திங்கள், 30 ஆகஸ்ட், 2010

என்ன நடக்கிறது காஷ்மீரில் ?

 
பாரமுல்லா மாவட்டத்தைச் சேர்ந்த 14  வயது " வாமிக்  பாரூக்குக்கு " டாம் அண்ட் ஜெர்ரி கார்டூன்கள் என்றால் அவ்வளவு பிரியம். அறிவியல் பாடங்களில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன்.பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் நீல நிற யுனிபார்மைக் கழற்றி வைத்துவிட்டு பக்கத்துவீட்டு நண்பர்களுடன்,விளையாடப் போனான். தெருவோர வியாபாரியான அவனின் அப்பா வீட்டில் இல்லை.

பாரூக்கின் அம்மா மைசூன் வீட்டில் இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே ஒரு பெரும் சப்தம் கேட்டது.மைசூனுக்கு சர்வ நிச்சயமாய் தெரிந்தது அது துப்பாக்கி சூடு என்று. பதத்தற்றதுடன் வெளியே ஓடி வந்தார். அங்கே பாரூக்,தலையில் பாய்ந்த குண்டுடன் ரத்தம் வழிய இறந்துகிடந்தான்.

ஒரே மகன் பாரூக் அவர்களை விட்டுப் போய்விட்டான். இப்போது அவனின் பெற்றோர்கள் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராடி காயம்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்டு இருக்கும் ரத்ததான முகாமில் இருக்கிறார்கள்.


" காஷ்மீர் மக்கள் எதற்காக சுதந்திரம் கேட்கிறார்கள் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை. என் செல்ல மகன் பாரூக் இறந்த பிறகு எனக்கு எல்லாம் தெளிவாக புரிகிறது.எங்களுக்கு தேவை துப்பாக்கிகள் அல்ல; சுதந்திரம்! என்கிறார் மைசூன்.இவர் மட்டும் அல்ல; எந்தவித இயக்கப் பின்னணியும் இல்லாத சாதாரண காஷ்மீர் பெண்கள் இன்று போராட்டக்களத்தில் நிற்கிறார்கள்.

ராணுவத்தின் துப்பாகிகளை எதிர்த்து 15 வயது சிறுவன் கல் எறிகிறான்.ஒரு முஸ்லிம் பெண் கையில், கற்களைப் பொருக்கி இளைஞர்களுக்குத் தருகிறார்.காஷ்மிரின் போராட்ட வரலாற்றில் இத்தகைய காட்சிகள் புத்தம் புதியவை .பற்றி எரியும் காஸ்மீரில் இந்திய ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில்   கடந்த 60 நாட்களில் 53 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனாலும் காஷ்மீரில் இன்னும் போராட்டம் தொடர்கிறது." இத்தனை நாட்கள் இயக்கங்கள் துப்பாக்கியால் " சுட்டபோது அவற்றை பாகிஸ்தான் தருகிறது என்றார்கள்.இப்போது அந்த மக்கள் கற்களைக் கொண்டு போராடுகின்றனர். "கற்களையுமா பாகிஸ்தான் "  தருகிறது என்று காட்டமாகக் கேட்கிறார் காஷ்மீர் பிரச்சனையில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் பேராசிரியர் கிலானி.


ஐந்து லட்சம் ராணுவத்துருப்புகள்,பல்லாயிரகணக்கான துணை ராணுவப் படைகள்,உள்ளூர் போலீஸ்,என காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் ராணுவத்தால் நிரப்பப்பட்டு இருக்கிறது. ஏன் ? என்ன  நடக்கிறது காஷ்மீரில்?. அதற்கு காஷ்மிரின் வரலாறு கொஞ்சமாவது தெரிந்து கொள்ளவேண்டும்.  

காஷ்மீரில்  நடப்பது வெறுமனே இந்து-முஸ்லிம் பிரச்சினையோ,
இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கிடையான இடமபிடிக்கும்  போட்டியோ அல்ல; அதன் ஆணி வேர் இந்திய பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. 
காஷ்மீரில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் இருந்தபோதிலும்,
சுதந்திரத்தின் போது" ஹரிசிங்"  என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார். அவர் இந்தியாவுடனோ,அல்லது பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்துவிட்டார்.
அந்த நிலையில் பாகிஸ்தானின் " பஸ்தூன் " பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர். அதை சமாளிக்க முடியாத ஹரிசிங் ,நேருவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இனைத்தார். இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவிற்கு வந்தது. பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில்  370 -வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு " சுயாட்சி " அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த இணைப்பில் முக்கியமான அம்சம் என்பது " காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தவேண்டும் " என்பதுதான்.


