கணினித் தமிழ் வளர்ச்சி நிதியாக, 70 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்,'' என்று, கான்பூர் ஐ.ஐ.டி., தலைவர் ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க துவக்கவிழா, கொடிசியா வளாகத்திலுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது. இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் சிவத்தம்பி தலைமை வகித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
கிரிகோரி ஜேம்ஸ்:- இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்; தற்போது ஹாங்காங்கில் பணியாற்றி வருகிறார். அகராதி ஆய்வில் தலை சிறந்தவர். அவரது பேச்சு: மொழி என்பது ஆன்மா பயணத்தின் பாதை. தமிழைக் காக்கவும், தமிழை வளர்க்கவும் புதிய துணிச்சலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓராயிரம், ஈராயிரம் ஆண்டுகள் பழமை கொண்ட மொழியை, மேலும் பாதுகாக்க, இந்த ஆய்வரங்கத்தின் கருத்துக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.
உல்ரிக் நிக்லாஸ்:- (ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இவர், அங்குள்ள தமிழர் ஒருவரை மணந்து, தமிழை முறையாகப் பயின்று, அங்குள்ள கலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறார்.) நீண்ட காலத்துக்குப் பின், தொன்மை வாய்ந்த தமிழ்மொழிக்கு கருணாநிதியின் முயற்சியால் செம்மொழித் தகுதி கிடைத்து இருக்கிறது. தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு பெருமை கிடைத்துள்ளது. ஜெர்மனுக்கும், தமிழகத்துக்கும் நீண்ட நெடிய தொடர்பு உள்ளது.



