வெள்ளி, 30 அக்டோபர், 2009

சந்திரனில் மனிதன் கால் பதித்த சம்பவம்


இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சி, மனிதன் சந்திரனுக்குச் சென்று கால்பதித்து நடந்ததுதான். பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சந்திரன். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு, தண்ணீர் முதலியவை அங்கு இல்லை. எனவே, மனிதன் சந்திரனுக்குப்போய் வருவது என்பது நடக்க முடியாத காரியம் என்றே நீண்ட காலமாக எண்ணப்பட்டு வந்தது.
ஆயினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சிகளில், அமெரிக்காவும், ரஷியாவும் 20_ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டன.
ரஷியாவின் சாதனை
விண்வெளிச் சோதனையில், ஆரம்ப வெற்றிகள் ரஷியாவுக்கே கிடைத்தன. வானவெளியில், பூமியைச் சுற்றி முதன் முதலில் விண்வெளிக் கப்பலை ("ஸ்புட்னிக்") பறக்கவிட்டது ரஷியா தான். 1957_ம் ஆண்டு அது பூமியைச் சுற்றிப் பறந்தது.
பின்னர் 12_4_1961_ல் காகரின் (வயது 27) என்ற ரஷிய வானவெளி வீரர் ராக்கெட்டில் பூமியைச் சுற்றிப் பறந்துவிட்டு பத்திரமாகத் திரும்பி வந்தார். (இந்த மாபெரும் சாதனையாளர், பின்னர் விமான விபத்து ஒன்றில் பலியானார்). 5_5_1961_ல் ஷெப்பர்டு என்ற வானவெளி வீரரை ராக்கெட்டில் அமெரிக்கா அனுப்பியது. அவர் பூமியைச் வெற்றிகரமாகச் சுற்றினார்.
வானவெளியில் பூமியைச் சுற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றவர் வாலண்டினா தெரஸ்கோவா (வயது 26). ரஷியாவைச் சேர்ந்த இவர் 16_6_1963_ல் பூமியைச் சுற்றிப் பறந்தார்.
இப்படி வானவெளி ஆராய்ச்சிகளில் ரஷியா முன்னணியில் இருந்தபோதிலும், "சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதில் வெற்றி பெறப்போவது அமெரிக்காதான்" என்று அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கென்னடி கூறினார்.
அவர் சொன்னபடியே, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ம்ஸ் டிராங் என்ற வானவெளி வீரர்தான் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன். இந்த அதிசயம் 1969 ஜுலை 21_ந்தேதி நடந்தது. அன்று அமெரிக்க வான வெளி வீரர்கள் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கினார்கள். சந்திரனில் முதன் முதலாக நடந்த பெருமை ஆர்ம்ஸ் டிராங்கை சாரும்.
இருவரும் 21 மணி 36 நிமிடம் 21 விநாடிகள் சந்திரனில் இருந்துவிட்டு, 48 பவுண்டு எடையுள்ள கற்களை சந்திரனில் இருந்து எடுத்துக் கொண்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:-

15_7_1969:_ சந்திரனுக்கு மனிதன் செல்லும் எல்லா ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. ஒத்திகைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. நாளை புறப்படுகிறார்கள்.
16_7_1969 இரவு 7_02 மணிக்கு ராக்கெட் புறப்பட்டது. கென்னடி முனையில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அதில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோர் இருந்தனர்.
17_ந்தேதி: ராக்கெட் சந்திரனை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாதி தூரத்தை ராக்கெட் தாண்டி விட்டது. ராக்கெட்டில் இருக்கும் 3 பேரும் நலமாக இருப்பதாகவும், சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பூமிக்கு தகவல் கொடுத்தனர். ராக்கெட்டின் வேகம் மணிக்கு 3,500 மைல்.
18_ந்தேதி: சந்திரனை ராக்கெட் நெருங்கிவிட்டது.
19_ந்தேதி: பூமியில் இருந்து 2 லட்சம் மைல்களை கடந்து ராக்கெட் சந்திர மண்டலத்துக்குள் புகுந்தது. சந்திரனை ராக்கெட் சுற்றத்தொடங்கியது.

20_ந்தேதி: மாலை 6_30 மணி அளவில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் "தாய் ராக்கெட்"டில் இருந்து, சந்திரனில் இறங்கும் குட்டி ராக்கெட் ("பூச்சி வடிவ வண்டி")டுக்குள் சென்றனர். பிறகு 11.47 மணிக்கு தாய் ராக்கெட்டுடன் இருந்து குட்டி ராக்கெட்டை பிரித்து சந்திரனை நோக்கி பயணமானார்கள். தாய் ராக்கெட்டில் காலின்ஸ் இருந்தார்.
குட்டி ராக்கெட் 2 மணி நேரம் பறந்து சென்று நள்ளிரவு 1.47க்கு சந்திரனில் இறங்கியது. ஆர்ம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் பூச்சி வண்டிக்குள்ளேயே விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.
21_ந்தேதி உலகமே வியக்கும் அதிசயம் நடத்தப்பட்டது. அன்று காலை 8_26 மணிக்கு பூச்சி வடிவ வண்டியின் கதவை திறந்து ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் காலை வைத்தார். நிலாவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர்.
பிறகு ஆல்ட்ரினும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். இருவரும் சந்திரனில் சிறிது தூரம் நடந்தார்கள். சந்திரனில் கல், மண் முதலியவற்றை சேகரித்தார்கள். பிறகு சந்திரனில் அமெரிக்க கொடியை நாட்டினார்கள். அதோடு தாங்கள் சந்திரனில் இறங்கியதை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை பதித்தார்கள்.
அவர்கள் இருவரும் மீண்டும் பூச்சி வடிவ ராக்கெட்டுக்கு வந்து தாய் ராக்கெட்டுடன் இணைந்தார்கள். பிறகு பூமியை நோக்கி புறப்பட்டனர். 24_ந்தேதி:_ இரவு 10_19 மணிக்கு அந்த ராக்கெட் பத்திரமாக கடலில் வந்து இறங்கியது. உலகமே அவர்களை பாராட்டியது.
சந்திரனில் மனிதன் இறங்கிய சோதனை வெற்றி பெற்றுவிட்டதால் அமெரிக்கா தொடர்ந்து ராக்கெட்டுகளை பறக்கவிட்டது. அடுத்து சென்ற அமெரிக்க வான வெளி வீரர்கள், சந்திரனில் சிறு வண்டியை ஓட்டிச்சென்று பல்வேறு சோதனைகளை நடத்தினார்கள்.

கருத்துகள் இல்லை: