செவ்வாய், 15 செப்டம்பர், 2009

இதயம் இரவல் பெற்ற அபிராமியின் கண்கள் தானம்

இதயம் இரவல் பெற்ற அபிராமியின் கண்கள் தானம்
செப்டம்பர் 14,2009,23:30


சென்னை : கர்நாடக மாநிலம் பெங்களூரு ராமச்சந்திரா புரத்தில் வசிக்கும் தொழிலதிபர் சேகரின் மகள் அபிராமி(9). இவருக்கு, கடந்தாண்டு செப்டம்பர் 23ல், சென்னை முகப்பேரில் உள்ள, "பிராண்டியர் லைப் லைன்' மருத்துவமனையில், இதயேந்திரனின் இதயம் பொருத்தப்பட்டது. டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள், 45 நிமிடம் போராடி, சிறுமி அபிராமிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தொடர்ந்து ஒரு மணி நேரம் சிறுமிக்கு இதய துடிப்பு, ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. தொடர் கண்காணிப்புக்குப் பிறகு சிறுமி அபிராமி, மீண்டும் சுட்டிக் குழந்தையாக இவ்வுலகை வலம் வந்தாள். இச்சம்பவத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பன்மடங்கு பெருகியது.


கடந்த மாதம் வரை பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த அபிராமிக்கு, 10 நாட்களுக்கு முன், பழைய முறையிலான நோய் அறிகுறிகள் தென்பட்டன. உடனே, சென்னைக்கு வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு பகலாக டாக்டர்கள் அவளைக் கண்காணித்து வந்தனர். ஆனால், பொருத்தப்பட்ட இதயம் ஒத்துழைக்காததால், நேற்று முன்தினம் இரவு, சிகிச்சை பலனின்றி அபிராமி இறந்து போனாள். இடைவிடாத முயற்சியினால், அபிராமியின் உயிரை மீட்டெடுத்த அவளது பெற்றோருக்கு அவளது மரணம், பேரிடியாக இருந்தது. அதையும் அவர்கள் தாங்கிக்கொண்டு, கண்ணீரோடு, அபிராமியின் கண்களை எழும்பூர் கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுத்தனர். அன்று நள்ளிரவே அவளது உடலை பெங்களூரு கொண்டு சென்றனர். இறந்தும் கண்களை தானமாக விட்டுச் சென்ற அபிராமி, மீண்டும் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுவிட்டாள். ஆனால், அவளின் திடீர் மரணமோ, இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்ட டாக்டர்கள் மற்றும் உறுப்பு தான விழிப்புணர்வாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.


உறுப்பு தானத்தை இயக்கமாக மாற்றிய இதயேந்திரன்: மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம், ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக்கொண்டபோதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது. மனித உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது தொடர்பாக மத்திய அரசு, 1994ம் ஆண்டு சட்டம் இயற்றியது. இச்சட்டத்திற்கு 1994ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அப்போதைய ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினார். இச்சட்டத்தின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்தால், இரு நபர்கள் முன்னிலையில் எழுதித்தர வேண்டும். அந்த இரு நபர்களில் ஒருவர், உறவினராக இருக்க வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டோரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க, பெற்றோர் அனுமதி வழங்க வேண்டும்.


உடல் உறுப்பு தானத்தை வர்த்தகமயமாக்குவதைத் தடுக்கவும், சட்டத்தில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருவரது உடல் உறுப்புகளை அனுமதியின்றி அகற்றுபவர்களுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. உறுப்புகளை தானமாக வழங்க முன்வருபவர்களுக்கு, டி.பி., போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருக்கக் கூடாது. தானமாக வழங்கப்படும் உறுப்புகளை எடுக்கும்போது, டாக்டர்கள் இது குறித்து கவனமாக பரிசோதனை நடத்துகின்றனர். ரத்த வகை, உடல் உறுப்பின் அளவு ஆகியவற்றை பொறுத்து, ஒருவரது உடல் உறுப்புகள், மற்றொருவருக்கு பொருத்தப்படுகின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம்நாட்டில் உடல் உறுப்பு தானம் மிகவும் குறைவாக உள்ளது. 10 லட்சம் மக்கள் தொகையை அடிப்படையாக கொள்ளும்போது, ஸ்பெயினில் 32 பேர், அமெரிக்காவில் 21 பேர், போர்ச்சுக்கலில் 17 பேர், போலந்தில் ஆறு பேர், தாய்லாந்தில் ஒருவர் உடல் உறுப்பை தானமாக வழங்குகின்றனர். ஆனால் நம் நாட்டில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 0.05 பேர் மட்டுமே தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர். தேசிய சராசரியை விட அதிகமாக, தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 0.8 சதவீதம் பேர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருகின்றனர்.


சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த டாக்டர் தம்பதி அசோகன், புஷ்பாஞ்சலியின் மகன் இதயேந்திரன் (17) சாலை விபத்தில் சிக்கினான். டாக்டர்கள், இதயேந்திரனின் மூளை செயலிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவனது பெற்றோர், இதயேந்திரனின் இதயம், கண்கள், சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். இதற்காக இதயேந்திரனின் தாயார் புஷ்பாஞ்சலிக்கு தமிழக அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. இதயேந்திரன் பெற்றோரின் தியாகத்துக்குப் பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்தது. துணை முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். துரதிர்ஷ்டவசமாக, இதயேந்திரனின் இதயத்தை தானமாக பெற்ற ஒன்பது வயது மாணவி, நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். மாணவன் இதயேந்திரன் தானமாக வழங்கிய இதயம் ஓராண்டில் தனது துடிப்பை நிறுத்திக் கொண்ட போதும், தமிழகத்தில் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வருவது அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் 2008ம் ஆண்டு அக்டோபர் முதல் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் வரை, 120 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 76 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள், 31 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் அடங்கும். தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு மட்டுமே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, ஆறு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 48 மருத்துவமனைகளுக்கும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஐந்து மருத்துவமனைகளுக்கும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இரு மருத்துவமனைகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனைகளில் உடல் உறுப்புகள் தானமாக தேவைப்படும் நோயாளிகள் விவரங்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. உடல் உறுப்புகள் தானமாக கிடைக்கும் போது, பதிவு மூப்பு அடிப்படையில், அவை நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.


மாநிலம் முழுவதும் தானமாக வழங்கப்படும் உடல் உறுப்புகள் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், சென்னை பொது மருத்துவம�னையில் உள்ள உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்ட மையத்தில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அமலேர்பவநாதன் கூறுகையில், ""மாணவன் இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதன்பிறகு, பலரும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்துள்ளனர்,'' என்றார்.


மாற்று இதயம் நீண்ட கால தீர்வா? நம் வாழ்நாளில் சராசரியாக 250 கோடி முறை இதயம் துடிக்கிறது. ஒருவர் உடலிலிருந்து இதயம் எடுக்கப்பட்டுவிட்டால், அது 4 - 6 மணி நேரத்துக்குள் இன்னொருவருக்கு பொருத்திவிட வேண்டும். இது ஆபரேஷன் நடக்கும் நேரத்தையும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு செப்., 23ல் இதயேந்திரன் இதயம், பெங்களூருவைச் சேர்ந்த சிறுமி அபிராமிக்குப் பொருத்தப்பட்டது. இச்சிறுமி ஓர் ஆண்டுக்குள் உயிரிழந்துவிட்டார். பொதுவாக, முதல் ஐந்து ஆண்டுகளில், மாற்று இதயம் பெற்றவர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துவிடுகின்றனர். மாற்று இதயம் பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் ஓர் ஆண்டும், 75 சதவீதம் பேர் மூன்று ஆண்டும், 68 சதவீதம் பேர் ஐந்து ஆண்டு வரையும் உயிர் வாழ்கின்றனர். 10 ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் மரணமடைந்துவிடுகின்றனர்.


இதயம் தொடர்பான நோய்களே, மரணத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. 1978ல் மாற்று இதயம் பெற்ற டோனி ஹியூஸ்மென் என்பவர், 31 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்து 2009 ஆகஸ்ட் 10ல் உயிரிழந்தார். 1967ல் தான் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்ரிக்காவில் நடந்தது. 1994ல் இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் 4 - 5 ஆயிரம் பேருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால், 1994ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டு வரை 43 பேருக்குத் தான் இதயம் மாற்றப்பட்டது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2,000 இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகின்றன. உலகம் முழுவதும் இந்த எண்ணிக்கை ஏறத்தாழ 3,000 ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை: