இந்திரா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திரா காந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 நவம்பர், 2009

சிறப்பு கட்டுரை:இந்திரா காந்தியின் இறுதி உரை


இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் (30.10.1984) ஒரிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார். 1967 தேர்தலின்போது, ஒரிசாவில் பிரசாரம் செய்த நேரத்தில்தான் அவருக்கு எதிராக பெரும் வன்முறை மூண்டு, கல்வீச்சில் படுகாயம் அடைந்தார். அவர் மூக்கில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இம்முறை, அதே மாநிலத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்றிரவு ஒரிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திரா பேசினார். அவர் பேச்சு உணர்ச்சி மயமானதாக இருந்தது. சொற்பொழிவுப்பிரிவு செயலாளர் சாரதா பிரசாத் தயாரித்துக் கொடுத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் பேசினார்.
இந்தியாவின் பெருமை மிக்க வரலாறு சுதந்திரத்துக்காக நடைபெற்ற போராட்டம். இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் முத லியவற்றைக் குறிப் பிட்டுவிட்டு, தயாரிக்கப்பட்ட பேச்சிலிருந்து விலகி புதிதாகப் பேசத் தொடங்கினார். உணர்ச்சி மிகுதியில் குரல் தழுதழுக்க அவர் கூறினார்: "இன்று நான் இங்கிருக்கிறேன். நாளை இருப்பேனா என்று தெரியாது... என்னை சுட்டுக் கொல்ல எத்தனை முயற்சிகள் நடைபெற்றன என்பதை யாரும் அறியமாட்டார்கள். வாழ்வு, சாவு பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இரண்டும் ஒன்றுதான். நான் கணிசமான காலம் வாழ்ந்து விட்டேன். அந்தக் காலத்தை, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் செலவிட்டதில் பெருமைப்படுகிறேன். இது ஒன்றுதான் எனக்குப் பெருமையே தவிர, வேறு எதற்காகவும் நான் பெருமைப்படவில்லை. என் கடைசி மூச்சு உள்ளவரை நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவை செய்வேன்.
நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்த நாட்டை வளப்படுத்தும்; பலப்படுத்தும்." _இவ்வாறு இந்திரா காந்தி கூறினார். இந்திராவின் பேச்சை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்த மக்கள், "இந்திரா வாழ்க" என்று குரல் எழுப்பினர். அடுத்த நாள் நடக்கப்போகும் விபரீதத்தை அவர்கள் அறியவில்லை. கூட்டம் முடிந்ததும் இந்திரா காந்தி, கவர்னர் பி.என்.பாண்டேயின் இல்லத்துக்குச் சென்று தங்கினார்.
அப்போது கவர்னர், "வன்முறையால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற பொருள்பட பொதுக்கூட்டத்தில் பேசினீர்களே. ஏன்? அதைக்கேட்டு நான் ரொம்பவும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தேன்" என்று இந்திராவிடம் கூறினார். "நான் என் மனதில் பட்டதைச் சொன்னேன். என் தாத்தாவும், அம்மாவும் அணு அணுவாக இறப்பதைக் கண்ணால் கண்டு, மனம் நொந்தவள் நான். நோய்வாய்ப்பட்டு, துயரப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சாவது மிகவும் கொடுமை. ஆரோக்கியமாக இருக்கும்போது, திடீரென்று மரணத்தைத் தழுவுவதையே நான் விரும்புகிறேன்" என்று இந்திரா பதிலளித்தார்.
இந்தச் சமயத்தில், டெல்லியில் இருந்து இந்திராவுக்கு டெலிபோன் வந்தது. பிரியங்காவும், ராகுலும் வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போது கார் விபத்தில் சிக்கினார்கள் என்று, போனில் சோனியா தெரிவித்தார். பொற்கோவில் போரைத் தொடர்ந்து, தன் பேரக்குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம், அல்லது கடத்தப்படலாம் என்று இந்திரா எதிர்பார்த்தார். எனவே, விபத்தில் சிக்கினார்கள் என்ற செய்தி கேட்டு, அவர் பதற்றம் அடைந்தார். "இது சிறிய விபத்துதான். யாருக்கும் காயம் இல்லை. நன்றாக இருக்கிறார்கள். உங்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். கவலைப்படாதீர்கள். திட்டமிட்டபடி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினால் போதும்" என்று சோனியா எவ்வளவோ கூறியும், இந்திராவுக்கு நிம்மதி ஏற்படவில்லை. சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்பத் தீர்மானித்தார். அதன்படி, அவருடைய சுற்றுப்பயணம்ரத்து செய்யப்பட்டது.

இரவோடு இரவாக, விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார். நள்ளிரவுக்குப்பின் டெல்லியை அடைந்தார். நேராக காரில் வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தபோது, பேரக்குழந்தைகள் இருவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். "அவர்களுக்கு காயம் எதுவுமில்லை. கவலைப்படாதீர்கள்" என்று இந்திராவிடம் கூறினார், சோனியா. இந்திரா, தன் செயலாளர் பி.சி.அலெக்சாண்டரை அழைத்துப் பேசினார். இந்திரா மிகவும் களைப்புடன் இருப்பதைக் கண்ட அலெக்சாண்டர், பேச்சை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்பினார்.
ஆனாலும், காஷ்மீர் பற்றியும், பஞ்சாப் பற்றியும் விரிவாக விவாதித்த பிறகே, அலெக்சாண்டரை அனுப்பினார். பிறகு செயலாளர் ஆர்.கே.தவானை அழைத்தார். மறுநாள் என்னென்ன நிகழ்ச்சிகள் தனக்கு இருக்கின்றன என்று கேட்டறிந்தார். முக்கியமானவற்றைத் தவிர, மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்து விடும்படி கூறினார். நள்ளிரவு இரண்டு மணிக்குத்தான் படுக்கச்சென்றார். விடியற்காலை 4 மணிக்கு சோனியா எழுந்து பார்த்தபோது, இந்திரா ஏற்கனவே எழுந்துவிட்டதையும், குளிக்கத் தயாராகிக்கொண்டிருப்பதையும் கண்டார். அன்றைய தினம் காலையில் 9.00 மணிக் அளவில் சுட்டு கொல்லப்பட்டார் (31.10.1984)

புதன், 11 நவம்பர், 2009

வரலாற்று சம்பவம்:இந்திரா காந்தி சுட்டு கொலை


மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.
சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமாக, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.
ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.
ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31_ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.
இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன்ற செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப்_இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.

இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.
வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு "அம்மா!" என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர "ஆபரேஷன்" நடந்தது. இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்" என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.
இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. "பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்" என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர். அங்கு "இந்தியன் ஏர்லைன்ஸ்" விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள்.