திங்கள், 21 டிசம்பர், 2009

மக்களை முட்டாள்களாக்கும் தொ(ல்)லைகாட்சி வியாபாரம்


         மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும். காலை​யில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைக​ளைப் பள்​ளிக்கோ கல்லூ​ரிக்கோ தயார் செய்து அனுப்பி​விட்​டுக் கணவரை அலுவலகத்​திற்​குப் புறப்படச் செய்வதற்​குள் 
குடும்பத்தலைவிக​ளுக்கு போதும் போது​மென்​றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்ப​தில்லை என்ப​தால், தொலைக்​காட்சி​யின் பக்கம் கவனம் செலுத்துவது என்​கிற பேச்​சுக்கே இட​மில்லை.​ அத​னால்​தான் பெரும்​பா​லான சானல்க​ளில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவ​ருக்​கும் பொது​வான நிகழ்ச்சிகள் அந்த நேரத்​தைப் பங்கு​போட்​டுக் கொள்​கின்றன. 

          இந்தக் காலை​நேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்​காட்சி​யைத் திருப்​பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குத​லைத் தொடங்கு​கின்றன நமது சானல்கள். பொது​வாக, ஒவ்​வொரு குடும்பத்தி​லும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிக​ளுக்கு இருப்ப​துண்டு. இந்தக் கவலை​யைத் தங்க​ளுக்​குச் சாதகமாகப் பயன்ப​டுத்தி, அவர்களது அறியாமையை​யும் நம்​பிக்கையை​யும் காசாக்க முயல்​கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீர​வேண்​டுமா? இந்தக் கல்லை வாங்​குங்கள், அந்தக் கவசத்தை வாங்​குங்கள் என்று சானல்க​ளில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்​பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்​கிற உன்னத​மான குறிக்கோ​ளோடு, கண்ணை மூடிக்​கொண்டு சானல்க​ளும் இதற்​குத்  துணை போவது கொடுமையி​லும் கொடுமை! 

           விஜய்  தொலைக்​காட்சி​யில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்​காக வரும் நகைக்க​டைக்காரர், போக​ரின் பாஷா​ணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்க​மாக மாறுவது (தெரிந்​தால் இவரே தங்கம் தயா​ரிக்க வேண்டியது​தானே!) என்பது போன்ற ஒன்​றுக்​கொன்று சம்பந்த​மில்​லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்​புப்ப​டுத்​திப் பேசி​யும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்​யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறி​யும், ஏற்கெனவே குழப்பத்​தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்​தில் ஆழ்த்தி​னார்.     

            உங்கள் ஜாதகத்துடன் நகைக்க​டைக்​குள் செல்வது, மாஸ்டர் செக்கப்​பிற்​காக மருத்துவம​னைக்​குச் செல்வ​தைப் போன்றது என்று தனது வியாபாரத்​திற்கு வலு சேர்க்​கும் இவர் சொல்ல வருவது என்ன​வென்​றால், 'எங்கள் கடை​யில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணி​யுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்​தும் தீர்ந்துவி​டும்' என்பது​தான். கல் ஒன்று, மாங்​காய் இரண்டு என்பது பழ​மொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து​கொண்ட புது​மொழி!   

           அதிர்ஷ்டக்கல் வியா​பாரி தனது வியாபாரத்தை முடித்து​விட்​டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகி​றார் கட​வுள் பெய​ரில் கவச விற்பனை செய்​யும் சாமி​யார் வேட​மிட்ட ஒரு வியா​பாரி.​  செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்​கிய வாழ்வு ஆகியவற்​றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலி​ருந்து காப்பது, வழக்குக​ளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களை​யும் நல்குகிற​தாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவ​னிக்க)​. குழந்தைக​ளுக்​குப் பள்​ளிக் கட்டணம் கூடக் கட்ட முடி​யாத நிலை​யில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்​கிய பின்னர் (கவசம் வாங்க மட்​டும் காசு எங்கி​ருந்து வந்த​தென்று தெரிய​வில்லை!) செல்வச் செழிப்​பில் திளைப்பதாகப் பேட்டி​யும் உண்டு.   

            இதைத் தொடர்ந்து  - கண் திருஷ்​டியிலி​ருந்து காக்​கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளி​லும் குரானி​லும் கூடக் குறிப்பிடப்பட்டி​ருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்​திற்கு வலு சேர்த்​தார்கள் இந்நிகழ்ச்சி​யில். கல்யாணமா​காத பெண்கள் இதை வாங்கி​னால் உடனே திருமணம் நிச்சயமாகு​மாம் (பலன​டைந்தவ​ரின் பேட்டி​யும் உண்டு). இத்த​னைக்​குப் பிற​கும் நீங்​கள் ஏமாளியாகாமல் இருந்​தால் ஆச்சரியம்​தான்! 



     

          மக்கள் தொலைக்​காட்​சிப் பக்கம் போனால்,  'உங்க​ளைச் சொட்டை, வழுக்கை, கிரிக்​கெட் கிர​வுண்டு என்று கிண்டல் செய்கி​றார்களா? கவ​லைப்​பட வேண்​டாம், எங்க​ளுக்கு போன் செய்​யுங்கள்' என்று அழைத்​துக்​கொண்டி​ருந்​தார் ஒருவர். ஏதோ காவல்துறையின​ரின் அறி​விப்பு இது என்று நினைத்​தால், அது உங்கள் தவறு. குறிப்​பிட்ட தைலத்தை வாங்​கிப் பூசி​னால், இத்த​கைய கிண்டல் பேச்சுகளிலி​ருந்து தப்​பும் அள​விற்கு உங்கள் சொட்டை, வழுக்கை​யெல்​லாம் மறைந்து முடி கருகரு​வென்று வளரு​மாம். மக்க​ளின் பலவீனங்க​ளில் இது​வும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க முயல்பவர்க​ளுக்கு உத​விக்​கொண்டி​ருந்தது மக்கள் தொலைக்​காட்சி. நீங்க​ளுமா?    







            மெகா தொலைக்​காட்சி​யிலோ, கருப்பானவர்க​ளைச் சிவப்​பாக மாற்​றும் மந்திரக் களிம்பு விற்பனை... அந்தக்​கால முனிவர்க​ளின் கடுமை​யான உழைப்​பின் பல​னாம் இது (முனிவர்கள் இதற்காகத்​தான் கடுந்தவம் புரிந்​தார்கள் போலி​ருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பா​லான சானல்களை ஆக்கிர​மித்​துள்ள இந்த வியா​பார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை என்பது பற்றி யாருக்​கென்ன கவலை? Magical remedy  பற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்று, ஏதோ விதி இருப்ப​தாக, எப்​போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்! அப்படி ஏதாவது இருக்​கும் பட்சத்​தில், அந்த விதி எங்கே தூங்​கிக்​கொண்டி​ருக்கிறது என்ப​தைக் கண்டுபி​டித்​துக் கொடுப்பவர்க​ளுக்​குப் பரிசு அறி​விக்க​லாம்!    


   


       

 

கல், தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்​பிக்கைகள் ஒருபுறம் என்​றால், பங்​குச்சந்தை மீதான நம்​பிக்கை மறுபுறம். இந்த நம்​பிக்கை​யைப் பங்கு​போட்​டுக்​கொண்டு விற்பதி​லும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்ப​டும் (கலைஞர்), வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்​கெட்  டிப்ஸ் (ஜெயா பிளஸ்) என்று எல்​லாச் சானல்களி​லும் ஏதாவது ஒரு வடி​வில் நுழைந்து விடுகிறது பங்​குச்சந்தை.    

            எந்தப் பங்கை வாங்க​லாம்? என்ன விலைக்கு வாங்க​லாம்? சந்தை ஏறுமா, இறங்​குமா? என்பது போன்ற கேள்விக​ளுக்​குப் பதில​ளிக்கக் காத்தி​ருக்கி​றார்கள் பங்​குச் சந்தை வல்லுனர்கள். குடுகு​டுப்​பைக்காரன் குறி சொல்வது போல இவர்கள் கொடுக்​கும் பரிந்து​ரையை நம்பி, பங்​குச் சந்தை​யில் பணம் போடுபவர்க​ளைப் பார்த்​துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய? பங்​குச்சந்தையை​யும் பரிந்துரைகளை​யும் நம்பு​வோர் இருக்​கும் வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்​கும் சானல்க​ளின் வியாபாரம் அமோகம்​தான்!    

             எல்லா நம்​பிக்கைக​ளும் ஏதோ ஒருவகை​யில் வியாபாரமா​கிக் கொண்டி​ருக்க, ஜனநாயகத்​தின் மீது மக்கள் கொண்டி​ருக்​கும் நம்​பிக்கை​யும் வியாபாரமா​கிக் கொண்டி​ருந்த​தைச் செய்திக​ளில் பார்க்க முடிந்தது. வாக்காளர்க​ளுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சான​லில் பார்த்த அதிர்ச்சி அடங்​கும் முன்​னரே, வாக்காளர்க​ளுக்கு வழங்குவதற்​காக வைக்கப்பட்டி​ருந்த கட்​டுக்கட்​டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்​றொரு சான​லில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்க​ளும் சேர்ந்து செய்த தேர்தல் வியாபார​மும், நேயர்க​ளின் நம்​பிக்​கையை அடிப்படையாகக் கொண்டதே என்ப​தைச் சொல்லத் தேவை​யில்லை.    

            நிச்சயமாக என்றே​னும் ஒரு​நாள், இவை​யெல்​லாம் மாறக்கூ​டும்... இந்த தொலைக்காட்சி வியாபாரிகளிடம் சிக்​காத நாள் கூட வர​லாம்...​ நம்​புங்கள்...!

6 கருத்துகள்:

பாலா சொன்னது…

அடடே... அப்ப.. மக்கள் தொலைக் காட்சியில் வரும் அந்த தைலத்தை... தைலாபுரத்துக்கு அனுப்பலாமே..!!

அப்பனையும்-பையனையும்.. போட்டோவில் பார்த்தாக் கூட கண்ணை கூசுதே! :) :)

(அவங்க நம்மை கிண்டல் பண்ணலாம்.. நாம பண்ணக் கூடாதா என்ன?) :)

ramalingam சொன்னது…

நிச்சயம் இந்த அயோக்கியத்தனங்கள் ஒருநாள் மாறும்.

۞உழவன்۞ சொன்னது…

உங்கள் பதிவு சிறப்பு நன்றி

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு வரைமுறை இருப்பதுபோல இந்த விளம்பரதாரர் நிகழ்ச்சிகளுக்கு எதுவும் கிடையாது. அதனால் பல பொருள்கள் இப்படி விற்க்கபடுகின்றன - பலதும் 10 மடங்கு அல்லது அதற்க்கு மேலும் விலை வைத்துதான் விற்க்கிறார்கள். மருந்து விளம்பரங்களும் இதில் அடக்கம். இதில் வாங்கி ஏமாந்தாலும் விடாமல் அடுத்த விளம்பரம் பார்த்து ஏமாறும் பார்ட்டிகளும் உண்டு

அண்ணாமலையான் சொன்னது…

ம்ம் நடக்கட்டும் விழிப்புனர்வு வந்தா சரி..

புதுப்பாலம் சொன்னது…

நல்லதொரு பகிர்வு.