செவ்வாய், 13 அக்டோபர், 2009

கடலுக்குள் அமைச்சரவை கூட்டம்

கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் புவி வெப்பமயமாவதை தடுக்க புது முயற்சி : அசத்துகிறார் மாலத் தீவு அதிபர்

அக்டோபர் 13,2009,00:00 IST

Top global news update

மாலே: புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கடலுக்கடியில், அமைச்சரவை கூட்டம் நடத்தும் புதுமையான திட்டத்தை செயல்படுத்த மாலத் தீவு அதிபர் முகமது நசீத் முடிவு செய்துள்ளார். உலக நாடுகள் கார்பனை அதிகம் வெளியிடுவதால், புவி வேகமாக வெப்பமயமாகி வருவதாக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால், கடல்நீர் மட்டம் அதிகரித்து, கடலோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளனர். இதில் அதிக அபாயத்தில் இருப்பது, மாலத் தீவில் உள்ள சிறிய தீவுகள் தான், என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, மாலத் தீவு அதிபர் முகமது நசீத், புவி வெப்பமயமாவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக, மாலத் தீவில் உள்ள தீவுகள் கடலுக்குள் மூழ்கும் சூழ்நிலை ஏற்படுமானால், மக்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் குடியமர்த்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.
இதற்காக, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிரடியாக புதுமையான ஒரு திட்டத்தை செயல்படுத்த அதிபர் முகமது நசீத் முடிவு செய்துள்ளார்.
இதன்படி, அக்டோபர் 17ம் தேதி, கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் தனது அமைச்சரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார். இதில், அமைச்சரவையில் உள்ள 14 அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து, மாலத் தீவு அதிபர் மாளிகை அதிகாரி அமிதான் சவுனா கூறியதாவது:
கிருபிஷி என்ற தீவுப் பகுதியில் கடலுக்கு அடியில் அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ளது. இதில், பங்கேற்பதற்காக, அமைச்சர்கள் அனைவரும் தலைநகர் மாலேயில் இருந்து அதிவிரைவு படகில் அந்த தீவுக்கு செல்லவுள்ளனர். 20 நிமிட பயணத்திற்கு பின், கிருபிஷி தீவை அடையும் அமைச்சர்கள், அங்கு கடலுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் ஆலோசனை நடத்துவர். தண்ணீருக்கு அடியில் கருத்துக்களை எப்படி பகிர்ந்து கொள்வது, நீச்சலடிப்பது என்பது குறித்த சிறப்பு பயிற்சிகளை தற்போது மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அமிதான் சவுனா கூறினார்.

கருத்துகள் இல்லை: