மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி-4 )


தொடர்ச்சி...................

மருத்துவமனைகள் தவிர தனிப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் தமிழகத்தில் வெற்றிகரமாக ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கும் லைப்செல் நிறுவனம் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.பிரசவத்தின் போது அப்புறப்படுத்தப்படும் தொப்புள் கொடி ரத்த திசுக்களை எடுத்து பல ஆண்டுகள் பதப்படுத்தி வைத்து,தீவிர நோய்த் தாக்குதல் ஏற்படும்போது அதனை மருந்தாக பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. 

இத்துறையில் நாட்டின் ஒரேயொரு நிறுவனமும் இதுதான். அண்மையில் குறைந்த செலவில் இம்மதிரிகளைப் பாதுகாக்க ஒரு எளிய கட்டண திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்தது. " பெரும்பாலான மருத்துவமனைகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன

.நாங்கள் ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக இருப்பதால் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மருந்து தயாரிப்பு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடிகிறது " என்கிறார் ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவமனையின் சி.இ.ஓ. மகேஷ் வக்கமுடி.

வியாழன், 25 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 3)



தொடர்ச்சி.............................

சிறந்த தொழில் நுட்பத்தைத் தமதாக்கிக் கொள்வதிலும் புதுமையான ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலும் தமிழக மருத்துவமனைகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மருத்துவமனைகளில் சாவித் துவாரம் அளவுக்கு மட்டும் உடலில் துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது அது அடுத்த கட்டத்தையும் தாண்டிவிட்டது. தற்போது ஊசி முனையளவு துளையிட்டு அதில் நுண்ணிய குழாய்களைச் செலுத்தி ரத்த குழாய் அடைப்பு முதல் வீக்கம் வரை அனைத்தையும் சரி செய்யும் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது.இதனால் உடலில் தேவை அற்ற வடுக்கள் ஏற்படாது என்பதுடன் ரத்த சேதாரத்திற்கும் வழியின்றி போகிறது.

பெருங்குடியில் இயங்கி வரும் லைப்லைன் மருத்துவமனை உடற்பருமனைக் குறைப்பதற்காக ஒரு சிறப்பு அறுவை சிகிச்சையினை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.இந்த சிகிச்சை செய்யப்பட்டவர்கள் சிறிதளவு உணவை உண்டாலே முழு நிறைவு ஏற்பட்டு உடலில் உள்ள கொழுப்பு கரைய தொடங்கும்.இதில் 100 கிலோ வரை உடல் எடை குறைக்கப்பட்டவர்கள்  கூட இருக்கிறார்கள்.

புதன், 24 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 2)






தொடர்ச்சி ...................

தமிழக தனியார் மருத்துவ சேவைத்துறையின் வரலாறு என்பது வெளிநாட்டு மிசனரிகள்,உள்ளூர் தொண்டு நிறுவனங்கள்,தனிநபர்களின் பங்களிப்போடு ஆங்கிலேயரியின் ஆட்சியிலேயே துவங்கியது.வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவ மனை,திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள சி.எப்.மருத்துவமனை,சேலம் மாவட்டம் டேனிஷ் பேட்டையில் உள்ள டேனிஷ் மிசன் மருத்துவமனை,

திருச்சியில் உள்ள (குழந்தைகளுக்கான ) அமெரிக்கன் ஆஸ்பத்திரி,போன்றவை குறைவான கட்டணத்தில் நெடுங்காலமாக மருத்துவ சேவை ஆற்றி வருகின்றன.அதனையடுத்து தனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள்,பல்வேறு அறக்கட்டளைகள் ஆங்காங்கே மருத்துவமனைகள் துவக்கி, மருத்துவ சேவைகளை பரவலாக வழங்க ஆரம்பித்தன.

மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை அதற்கு ஒரு முக்கிய எடுத்துகாட்டு.இது தவிர இந்திய மருத்துவ முறைகளான சித்த வைத்தியம்,ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனானி,போன்றவையும் கிராமப்புற மக்களின் உடல் நலனில் பெரிதும் பங்காற்றி வந்திருக்கின்றன.இன்றும் அது தொடர்கிறது.

இது போன்ற அரசு,தனியார்,தொண்டு நிறுவனங்கள்,பரம்பரை வைத்தியர்கள் ஆகியோரின் கூட்டு சேவை காரணமாக தமிழகத்தில் கொள்ளை நோய்கள்,பேறுகால உயிர் இழப்புகள் போன்றவை பெருமளவு தவிர்க்கப்பட்டு வந்திருக்கின்றன.

இதுவெல்லாம்,ஒருபுறமிருக்க சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஓசையின்றி ஒரு மருத்துவப் புரட்சிக் காண வித்து ஊன்றப்பட்டது.நாட்டின் பெருமை மிகு கல்வி நிறுனங்களும்,தமிழகத்தின் சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் படித்து முடித்து வெளிவந்த பட்டதாரிகளும் சொந்தமாக மருத்துவமனைகளை உருவாக்கி உழைப்பை செலுத்த ஆரம்பித்தார்கள்.

அதற்கடுத்து நடந்ததெல்லாம் அதிசயம்தான். 1983 ல் சென்னையில் டாக்டர் பிரதாப் ரெட்டியால் ஆரம்பிக்கப்பட்ட " அப்பல்லோ " மருத்துவமனை இன்று ஆலமரமாக விழுது விட்டு நாட்டின் மிகப்பெரிய மருத்துவ குழுமமாக உருவாகியிருக்கிறது. 1985 ல் ராமசாமி உடையாரால் துவக்கப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைகழகத்தின் மருத்துவமனை இன்று நாட்டின் முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்று. 20 கும் மேற்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் தொலை மருத்துவம் மூலம் இலவச சேவைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகிறது. 

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

மருத்துவத்தின் தலைவாசல் தமிழகம் (பகுதி- 1)

 
  
மருத்துவ துறையில் தமிழகம் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சியினை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சர்வேதேச தரத்திலான வசதிகளாலும்,மாநில அரசின் பொது சுகாதார கொள்கையினாலும் தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைவாசலாகி வருகிறது.இதனால் வெளிநாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் மருத்துவ சேவையை நாடி தமிழம் வருகிறார்கள். முதலீடுகளும் வந்து குவிகின்றன.

நீங்கள் எப்போதாவது தமிழகத்தில் வாழ்வது குறித்து சலித்துக்கொண்டதுண்டா? மக்கள் நெருக்கடியும்,வேலையில்லாத் திண்டாட்டமும்,சமுக பிரச்சிசைனகளும், அடிப்படை வசதிகளற்ற கிராமங்களும்,உங்களை அவ்வாறு நினைக்க தூண்டி இருக்கின்றனவா? மேலைநாடுகளோடு ஒப்பிட்டு பெருமூச்செரிந்திருகிரீர்களா? நல்லது. அப்படியே அந்த சித்திரத்தை அழித்துவிடுங்கள்.இன்று நீங்கள் காணும் தமிழகம் தலை தாழ்ந்த தமிழகம் அல்ல,தலை நிமிர்ந்த தமிழகம்.

கல்வி,வாகன உற்பத்தி ஆகியவற்றுக்கு இணையாக மருத்துவத்திலும் மின்னல் வேகத்தில் வளர்ந்துவருகிறது தமிழ் கூறும் நல்லுலகம்.உலகின் வேறெந்த முன்னேறிய நாட்டைக்காட்டிலும் தமிழகத்தில் மருத்துவ துறை காட்டிவரும் வளர்ச்சி வேகம் அபரிமிதமானது.

அதற்கு பல்வேறு கோணங்களும்,பல்வேறு காரணங்களும்  இருக்கின்றன. 1991-92 ல் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின் அளவு ரூ. 6250. கோடி.அதில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு ரூ.411. கோடி.ஆனால்  2009-2010 ல் மாநில அரசின் பட்ஜெட் ரூ. 59,295 கோடி. இதில் சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு ரூ.3,390.69 கோடி. அதாவது மொத்த பட்ஜெட்டில் இது 5.37 சதவீதம்.

நாட்டின் மிக வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் பொது சுகாதாரத்திற்கு அளிக்கப்படும் ஒதுக்கீடு அதிகரித்துவருவது மாற்றத்தின் குறியீடு மட்டுமல்ல,முன்னேற்றத்தின் குறியீடும்தான். மருத்துவ துறையைப் பொறுத்தவரை நாட்டின் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு தமிழகத்திற்கு எப்போதும் உண்டு.

திங்கள், 4 ஜனவரி, 2010

மருத்துவம் புனிதமானது! மருத்துவரின் மனசாட்சி ?





 

டாக்டர்களில் பலருக்கு மருந்து கடைகள், பரிசோதனைக் கூடங்கள், ஸ்கேன் சென்டர்கள் ஆகியவற்றுடன் நல்ல உறவு இருக்கிறது. அது பரஸ்பரம் பலனுள்ளது என்பது மக்களுக்கு தெரியும். 

மருந்து கம்பெனிகளுடன் டாக்டர்கள் வைத்திருக்கும் தொடர்பு பற்றி அத்தனை பரவலாக தெரியாது. அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பவராகவும், அதிக விலையுள்ள மருந்து மாத்திரைகளை சிபாரிசு செய்பவராகவும் இருந்தால் அதிர்ஷ்டம் அழைப்பு மணி அடிக்கும். 

மாதத்தில் பாதி நாள் சர்வதேச மருத்துவ கருத்தரங்கம் என்ற பெயரில் உலகை சுற்றி பறக்கலாம். ஆடம்பர ஓட்டல்கள், உல்லாச விடுதிகளில் தங்கி அனுபவிக்கலாம். மொத்த செலவையும் மருந்து கம்பெனி ஏற்றுக் கொள்ளும். 

இதெல்லாம் வேண்டாம் என்பவர்கள் சொகுசு கார் போன்ற அன்பளிப்புகளை பெற்றுக் கொள்ளலாம். இதற்கென கோடி கோடியாக செலவிட மருந்து கம்பெனிகள் தயங்குவதில்லை. எல்லாம் நோயாளிகள் மூலம் திரும்ப கிடைத்து விடுகிறது.
 

நோயை விரட்டுவதற்கு பதில் நோயாளியை நிரந்தர வாடிக்கையாளராக மாற்றுவது இந்த ஏற்பாடு. புனிதமானது என்று சொல்லப்படும் மருத்துவ தொழிலுக்கு பெரும் களங்கமாக விளங்கும் உறவு இது. இதற்கு முடிவு கட்ட இந்திய மருத்துவ கவுன்சில் முனைந்திருக்கிறது. 

டாக்டர்களோ அவர்களின் குடும்பத்தினரோ மருந்து கம்பெனிகள் தரும் பரிசு, பணம், பயணம், ஓட்டல் செலவு, அன்பளிப்பு போன்ற எதையும் ஏற்கக்கூடாது என்று கவுன்சில் கடந்த வெள்ளியன்று அறிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய நடவடிக்கை.
 


இந்த அறிவிப்பை செயல்படுத்த முடியுமா என்பது பெரிய கேள்வி. ஏனென்றால், இவை வெறும் வழிகாட்டு நெறிகள். மீறினால் தண்டனை கிடைக்கக்கூடிய விதிகள் அல்ல. டாக்டர் தொழில் நடத்துவதற்கான லைசன்சை ரத்து செய்வோம் என்று கவுன்சில் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. 
 

தவறு செய்யும் டாக்டர்கள் யார் என்று கண்காணிப்பதற்கான ஏற்பாடும் இல்லை. கவுன்சில் மீதே புகார்கள் இருக்கின்றன. கட்டமைப்பு இல்லாமல்,  கருவிகள், வசதிகள், ஆசிரியர்கள் இல்லாமல் நாடெங்கும் மருத்துவ கல்லூரிகள் முளைத்துள்ளன. 

கிளைகளை வெட்டுவதால் ஊழல் மரம் மறைந்துவிடாது. வேரில் விழ வேண்டும் கத்தி. 
நல்ல டாக்டர்கள் நமக்கென்ன வந்தது என்று ஒதுங்கி நிற்காமல் ஒத்துழைத்தால் உயிரோடு விளையாடும் சூதாட்டம் ஒழியும்.

வெள்ளி, 20 நவம்பர், 2009

மத்திய அரசின் விபரீத யோசனை

கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற மருத்துவப் படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று இந்திய மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கேதன் தேசாய் கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முடிவு போலவும், கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் கிடைக்கவில்லை என்ற அவலத்தைப் போக்கிவிட வந்த மாற்று ஏற்பாடு என்பதைப் போலவும் தோற்றம் தந்தாலும், இதனால் கிராம மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க வாய்ப்பே இல்லை. கிராமப்புறத்துக்குச் சேவை செய்ய கிராமப்புற மாணவன் மட்டுமே எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற படிப்பைப் படிக்க வேண்டும் என்றால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் பார்க்க அந்த மக்களில் ஒருவருக்கு எம்பிபிஎஸ் (டிரைபல்) என்று ஒரு மருத்துவக் கல்வியைத் தொடங்குவார்களா என்ன? கிராமப்புற மாணவனின் அறிவை கிராமத்திலேயே இருத்தி வைப்பதற்கும், நகர்ப்புற மாணவனின் அறிவை நகரத்திலேயே வளரச் செய்வதற்கும் மட்டுமே இந்தப் புதிய முறை உதவியாக அமையுமே தவிர எதிர்பார்க்கும் பயன்களை அளிக்காது. கிராமத்தில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும், சென்னை மாநகராட்சி தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும் ஒரே விதமான தகுதியை நிர்ணயிக்கும்போது, ஊரகப் பகுதியில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் சென்னையில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் ஒரு விதமான தகுதி, சம்பளத்தை நிர்ணயிக்கும்போது, மருத்துவத்தில் மட்டும் இரு வேறு தகுதிகளை- நகரம், கிராமம்- புகுத்துவதன் மூலம் அலோபதி மருத்துவத் துறையில் தேவையற்ற ஒரு பிளவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். மேலும், பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கிராம டாக்டர் என்பவர், நகர டாக்டரைவிட அனுபவம் மற்றும் அறிவில் குறைந்தவர் என்ற எண்ணத்தை அரசே உருவாக்கி, கிராம மக்களை நகரத்துக்கு வரச் செய்வதாக அமைந்துவிடும் அபாயமும் உள்ளது. கிராம மக்களே தங்கள் கிராம டாக்டர்களைப் புறக்கணிக்கவைப்பதாக அமைந்துவிடும். அத்தோடு, எம்பிபிஎஸ் (ரூரல்) படிப்பவர் மற்ற எம்பிபிஎஸ் (நகரம்) ஆக மாறவே விரும்புவார். இதற்கான சங்கம் உருவெடுக்கும்; போராட்டமும் நடக்கும். அரசு செவி மடுக்கும்போது, இவர்கள் அனைவரும் ஒரிஜினல் எம்பிபிஎஸ் ஆகிவிடுவார்கள். கேதன் தேசாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்தியாவில் மொத்தம் 299 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலும் 34,000 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடிகிறது. இதில் முதுகலை மருத்துவம் படிக்க 14,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதிலும் சிறப்பு மருத்துவம் பயில 709 இடங்களே உள்ளன. நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி அவரே தெரிவித்துள்ள புள்ளிவிவரம் இது. மருத்துவப் படிப்பில் தற்போதுள்ள இடங்களை ஆண்டுக்கு 34,000 என்பதை இரட்டிப்பாக்கினால் எம்பிபிஎஸ் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதைப் புதிய கல்லூரிகள் திறப்பதைக் காட்டிலும், தற்போதுள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கு பதிலாக 200 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதும், வகுப்புகளை காலை மாலை என்று பிரித்துக் கொண்டு பயிற்றுவிப்பதும், இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கையைப் பாகுபாடு இல்லாமல் பரவலாக்க முடியும். கிராமப் புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ள டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் சேர 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறப்பு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் கிராமங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை முறைகேடு இல்லாமல், நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்றால், நிச்சயமாகக் கிராமங்களில் டாக்டர்கள் சேவை கிடைப்பது எளிதாகிவிடும். இந்தியாவில் எம்பிபிஎஸ் படித்த மாணவர் ஒவ்வொருவரும் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுமார் ஓராண்டுக்கும் மேலாகப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் காலத்தில், இவர்களைச் சுழற்சி முறையில் கிராமங்களில் பணியாற்றச் செய்வதன் மூலமும், கிராம மருத்துவமனைகளில் எப்போதும் மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும். டாக்டர்களை கிராமங்களுக்கு அனுப்பும் சக்தி அரசுக்கு இல்லை என்பதற்காக, கிராமத்து மாணவர்களை எம்பிபிஎஸ் (ரூரல்) ஆக்குவது எந்த வகையிலும் சரியானதாக அமையாது.