வெள்ளி, 8 ஜனவரி, 2010

அறிவின் குற்றமா ? அழகின் குற்றமா ??



 
தனியார் நிறுவனமொன்றில் உயர் அதிகாரியாக பணிபுரியும் ஒரு சகோதரியின் மன உளைச்சலை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் பதிவு இது.


24  வயதில் திருமணமானபோது அந்த நிறுவனத்தில் அவர் ஒரு சாதாரண
ஊழியர். இரண்டு ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்த்தது அவரின் குடும்ப வாழ்க்கை.


அதன் விளைவு அவருக்கு ஒரு குழந்தை.அவருடைய அசாத்திய திறமையை பார்த்து,சீனியாரிட்டி பற்றியெல்லாம் கவலைப்படமால்,
26  வயதில் அவருக்கு உயர் அதிகாரி பொறுப்பு கொடுத்தது கம்பெனி
நிர்வாகம்.


இப்போழுது, கணவனைவிட பதினைந்தாயிரம் ரூபாய் அதிக சம்பளம்.
கணவனின் தாழ்வு மனப்பான்மை வெளிப்பட ஆரம்பித்த தருணம் அதுதான்.


அவளுடைய அழகுதான் பதவி உயர்வுக்கு காரணம் என்று அவன் உறுதியாக நினைக்க,அறிவற்ற ஓர் அழகு பதுமையாகவே அவன் தன்னை கருதுவது தெரிந்து அவள் மனமுடைந்துபோக ......பிரச்சினை இப்படித்தான் தொடங்கியது.


நிறுவனத்தின் இயக்குனருடன் அவளை இணைத்து பேசுகிற அளவுக்கு
பிரச்சினை முற்றியபிறகு,இனி பிரிந்து செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்கிற நிலை.


தாய் வீட்டுக்குப் போய்விட்ட அவள்,பொதுவான  மனிதர்கள் மூலம்,
பரஸ்பர விவாகரத்து தொடர்பாக கணவனுடன் பேசிப்பார்த்தாள்.பிரியவே
முடியாது என்று அவன் பிடிவாதம் பிடித்தபோது மற்றவர்களும் அவன் கட்சியில் சேர்ந்துகொண்டனர்.


சேர்ந்து வாழ்வதுதான் கெளரவம் என்கிற மூளைச் சலவை தொடங்கியது,
இன்னும் தொடர்கிறது.கணவன் என்கிற அந்தக் கனவான் அவளை மதிக்கவில்லை.அவளுக்குள்ளிருக்கும் திறமையை அவன் அறியவுமில்லை.


எல்லாவற்றிற்கும் மேலாக அவளை கொச்சைப்படுத்துவது, கேவலப்படுத்துவது  என்கிற அளவுக்குக் கீழிறங்கினான்.நாளாக,நாளாக
வாழ்க்கை நரகமாகிக் கொண்டுவந்தது. அந்த நரகத்திலிருந்து வெளிவர அவள் விரும்புவதில் என்ன தவறு.


அதை புரிந்துகொள்ளாமல்,அந்த நரகத்தில்தான்  நீடிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வது என்ன நியாயம்?











.

கருத்துகள் இல்லை: