செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

கண்ணதாசன்: மலரும் நினைவுகள்

 
காட்டுக்கு ராஜா சிங்கம்,கவிதைக்கு ராஜா கண்ணதாசன்! பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது. " நான் நிரந்தரமானவன்,அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்று கண்ணதாசனே அறிவித்தார். கவிரசத்தின் சில துளிகள்.
     
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல," அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும்,வர்ணிக்கப்பட்டதைப் படிபதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்" என்பது அவரே அளித்த விளக்கம்.பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
    
சிறுவயதில் இன்னொரு குடும்பத்துக்கு  7,000 ரூபாயிக்கு  தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன்.அந்த வீட்டில் அவர் பெயர்:நாராயணன் 
  
"கலங்காதிரு மனமே,உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே " 
என்று "கன்னியின் காதலியில்"எழுதியது கண்ணதாசனின் முதல் பாட்டு.
மூன்றாம் பிறையில் வந்த " கண்ணே கலைமானே " கவிஞரின் கடைசிப் பாட்டு.
     
எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார்.திடீரென்று கழுத்து,கைகளில் நகைகள் மின்னும்.திடீரென்று காணாமல் போய்விடும்.
காரணம் கேட்டால் " பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கிறது " என்று அவை அடகு வைக்கப்பட்டு இருப்பதை சொல்வார்.
    
மைலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல்,அபிராமபுரம் கவிதா ஹோட்டல்,இரண்டும் கவிஞருக்குப் பிடித்தஇடங்கள.பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான்.வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.
    
வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு  அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார்.நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும்.கவிதை வரிகள் சொல்லுபோது செருப்பு அணிய மாட்டார்.
    
கொஞ்சம் மது அருந்திவிட்டால்,என் சிந்தனைகள் சுருசுருப்படைவது வழக்கம்.அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பிப் பார்க்க மாட்டேன் என்பது கவிஞரின் வாக்குமூலம்.
  

"முத்தான முத்தல்லவோ " பாட்டைத்தான் மிக குறைவான நேரத்தில் 
(10 நிமிடத்தில் ) எழுதி முடித்தார்.அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது " நெஞ்சம் மறப்பதில்லை ... அது நினைவை இழப்பதில்லை "  என்ற பாடல்தான்.
    
கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல் " திருப்பாற்கடலில் பள்ளிகொண்டாயே  ஸ்ரீமன் நாராயணா". தனக்குப் பிடித்த பாடல்களாக " என்னடா பொல்லாத வாழ்க்கை", " சம்சாரம் என்பது வீணை " ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.
    
கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்ப ராமாயணம்.நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்துதான் என்பார்.
    
காமராஜர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார்.
சில காட்சிகளையும் எடுத்தார்.ஆனால் முற்றுப்பெறவில்லை.
      
ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால்,சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்றிருக்கிறார்.
பிற்காலத்தில் " பராசக்தி, ரத்தத்திலகம்,கறுப்புப் பணம்,சூரியகாந்தி " உள்ளிட்ட படங்களில் நடித்துக் இருக்கிறார்.
      
முதல் மனைவி பெயர் பொன்னம்மா.அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தலா ஏழு குழந்தைகள். 50-வது  வயதில் வள்ளியம்மையை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர்தான் " விசாலி ".மொத்தம்  15 பிள்ளைகள்.
      
படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர்.வெளி நாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய்,அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கி விட்டுத்தான் செல்வார்.
      
கண்ணதாசன் இறந்து விட்டார் என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி,வீடு தேடித் பலரும் அழுது கூடிவிட,பிறகு இவரே முன்னாள் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.
       
உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன?என்று கேட்டபோது அவர் சொன்ன பதில்: புத்தகங்களைப் பின்பற்றுங்கள்,அதன் ஆசிரியரை பின்ப்பற்றாதீர்கள்.
      
தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுய வரலாறு எழுதியவர். " வனவாசம்,மனவாசம், இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள் என்றார்.
      
காமராஜர்,அண்ணா,எம்.ஜி.ஆர்,கருணாநிதி, ஆகிய நான்குப் பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும்,திட்டியவரும் இவரே. ஈ.வெ.கி.சம்பத்,ஜெயகாந்தன், சோ,பழ.நெடுமாறன்,ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள்.கவிஞரின் தோரனையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும் எனப்பார் ஜெயகாந்தன்.
      
திருமகள்,திரையொலி,மேதாவி, சண்டமாருதம்,ஆகியவை இவர் வேலைப் பார்த்த பத்திரிகைகள்."தென்றல்,தென்றல் திரை,முல்லை,கடிதம் 
கண்ணதாசன்",ஆகியவை இவரே நடத்தியவை.
      
திருக்கொச்றியூர் (Thirukostiyur) தொகுதியில் முதல் தடவை தேர்தலில் நின்றார்.தோற்றார்.அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.இது எனக்கு சரிவராது என்றார்.
     
"குடிப்பதும்,தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும்,ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர,அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை" என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.
    
" பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைபோலச் செலவழித்து,பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைத்தான் என்னுடையது"என்பது அவர் அளித்த வாக்குமூலம்.
     
தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்.
     
அச்சம் என்பது மடமையடா,சரவணப் பொய்கையில் நீராடி, மலர்ந்தும் 
மலராத,....போனால் போகட்டும் போடா,கொடிஅசைந்ததும் காற்று வந்ததா, உன்னை சொல்லிக்  குற்றமில்லை, கடவுள் மனிதனாக பிறக்க  வேண்டும், எங்கிருந்தாலும் வாழ்க,அதோ அந்தப்  பறவைப்போல வாழ வேண்டும்,சட்டி சுட்டதடா,கை விட்டதடா, ஆகிய  10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுதும் இருக்கும் காவியப் பாடல்கள்.
     
        இறப்புக்கு 11  ஆண்டுகள் முன்பே தனக்குத்தானே இரங்கற்பா                             எழுதிவைத்துக்கொண்டார்.அதன் கடைசி வரி இப்படி முடியும் 
    " ஏற்றிய செந்தீயே நீ எரிவதிலும் 
      அவன் பாட்டை எழுந்து பாடு "!
     

நன்றி:
விகடன்

5 கருத்துகள்:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நினைவு கண்ணதாசன் .

எவ்வளவு அர்த்தமுள்ள பாடல்களை பாடியிருக்கிறாரே , அசத்தல்

கண்ணதாசனை பத்திய தகவல்கள் அருமை .

goma சொன்னது…

புத்தகங்களைப் பின்பற்றுங்கள்,அதன் ஆசிரியரை பின்ப்பற்றாதீர்கள்.
கண்ணதாசன் சரியாகச் சொன்னார்.

இரண்டு மனைவிகள்,,தலா இத்தனை குழந்தைகள் ...என்ற வாக்கியத்தில் ‘தலா’என்ற வார்த்தை கொஞ்சம் ,இதம் குறைந்து தெரிகிறது ...[அது ஜடப் பொருளுக்கே உரிய வார்த்தை என்பது என் கருத்து]

goma சொன்னது…

மலரும் நினைவுகள்...பாடல்கள் பலருக்கு மலரும் நினைவுகளாகியிருக்கும்.அருமையான தொகுப்பு

சிநேகிதன் அக்பர் சொன்னது…

அருமையான கட்டுரை.

கண்ணதாசனைப்பற்றிய அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இனியன் பாலாஜி சொன்னது…

மிகவும் அற்புதமான கட்டுரை . யாருக்குத்தான் பிடிக்காது கண்ணதாசனை.

"சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ
தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ "
என்ற இவர் எழுதிய பாடலை
நேருவின் மறைவின் போது
திரு சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் அந்த்க் கால‌
கிராம போனின் இசைதட்டில் கேட்டிருக்கிறேன்.

நான் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது இந்த‌ ஒரே ஒரு மனிதருக்கு
மட்டும்தான்.
அது அவரது அழகான தமிழிற்கு


நல்ல நினைவுகளை என்னுள் மலர
வைத்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனியன் பாலாஜி