புதன், 14 அக்டோபர், 2009

என்று தீரும் இவர்களின் துயரம்

முகாமில் இருந்து விடுவியுங்கள் : தமிழக எம்.பி.,க்களிடம் கோரிக்கை

Front page news and headlines today

கொழும்பு : தமிழக எம்.பி.,க்கள் குழுவிடம், "அபிவிருத்திப் பணிகளுக்கு அவசரம் இல்லை; முகாம்களில் உள்ள மக்களின் விடுதலையே அவசியம்' என, யாழ் மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ்,கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தியத் தூதுக்குழு, யாழ் பொது நூலக மண்டபத்தில் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்தது. இலங்கைப் படையினருடன் சேர்ந்து இயக்கும் துணைப் படையான, ஈ.பி.டி.பி., குழுவின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.அதில், "அரசியல் தீர்வைப் பெற துணை நில்லுங்கள். அபிவிருத்திப் பணிகள் இப்போது அவசரம் இல்லை; முகாம்களில் உள்ள மக்களின் விடுதலை தான் முக்கியம்' என, மாநகர சபை உறுப்பினர் ரெமிடியஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து வர்த்தக பிரமுகர் ஒருவர் கூறியதாவது:எங்களின் உறவினர்கள், அகதி முகாம்களில் வாடுகின்றனர். தமிழ் மக்களுக்கான தீர்வு விஷயத்தில் இந்தியா மவுனம் சாதிக்காமல், வெளிப்படையாக செயல்பட்டு, தீர்வு வழங்க வேண்டும். மேலும், அகதி முகாம்களில் உள்ள இரண்டரை லட்சம் மக்களை உடனடியாக விடுவிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள், அனைத்துலக நியமனங்களுடனே அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காகவே முட்கம்பி வேலிகள் போடப்பட்டுள்ளன. அவர்களின் சொந்த ஊர்களில் குடியேற வேண்டும் என்பதைத் தவிர, அவர்கள் வேறு எதையும் கோரவில்லை' என, தமிழக காங்கிரஸ் எம்.பி., சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்திருக்கிறார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:யாரையும் சந்திக்கக் கூடாது என எந்தத் தடையுமின்றி, சுதந்திரமாகவே முகாம்களுக்குச் சென்று, அவர்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தோம். முகாம்களில் உள்ளவர்கள், அவர்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்பதையே, பிரதான கோரிக்கையாக கூறினர். முகாம்களும் அனைத்துலக நடைமுறைகளின் படியே அமைக்கப்பட்டுள்ளது. சென்னை திரும்பியவுடன், முதல்வர் கருணாநிதியிடம் இலங்கை முகாம்களின் நிலை குறித்த அறிக்கையை கொடுக்க உள்ளோம்.இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் கூறினார்.

கருத்துகள் இல்லை: