கடந்த 5 வருடங்களைப் போலவே இந்த வருடமும் அதிகப் பாடல்களை எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இப்போது 34 படங்களில் தனி பாடலாசிரியர், 126 பாடல்கள் என நீண்டு கொண்டு இருக்கிறது இவரது சாதனைப் பட்டியல்.
முக்கியமான பாடல்கள்.... இலக்கியத்தின் மீதான காதலும், அதை அமைத்துக் கொடுக்கிற தருணங்களும்தான் என்னை இவ்வளவு தூரத்துக்கு இழுத்து வந்ததாக நினைக்கிறேன். ஒவ்வொரு பாடலையும் எழுதி முடித்ததும், பாடலின் தருணங்களுக்காக காத்திருந்ததுதான் என்னை நகர்த்திக்கொண்டிருக்கிறது. முக்கியமான பாடல்கள் எனப் பார்க்க போனால் ஒரு கல் ஒரு கண்ணாடி..., விழி மூடி யோசித்தால்..., ஏதோ செய்கிறாள்... என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றை முக்கிய பாடல்கள் என்ற கேள்வியில் அடைக்க விரும்பவில்லை.
பல்லவிக்கு மெனக்கெடலா? பாட லில் பல்லவிதான் முக்கியம். ஆனால் புது வார்த்தைகள் வேண்டும். மனசுல பதிந்து சிறகடித்து கிடந்த விஷயங்கள் எல்லாம் பழமையாகி விட்டது. கதையை உள்வாங்குகிற மக்கள், நிச்சயம் பாடலையும் அதற்கு ஏற்றால்போல் எதிர்பார்க்கிறார்கள். பாபநாசம் சிவனில் ஆரம்பித்து கண்ணதாசன் ஏன்..? என் காலம் வரைக்கும் எல்லா பாடல்களும் மக்களை சென்றடைந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் எத்தனை பாடல்கள் இன்னும் முணுமுணுக்கப்படுகிறது எனத் தெரியவில்லை. 1500 பாடல்களுக்கு மேல் எழுதி விட்டேன். அதில் 90 சதவீதம் ஹிட். எல்லா பாடல்களும் இப்படி எழுதியதுதான். சில பாடல்களுக்கு அனுபவங்கள் கை கொடுக்கும். சிலவற்றுக்கு உலக இலக்கியங்கள் முதல் மனிதனை படித்தது வரை சில விஷயங்கள் கை கொடுக்கும். இப்படித்தான் என் பயணம் போய்க் கொண்டிருக்கிறது.
பாடல்களின் தேடல்... திரைப் பாடல்கள் என்றாலே அதீத கற்பனையும், கொஞ்சம் அறிவியலோடு பட்டியல் தன்மையும் கோலோச்சி இருந்ததை மாற்றி கண்ணதாசனின் இலக்கியத் தரத்துக்கு எளிமையாக்கி இருப்பதாக நினைக்கிறேன். கடைக் கோடி மனிதனையும் சென்றடையும், ஒரே ஆயுதமாக இருக்கும் பாடல்களுக்குள் மனித வாழ்க்கையின் தேடலை வைத்தது என் வெற்றியாக இருக்கலாம். அதையும் தாண்டி தேடலில் என் வாழ்க்கை தொடரும்.
சினிமா இயக்கம்.... இரண்டு வருடங்கள் ஆகலாம். அல்லது அதற்கு மேலும் ஆகலாம். திட்டம் மட்டும் நிஜம். லிங்குசாமி, "கீரிடம்' விஜய் மாதிரியான சினிமா நண்பர்கள் கதை கேட்டிருக்கிறார்கள். அதை ஒய்வு நேரங்களில் எழுதுவதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். இப்போதைக்கு பாடல்கள் எழுதவே நேரம் போதவில்லை.
பாராட்டுகள்.... நிறைய இருக்கிறது. வாழ்க்கை முழுவதும் வழி நெடுகிலும் பாராட்டுகள்தான் என்னை இயங்க வைக்கிறது. சபாஷ் என என் வரிகள் மீது சில வார்த்தைகள் சிந்தும் போது என் படைப்புகளுக்கான தருணங்களை எண்ணிப் பார்த்து மனம் நெகிழ்கிறேன். பாலசந்தர் தொடங்கி சசிகுமார் வரை எழுதி விட்டேன். ஒவ்வொரு பாடலுக்கும், வரிக்குமான பாராட்டுகள்தான் என் வாழ்நாள் பொக்கிஷம்.
"அங்காடி தெரு' படத்தின் பாடலுக்கு விருதாமே? ஆமாம், "அங்காடி தெரு'வில் வரும் ""புல்லும் பூண்டும் வாழும் உலகம்.. நீயும் நானும் வாழ வழியில்லையா?'' என்ற பாடலை எழுதியிருக்கிறேன். வறுமை பற்றி எழுதப்பட்ட கவிதைகளில் உலகின் 5 சிறந்த படைப்புகளில் ஒன்றாக "உலக கவிஞர்கள் சங்கம்' அதை தேர்வு செய்திருக்கிறது.
கேள்விகள்... பிரபஞ்சமே கேள்விகளின் அணுக்களால் ஆனது. பதில் உள்ள கேள்விகள். பதில் இல்லா கேள்விகள். கேள்விகளுக்குள் அடங்காத கேள்விகள். விடையே கேள்வியாய் இருக்கும் கேள்விகள். என நம் மனதின் மரக்கிளையில் ஆயிரம் கேள்விகள் உதிர்ந்துக் கொண்டிருக்கிறது. எனக்குள்ளும் சில கேள்விகள் உண்டு. கொஞ்சம் முயன்றால் அவற்றுக்கு பதில் கிடைத்து விடும். ஆனால் அவை கேள்வியாய் இருப்பதே எனக்கு பிடித்திருக்கிறது. அதனால் சில கேள்விகளின் சேமிப்புகளுடன் என் நாள்களுக்கு சுவாரஸ்யம் சேர்த்து கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக