கோபப்படுத்தி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற திமுக அணி எம்.பி.க்கள் தங்களது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வெள்ளிக்கிழமை அளித்தனர். தில்லி சென்ற குழுவில் இரண்டு எம்.பி.க்கள் இடம்பெறவில்லை. ஒருவர், திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன். அவர் அலுவல் பணி காரணமாக அமெரிக்கா சென்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மற்றொருவர் தொல்.திருமாவளவன்.
கூட்டணியில் இருந்து... "தில்லி செல்லும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்படவில்லை' என்பதால் பிரதமரைச் சந்திக்கும் குழுவில் அவர் இடம்பெறவில்லை' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
""திருமாவளவன் சென்னையில் வெள்ளிக்கிழமை இருந்தார். திமுக - காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு பிரதமரைச் சந்தித்த தகவல் பத்திரிகையாளர்கள் மூலமே தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட அந்தக் கட்சியின் எம்.பி.க்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றது. கடைசி வரை முடியவில்லை. பிரதமரைச் சந்திக்கும் தகவல் தெரிவிக்கப்படாதது ஏன்? திமுக அணியில் நாங்கள் இருப்பதை அந்தக் கட்சியின் தலைமை நெருடலாகப் பார்க்கிறதா? இந்தச் செயலை திமுக அணியில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம்'' என விடுதலைச் சிறுத்தைகள் கூறுகின்றனர்.
காங்கிரûஸ சமாதானப்படுத்த... முதல்வரின் கோபம் ஒருபுறம் இருந்தாலும், தங்கள் தலைமையை சமாதானப்படுத்தவே திருமாவளவனை திமுக ஓரங்கட்டுவதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
""இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெற்றதற்கு காங்கிரஸ் கட்சியின் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி, திருமாவளவன் இலங்கை சென்றார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இலங்கைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், திமுக தலைமையின் மீதுள்ள கோபத்தை வெளிக்காட்டவே மத்திய அரசு இப்படிப்பட்ட "சோதனை' நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம். இந்தக் கோபத்தை தணிக்கும் வகையில் திருமாவளவனை தில்லியில் இருந்து சற்று தள்ளி வைக்க திமுக விரும்பி இருக்கலாம். அதன் எதிரொலியே, பிரதமரைச் சந்தித்த எம்.பி.க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை'' என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

சென்னை ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்; மனைவியை பார்த்து வாசிம் அக்ரம் கண்ணீர்


சென்னை, அக். 23-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம்அக்ரம். இவரது மனைவி ஹியூமா (வயது 38). சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.
மேல் சிகிச்சைக்காக லாகூரில் இருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு சென்றனர். வழியில் பெட்ரோல் நிரப்பு வதற்காக அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியது. அப்போது ஹியூமாவின் உடல் நிலை மோசமானது. உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்பல்லோவில் உள்ள பல மருத்துவ நிபுணர்கள் ஹியூமாவின் உடல் நிலையை பரிசோதித்தனர். தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் போதே அவருக்கு சுயநினைவு இல்லை. 2 நாட்களாக சிகிச்சை அளித்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இன்னும் சுய நினைவு திரும்பவில்லை. மூச்சுத்திணறல் ஏற்படுவதால் செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து உயிருக்கு போராடுகிறார்.
வாசிமின் 2 மகன்களும் லாகூரில் உறவினர்களுடன் இருக்கிறார்கள். மனைவி ஹியூமாவை வாசிம் அக்ரம் அருகில் இருந்து கவனித்து வருகிறார். அவரது மைத்துனர் அமீர்அலியும் உடன் இருக்கிறார்.
தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடும் மனைவியை அடிக்கடி சென்று பார்த்து விட்டு தனது அறையில் கண்ணீர் விட்டு அழுதபடியே அக்ரம் இருக்கிறார். மைத்துனர் அமிர்அலி அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்.
எனது மனைவி குணம் அடைய எல்லோரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று அக்ரம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

இலங்கையில் போர் குற்றம் ; அமெரிக்கா கண்டிப்பு ! விளக்கம் தர இலங்கைக்கு உத்தரவு


இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போரின்போது, அத்துமீறல்கள் போர்குற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, இலங்கை அரசுக்கு, அமெரிக்கா அறிக்கை அனுப்பியுள்ளது.அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள், இது குறித்து பிரச்னை கிளப்பியதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.



அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள்:



இந்த ஆண்டு துவக்கத்தில், இலங்கையில் நடந்த போரில், அப்பாவி மக்கள் வசித்த பகுதிகளில், இலங்கை ராணுவம் குண்டு வீசியதும், விடுதலைப் புலிகள் தரப்பில் குழந்தைகளை போரில் ஈடுபட வைத்ததும் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள்.
இது தொடர்பாக எங்களிடம் கொடுக்கப்பட்ட தனி நபர் புகார்கள் உண்மை தானா என சரிபார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், அவற்றுக்கு சரியான விளக்கம் தேவை என கருதுகிறோம்.



இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை மீண்டும் அங்கே குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை அரசு கூறினாலும், அதை விட முக்கியமாக, குடியமர்த்தப்படுவோர் குறித்து தகுந்த ஆதாரங்கள் தேவை என்பதை திடமாக நம்புகிறோம்.



புலிகள் சரண் அடைய முன்வந்தபோது கொலை : இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, போர் நடந்த விதம் எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. புலிகள் சரண் அடைய வருவதாக ஒப்பந்தம் ஏற்பட்ட நேரத்தில் வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "கடந்த 1983 முதல் 2009 வரையில், பல்வேறு கால கட்டங்களில், இலங்கையில் நடந்த சண்டையில், இது வரை, 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்' என்ற, ஐ.நா., தகவலும், அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.



ராஜபக்சே மறுப்பு: அமெரிக்கா அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆதாரம் அற்றவை என்றும், முரண்பாடானவை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.



அமெரிக்க தூதரகம் விளக்கம்: ஆனால், அமெரிக்க அறிக்கை, ஆதாரத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக, இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. "போர் நடந்தபோது, அதை கண்ணெதிரே பார்த்த மக்கள் தெரிவித்த தகவல்களும், போர் நடக்காத பகுதியில் வாழும் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் அந்த அறிக்கை அமைந்துள்ளது' என, கூறியுள்ளது.



கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இலங்கையில் போர் தொடர்பாக ஐ.நா., குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமெரிக்காவும் அறிக்கை கேட்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ஒரு வேளை சோற்றுக்கு திண்டாடுவோர் எண்ணிக்கை 100 கோடி


ரோம் : ஒரு வேளை சோற்றுக்குக் கூட திண்டாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முறையாக இவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. வரும் 2015ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க பல திட்டங்களை சர்வதேச அளவில் ஐ.நா., அமைப்புகள் , பல நாடுகளும் நிறைவேற்றாவிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அபாயகர நிலையை எட்டி விடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



சர்வதேச உணவு தினமாக கடந்த 16ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, சர்வதேச வறுமை நிலை குறித்தும், அதை ஒழிக்க போடப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஐ.நா., மற்றும் அதை சார்ந்த அமைப்புகள், ஆராய்ச்சி நிபுணர்கள் குழுக்கள் ஆலோசனை நடத்தின. இத்தாலி தலைநகர் ரோமில் செயல்பட்டுவரும் ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகில் பசியால் வாடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. கடந்த 1980 மற்றும் 90ம் ஆண்டு களில் நடவடிக்கை எடுக்கப் பட்டாலும், பின்னர் வறுமை நிலை கூடிக் கொண்டே போக பல காரணங்கள் உள்ளன. சமீப ஆண்டுகளில், உலக பொருளாதார நெருக்கடியால் பல விளைவுகள் ஏற்பட்டன. வேலையில்லா திண்டாட்டம், உணவுப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஏழை நாடுகளில் வறுமையால் வாடுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஒரு வேளை உணவுக்காக சொத்துக்களை இழக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது; பல பொருட்களை விற்பது மட்டுமின்றி, கல்வி உட்பட பல செலவுகளை குறைத்துக்கொள்ளும் நிலையும் நடுத்தர குடும்பங்களுக்கு பழகி வருகிறது. இது ஆபத்தான திருப்பம். இதனால், ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழுவோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.



இந்த ஆண்டில், ஒரு வேளை உணவு கூட இல்லாமல் திண்டாடுவோர் எண்ணிக்கை உலக அளவில் கடந்த 40 ஆண்டுகளில் முதன் முறையாக 100 கோடியை எட்டி விட்டது. 2015 க்குள் பட்டினியை போக்க போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், இன்னும் நிலைமை மோசமாகி விடும். பட்டினியை கட்டுப்படுத்தவேண்டும் என்றால், உணவு உற்பத்தியை அதிகப்படுத்தவேண்டும். இதற்காக நாம் விவசாயத்திற்கு முக்கியம் கொடுத்து செயல்படும் போது விளைவுகள் எதிர் மறையாக இருக்கின்றன.



கடந்த 1980ம் ஆண்டில் ஏழை நாடுகளுக்கு விவசாயத்திற்கு, பல நாடுகளிலிருந்து கிடைத்த பொருளாதார உதவிகள் 17 சதவீதமாக இருந்தது. ஆனால், 2006ம் வருடத்தில் இது 3.8 சதவீதமாக குறைந்து விட்டது. இதனால், விவசாய உற்பத்தியில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இந்த உதவிகள் சற்று அதிகரித்து வருகிறது. ஆப்ரிக்காவில் உள்ள 20 நாடுகள் உட்பட உலகில் 30 நாடுகளுக்கு பட்டினியை போக்க உடனடி உணவு தேவை உள்ளது. ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தான் அதிகமானோர் பசியால் வாடுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 22 அக்டோபர், 2009

இந்தியாவில் 2 ஆயிரம் பேரை வேலையில் அமர்த்துகிறது டோயட்டா


டோக்கியோ: உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான டோயட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் உள்ள அதன் நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. ‌பெங்களூரில் டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்சுடன் இணைந்து டோயட்டா மோட்டார் நிறுவனம், ரூபாய் 3 ஆயிரத்து 200 கோடி முதலீட்டில் தனது கார் நிறுவன கிளை ஒன்றை நிறுவியுள்ளது. இதுகுறித்து, டோயட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் மேலாண்மை இயக்குனர் ஹிரோஷி கூறும்போது, இந்தியாவில் சிறிய கார் தயாரிப்பிற்கு அதிகமான மனித உழைப்பு தேவைப் படுகிறது. இதற்காக 2 ஆயிரம் பேரை மேலும் பணியில் அ‌‌மர்த்த உள்ளோம். வேலையாட்களை பணியமைத்துவதற்கான வேலைகளை ஆரம்பிதது விட்டோம். புதிய சிறிய வகை கார் அறிமுக திட்டம் வரும் 2011க்குள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

சர்வதேச குற்றவாளிகளின் சொர்க்கம் நேபாளம்


காத்மாண்டு : நேபாள நாடு, உலகளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் புதிய சொர்க்க பூமியாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜப்பா மாவட் டத்தின் கார்பிட்டா சோதனைச் சாவடி வழியாக ஒருவர், சமீபத்தில், இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றார். இவர், பாஸ் போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்த போதும், ஒரு வார்த்தை கூட நேபாள மொழியில் பேசாததால், சந்தேகமடைந்த போலீசார் அவரை, பாஸ்போர்ட் வினியோகிக்கப்பட்ட இடமான சன்சாரி மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அஷ்ரப் அலி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்ய, இன்டர்போல் போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்' என்றனர்.



இதற்கிடையில் அஷ்ரப் அலி, மாவட்ட அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து நேபாள நாட்டின் போலி குடியுரிமை பெற்றதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. அலிக்கு போலி பாஸ்போர்ட் வினியோகிக்க பரிந்துரை செய்த, நகராட்சி அதிகாரி, கடந்த திங்களன்று கைது செய்யப்பட்டார். இந்தியா மற்றும் வங்க தேசத்தினரால் தேடப்பட்டு வரும் சர்வதேச குற்றவாளியான, சுப்ரடா பாயேன் என்பவரை, கடந்த மாதம், இதே எல்லை சோதனை சாவடியில் போலீசார் கைது செய்தனர். இவர், மேற்கு வங்கத் தில் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட போது பிடிபட்டு, பின் ஜாமீனில் வெளி வந்து நேபாள நாட்டில் தஞ்சம் புகுந்தவர். இவரிடமும், நேபாள நாட்டின் பாஸ்போர்ட் உள்ளது.



இவரை தற்போது நேபாள நாட்டின் பத்ரபூர் சிறையில் அடைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதே போன்று, சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பலர், நேபாள நாட்டில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் போது கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பலர் நேபாளத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.இதற்கு நேபாள நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் அதிகாரிகளிடையே பரவியுள்ள ஊழல் ஆகியவையே காரணம் என கூறப்படுகிறது. சர்வதேச அளவிலான குற்றவாளிகளுக்கு நேபாள நாட்டில் அடைக்கலம் கொடுப்பதில், அந்நாட்டின் அரசியல்வாதிகளுக்கு தொடர்பிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதன், 21 அக்டோபர், 2009

ரூ.100 கோடி செலவில் நியூசிலாந்தில் தாஜ்மகால் இந்தியர்கள் கட்டுகின்றனர்



ஆக்லாந்து, அக். 21-
நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆக்லாந்தில் நிலம் வாங்கி அலுவலகம் அமைத்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தி மையம் என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே ரூ.30கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இப்போது இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் தாஜ்மகால் அமைப்பு கட்டிடம் கட்ட உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இது கட்டப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதை பிரமாண்டமாக கட்ட திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நிதி திரட்டவும் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இது குறித்து மகாத்மா காந்தி சென்டரின் தலைவர் கானுபட்டேல் கூறும் போது இந்திய சமூதாயத்தின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை வெளி உலகுக்கு காட்டும் வகையில் தாஜ்மகாலை கட்ட உள்ளோம் என்றார்.
ஆக்லாந்து, அக். 21-
நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தனியாக அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஆக்லாந்தில் நிலம் வாங்கி அலுவலகம் அமைத்துள்ளனர். அதற்கு மகாத்மா காந்தி மையம் என பெயரிடப்பட்டு உள்ளது. இங்கு ஏற்கனவே ரூ.30கோடி செலவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இப்போது இந்த இடத்தில் ரூ.100 கோடி செலவில் தாஜ்மகால் அமைப்பு கட்டிடம் கட்ட உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் வகையில் இது கட்டப்படுகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இதை பிரமாண்டமாக கட்ட திட்டமிட்டு உள்ளனர். இதற்காக நிதி திரட்டவும் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இது குறித்து மகாத்மா காந்தி சென்டரின் தலைவர் கானுபட்டேல் கூறும் போது இந்திய சமூதாயத்தின் வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை வெளி உலகுக்கு காட்டும் வகையில் தாஜ்மகாலை கட்ட உள்ளோம் என்றார்.

சென்னை - சேலம் விமான சேவை


சேலம்: கிங் பிஷர் நிறுவனம், நவ., 15 முதல் சேலம் - சென்னை விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை, நேற்று துவங்கியது. சேலம் மற்றும் சுற்று வட்டார வர்த்தகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடைய நீண்டநாள் கோரிக்கையான, சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை நீண்ட இழுபறியாகவே இருந்து வந்தது.

என்.இ.பி.சி., நிறுவனத்தால் 1994ல் துவக்கப்பட்ட சேலம் - சென்னை விமான சேவை போதிய வரவேற்பு இல்லாததால், 45 நாட்களுக்குள் நிறுத்தப்பட்டது. ஏர் - டெக்கான் உள்ளிட்ட வேறு விமான நிறுவனங்கள் சேலத்திலிருந்து விமான சேவையை துவக்க தயக்கம் காட்டின. கடந்த 12 ஆண்டுகளுக்கு பின், கல்விநிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் சேலத்தில் அதிகரித்து, முக்கிய நகரமாக உருவெடுத்த நிலையில், மேலும் முன்னேற்றத்துக்கு விமான சேவையும் கட்டாயம் என்ற நிலை உருவாகியது.

இந்நிலையில், சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை துவக்க, கிங் பிஷர் நிறுவனம் முன்வந்தது. கிங் பிஷர் நிறுவனத்தால் அக்., 25 ல் துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட, சேலம்-சென்னை விமான சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதால், விமான சேவை சேலத்துக்கு இப்போதைக்கு கிடைக்கப்போவதில்லை என்ற ஏமாற்றம் வணிகர்களிடையே ஏற்பட்டது. தற்போது ஆன் - லைனில் கிங் பிஷர் நிறுவனம், "சேலம்-சென்னை' விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்றிலிருந்து துவங்கியது.

சேலத்திலிருந்து சென்னைக்கு 2, 877 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் நவம்பர் 15ம் தேதி முதல் விமான சேவை துவக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் சங்க தலைவர் மாரியப்பன் கூறியதாவது: மத்திய பாதுகாப்புத் துறை சார்பில், பயணிகள் போக்குவரத்துக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுவதற்காக, விமான சேவை சற்று ஒத்திவைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரபு படேலுடன் கலந்து பேசி, இதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதனால், நவ., 1க்குள் பாதுகாப்பு சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், கிங் பிஷர் நிறுவனம் நவ., 15 முதல் சேலம்-சென்னை விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவை நேற்று துவக்கியுள்ளது. விமான கட்டணமாக 2, 877 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை-சென்னை விமான கட்டணத்தை சேலம்-சென்னைக்கும் நிர்ணயித்துள் ளனர். இவற்றை சில மாதங்களுக்காவது 500 முதல் 600 ரூபாய் வரை குறைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.

மதியம் 2.50 மணிக்கு சென்னையில் கிளம்பி, மாலை 3.50க்கு சேலத்தை வந்தடையும் விமானம், பயணிகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் 4.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.20க்கு சென்னை சென்றடையும் வகையில் விமான சேவை அமைக்கப்பட்டுள்ளது. முன்பதிவு துவங்கிய முதல் நாளில் இரண்டு பேர் முன்பதிவு செய்துள்ளதாக கிங் பிஷர் நிறுவன பொதுமேலாளர் எல்ஸா டிசில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு மாரியப்பன் கூறினார்.