ஆனால் இன்று வரை அப்படி ஓர் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்லை. நேருவும்,அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை.காஷ்மீரில் சின்ன சின்னதாக இயக்கங்கள் தோன்றி " சுதந்திர காஷ்மீர் " கேட்டு ஜனநாயக வழியில் போராடத்தொடங்கினார்கள்.50  ஆண்டு ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று  1980 -களின் பிற்பகுதியில் போராட்டம் ஆயுத வடிவம் எடுத்தது. 

காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவிற்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும்,அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலும்,தந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான்.அதன்பிறகு போராட்டம்,தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது. அந்த அழகிய பள்ளத்தாக்கு படிப்படியாக " ரத்தப் " பிரதேசம் ஆன கதை இதுதான்.

காஷ்மீருக்கு நேரடியாகச் சென்று வந்தவரும்,மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளருமான " கோ.சுகுமாரனிடம் " பேசியபோது 
" இந்தியாவின் உச்சியில் இருக்கும் காஷ்மீரின் மேல் பகுதியை " பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் " என்று இந்தியா சொல்கிறது. கீழ் பகுதியை " இந்தியா ஆக்கிரமித்த காஷ்மீர் " என்று பாகிஸ்தான் சொல்கிறது. ஆனால் உண்மையில் இரு நாடுகளும் சேர்ந்து எங்களை ஆக்கிரமித்து இருகின்றனர்"  என்பதே பூர்விக காஷ்மீரிகளின் முழக்கம்.


பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை.இரு தரப்பும் முஸ்லிம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது. பாகிஸ்தானின் முஸ்லிம்கள் 
" சன்னி "  மற்றும் " ஷியா " பிரிவைச் சேர்ந்தவர்கள்.காஷ்மீர் முஸ்லிம்கள்
" சூபி " வகையைச் சேர்ந்தவர்கள்.தங்களை தனித்த தேசிய இனம் என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் " சுதந்திர காஷ்மீர் " கேட்கின்றனர். இதை இந்தியாவோ, பாகிஸ்தானோ இதுவரை கண்டுகொள்ளவில்லை.

இன்னும் வரும் ...................
தொகுப்பு: நன்றி : ஆனந்தவிகடன்.

8 கருத்துகள்:

சிநேகிதன் அக்பர் சொன்னது…

எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து தீர்வு கிடைக்காத விசயங்களில் இதுவும் ஒன்று. என்னத்த சொல்ல...

Mohamed Faaique சொன்னது…

இதை எழுதியதற்கு நன்றி சார். நானும் இதை யாரும் எழுத மாட்டர்கள ? என்று எண்ணி இருந்தேன். தன இனம் என்றால் பக்கத்து நாட்டில் உள்ளவர்களுக்கும் போராட்டம் நடத்தும் நம் மக்கள் அடுத்த இனம் சொந்த நாட்டு மக்கள் அழிந்தாலும் கவலைப்படாதது கைசேதமே..

Unknown சொன்னது…

காஷ்மீர் மக்களின் போராட்டம் நிச்சயம் ஒருநாள் வெல்லும்.அவர்களும் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி @ அக்பர் .

Unknown சொன்னது…

வாருங்கள் faaiqyue .தங்களின் வேதனையின் வெளிப்பாடு நன்றாக தெரிகிறது. எல்லா செயல்களிலும் ஒரு முடிவு இருக்கும்.
காஷ்மீர் மக்களின் வாழ்க்கையிலும் சுதந்திரம் பூக்கும் நாட்கள் விரைவில் வரும்......

kumar சொன்னது…

அடக்கி ஒடுக்க பட்ட தமிழ் இனம் எப்போதும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கும்...

Unknown சொன்னது…

தாங்கள் சொல்வது 100 % உண்மை குமார்.
தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ராஜவம்சம் சொன்னது…

சென்ரல்லையும் சரி பாகிஸ்தானிலும் சரி அரசியல் காஷ்மீரை நம்பித்தான்.

Unknown சொன்னது…

காஷ்மீர் பிரச்சினைதான் இந்திய,பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு தங்கள் அரசியல் வாழ்கையை ஓட்டுவதற்கு பயன்படுகிறது.
இந்த இரு நாடுகளுக்கும் மத்தியில் அகப்பட்டு பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.
நிச்சயம் அந்த காஷ்மீர் மக்களுக்கு ஒரு நாள் சுதந்திரம் கிடைத்தே தீரும்.

வாருங்கள் ராஜவம்சம்.
தங்களின் வருகைக்கும்,கருத்து பகிர்வுக்கும் நன்றி.